முன்னாள் அமைச்சரை காப்பாற்றிய பெருந்தன்மை..! மிஸ்டர் ஸ்பை
முன்னாள் அமைச்சரை காப்பாற்றிய பெருந்தன்மை..! மிஸ்டர் ஸ்பை
தமிழகத்தின் மத்திய மாவட்ட மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலின் உரிமையாளர் கடன் தொல்லையால் அவதிப்பட்ட போது அப்போதைய அமைச்சரான அதிமுக பிரமுகர் பெரிய தொகை கொடுத்து தன்னுடை உறவினர் பொறுப்பில் ஹோட்டலை விலைக்கு வாங்கினார். என்றாலும் ஹோட்டலை தன் பெயருக்கு மாற்றாமல் பழைய உரிமையாளரின் பெயரிலேயே நடத்துமாறு கூறிவிட்டார். அந்த ஹோட்டலை ‘அமைச்சரின் ஹோட்டல்’ என்றே அதிமுகவினர் கூறி வந்தனர்.
அதிமுக ஆட்சி போய் திமுக ஆட்சி வந்த போது, “எனக்கு ஹோட்டல் வேண்டாம் பணத்தை திருப்பி கொடு” என கேட்டிருக்கிறார் அந்த முன்னாள் அமைச்சர். ஆனால் அந்த உரிமையாளரோ, “உங்களிடம் வாங்கிய பணத்தின் மூலம் என் கடனை அடைத்துவிட்டேன். என்னிடம் பணம் எதுவும் இப்போது இல்லை” எனக் கூறிவிட்டார். அந்த முன்னாள் அமைச்சரும், “சரிஞ் பணம் கிடைத்த உடன் கொடு.. என்று கூறி அமைதியாகிவிட்டார்.
இந்நிலையில் அந்த ஹோட்டலில் சமீபத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அந்த முன்னாள் அமைச்சரை குறி வைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டது. ரெய்டில் ஹோட்டல் டாக்குமெண்ட் அனைத்தும் பழைய உரிமையாளரின் பெயரிலேயே இருந்துள்ளது.
அந்த உரிமையாளரும், “நான் யாருக்கும் விற்கவில்லை” என ரெய்டு வந்த அதிகாரிகளிடம் கூறிவிட்டார். “சரி பணம் கிடைத்த உடன் கொடு..” என்ற கூறிய அந்த முன்னாள் அமைச்சரின் பெருந்தன்மை தான் இப்போது அவரை காப்பாற்றியுள்ளது என்று பெருமூச்சு விடுகின்றனர் அவரின் உறவினர்களும், ஆதரவாளர்களும்