மீனவர் வாக்குகளை இழக்கப் போகிறதா திமுக ?
“சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியலில் மீனவ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் ஒருவரும் இல்லை” என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் மீனவர்கள் சங்கத்தினர். ஒப்பீட்டளவில் அ.தி.மு.கவில் ராயபுரம், திருவொற்றியூர், குறிஞ்சிப்பாடி என மூன்று தொகுதிகளில் மீனவ சமுதாயத்தினர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். தி.மு.க.வில் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ. திருவொற்றியூர் சங்கரின் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இது தி.மு.க.வில் உள்ள மீனவர்களிடமே வருத்தத்தை உருவாக்கியுள்ளது. வேறு தொகுதியிலாவது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியிருக்கலாம் என ஆதங்கப்படுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில், 46 புதிய மீன் இறங்குதளங்கள், 11 புதிய மீன் பண்ணைகள், மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புயல் நேர நிவாரணங்கள், மீனவ சமூக மாணவ – மாணவியருக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதப் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், தற்போதைய தேர்தல் அறிக்கையில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் 12ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும்; மீன்பிடி குறைவுக்கால சிறப்பு நிவாரணத் தொகை 9 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்றும்; மீன்பிடி இறங்குதளங்களில் மீனவர்களின் வருவாயைப் பெருக்கும் வகையில் புதிய நவீனத் தொழில்நுட்பங்களுடன் உட்கட்டமைப்பு வசதிகள்; மீனவப் பெண்களின் வருவாயைப் பெருக்க மீன் அங்காடிகள் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
எனினும், மீனவர்களின் குரலாக சட்டமன்றத்தில் பேசுவதற்கு தி.மு.க. சார்பில் யாருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதை மீனவ சங்கங்கள் குறையாக சுட்டிக்காட்டுகின்றன.
அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம், நெய்தல் மக்கள் கட்சி, அனைத்து மீனவர்கள் சங்கம், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஆகியவை கூட்டாக, ”இந்தத் தேர்தலில் தி.மு.க.வை புறக்கணிப்போம்” என தங்களது அதிருப்தியை – எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள்.

தி.மு.க. தரப்பிலோ, ”சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்றும்; அண்மையில் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்ட கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் என்கின்றனர். மீனவர்கள் சங்கத்தினரோ, மா.சுப்பிரமணியன் கடலோர மீனவர் அல்ல; அவர் உள்ளூரில் ஏரி – குளங்களில் மீன்பிடிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர். கான்ஸ்டன்டைனுக்கு ராஜ்யசபாவில் வாய்ப்பு தந்ததுபோல, சட்டமன்றத்திற்கும் கடலோர மீனவர் ஒருவரை தி.மு.க. வேட்பாளராக நிறுத்தியிருக்க வேண்டும். அ.தி.மு.க.வில் எல்லாரும் அறிந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 3 பேர் நிற்கிறார்கள். அதுபோல, ஒரு ஆளுமை தி.மு.க.வில் இல்லையா?” என்கிறார்கள்.

மீனவர் சமுதாயத்தினர் வாக்குகள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தவரை அ.தி.மு.க.வுக்கு அதிகளவில் விழுவது வழக்கம். எனினும், சென்னையின் திருவொற்றியூர், மயிலாப்பூர் போன்ற தொகுதிகளிலும் பூம்புகார், ராமநாதபுரம் போன்ற கடலோரப் பகுதிகளிலும் தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும். கடந்த 2021 தேர்தலில் தி.மு.க.வுக்கு பரவலான அளவில் மீனவ சமுதாயத்து வாக்குகள் கிடைத்தன.
தற்போது, அ.தி.மு.க ஆதரவு மீனவர்களின் வாக்குகளும், அந்த சமூகத்தில் உள்ள இளம் வாக்காளர்களும் விஜய்யின் த.வெ.க.வை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளனர். கடந்த முறை தனக்கு விழுந்த மீனவ சமுதாய வாக்குகளை இந்த முறை தக்க வைக்கவும், மீனவ சமுதாய அமைப்புகளின் நேரடி எதிர்ப்பை சரிப்படுத்தவும், தி.மு.க.விடம் தற்போது என்ன திட்டம் இருக்கிறது என்பதுதான் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது. என்ன செய்யப்போகிறது, திமுக?
— அங்குசம் தேர்தல் செய்திக்குழு








Comments are closed, but trackbacks and pingbacks are open.