சென்னை சவுகார் பேட்டையில் நகை வாங்குபவர்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பல் ! கூண்டோடு பிடித்த மதுரை போலீசார் !
”சென்னை சவுகார் பேட்டை நகை கடை பஜார் தான் எங்க HUB. நகை வாங்குபவர்களை நோட்டமிட்டு பல நாட்களாக பின்தொடர்ந்து கடத்தியதாக” கைதான குற்றவாளிகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் தங்க நகையை வாங்கி விற்பனை செய்தும், கைமாற்றிவிடுவதுமான தொழில் செய்து வருகிறார். மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் நகையாகவோ அல்லது தங்கக் கட்டிகளாகவோ சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர் கடந்த 23-ஆம் தேதி சென்னையில் 2 கிலோ தங்கத்தை வாங்கிவிட்டு, அன்று இரவே மதுரை செல்லும் பாண்டியன் எஸ்பிரஸ் ரயிலில் பயணித்து அடுத்த நாள் அதிகாலை மதுரை வந்துள்ளார்.
அப்போது, அவரை கத்தியைக் காட்டி மிரட்டிய 5 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் ஆட்கள் இல்லாத இடத்தில் வைத்து 2.054 கிலோ தங்க நகை மற்றும் பாலசுப்ரமணியனின் செல்போன், 3500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டும், காரில் ஏற்றிச்சென்ற பாலசுப்ரமணியனை நடுவழியில் இறக்கிவிட்டும் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியது.
பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியன் உடனடியாக அருகில் உள்ள ஊருக்கு சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை செய்த போது சம்பவம் நடந்த இடம் மதுரை ரயில்வே நிலையம் என்பதால், மதுரை திலகர்திடல் காவல் நிலையத்திற்கு பாலசுப்பிரமணியனை அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து, திலகர்திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், ரயில் நிலையம் மற்றும் காரில் கடத்தப்பட்ட இடம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை கைப்பற்றி 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், பாலசுப்பிரமணியன் வாக்குமூலத்தை வைத்து காரில் கடத்தப்படும் போது 5 பேர் இருந்ததாக தெரிவித்ததன் பேரில் 5 பேர் கொண்ட, கும்பல் என்பதும், CCTV காட்சிகளின் அடிப்படையிலும், கார் பதிவென் கொண்டும் விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாலசுப்பிரமணியன் சென்னை சவுகார் பேட்டையில் அடிக்கடி நகை வாங்கி வந்ததும்; அவரை போன்று மற்றொரு நகை புரோக்கர் நாகேந்திரன் @ சூர்யா மூளையாக இருந்து அவரது தூண்டுதலின் பெயரில் மற்றவர்கள் செயல்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, தனிப்படை போலீசார் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் மேலூர் அருகே சரிகுவலையப்பட்டியை சேர்ந்த பாக்கிராஜ், திருநெல்வேலியை மாவட்டம் நாங்குநேரி அருகே மேல காடுவெட்டி பகுதியை சேர்ந்த முத்து மணிகண்டன், மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் என்பதும் தெரியவந்தது. மேற்படி மூன்று பேரையும் முதற்கட்டமாக கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், சென்னையிலிருந்து பாலசுப்பிரமணியன் அடிக்கடி மதுரைக்கு தங்க நகைகளை கிலோ கணக்கில் வாங்கிச் செல்வதும், இதனை அறிந்த நாகேந்திரன் @ சூர்யா தங்களை தூண்டியதாகவும்; அதன் பேரில் கடத்தலில் ஈடுபட்டதாகவும் பிடிபட்ட மூவரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.
அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இந்த நகை விற்பனை வியாபாரியின் கடத்தலில் மூளையாக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த நகை புரோக்கர் நாகேந்திரன் @ சூர்யா மற்றும் செல்லப்பாண்டி ஆகிய இருவரும் தலைமறைவாகினர். இந்நிலையில், தனிப்படை போலீசார் கடந்த இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தில் வைத்து செல்ல பாண்டியையும், சென்னை அருகே உள்ள பம்மலில் வைத்து நாகேந்திரன் @ சூர்யாவையும் கைது செய்திருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அவர்கள் இருவரிடமிருந்து 1,47,88,800 மதிப்புள்ள 2.056 கிலோ தங்கம், 9 செல்போன், கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
நகை கொள்ளையடிக்கப்பட்ட இரண்டே நாளில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை கூண்டோடு கைது செய்து சபாஷ் வாங்கியிருக்கிறார்கள், மதுரை போலீசார் !
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.