கோடை வெய்யிலில் கிரிவலம் – தேவை எச்சரிக்கை…!
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா பக்தர்கள் முன்பெல்லாம் திருவண்ணாமலை நகரத்தைப்பற்றி தெரியாமல் வந்து, ஆட்டோக்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், கடைக்காரர்களின் மோசடியை உணர்ந்து இப்போது தெளிவாகிவிட்டார்கள். மாலை அல்லது இரவு நேரத்தில் திருவண்ணாமலை வருவது உடைமைகளை வைத்துவிட்டு இரவே கிரிவலம் வருவது விடியற்காலம் அண்ணாமலையாரை தரிசிப்பது அல்லது விடிற்காலம் அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் வருவது முடிந்ததும் மாலை தங்களது ஊருக்கு புறப்படுவதுயென பக்காவான ப்ளானோடு வருகிறார்கள்.
கோடைக்காலம் என்பதால் 14.5கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப்பாதையை விடியற்காலையில் கிரிவலம் வரலாம் என தொடங்கி நடப்பவர்கள் அபாயமண்டபம் தாண்டும்போது நொந்துப்போகிறார்கள், ஈசான்ய மைதானம் வரும்போது காய்ந்த சருகாகிவிடுகிறார்கள். காலை 8 மணிக்கெல்லாமே தார்சாலையில் நடக்கமுடியாத அளவுக்கு சுடும், கால் பாதங்கள் எரியும் உடன் கால் வலியும்.
கடந்தவாரம் காந்திசிலையருகே காலை 9 மணிக்கு கிரிவலம் வந்த யுவாதியொருவர் நடக்கமுடியாமல் தவித்தார். அவரது தந்தை மகளை தாங்கிப்பிடித்தபடி இருசக்கர வாகனங்களை நோக்கி கையைக்காட்டி தெலுங்கில் உதவிக்கேட்டார். அங்கிருந்து ராஜகோபுரம் 300மீட்டர் தான் என்பதால் யாரும் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை,. நான் கூட பக்கத்தலதானே என அவர்களை கடந்துவந்து வண்டியை நிறுத்திவிட்டு நண்பருக்காக நின்றிருந்தபோது தான் கவனித்தேன். அந்த இளம்பெண் மிகவும் சோர்ந்துப்போய் கண்கள் கலங்கியிருந்தது, தந்தையின் முகத்தில் பதட்டம். பின்பு வண்டி எடுத்துச்சென்று அவர்களை உட்காரவைத்தும்போய் கோவில் முன்பு விட்டேன்.
நான் காலையில் வாக்கிங் செல்லும்போதும் பார்ப்பது, கிரிவலம் வருபவர்கள் நடிகை விஜி கல்யாண மண்டபம் வரும்போது பலரும் தளர்ந்துப்போய் நடப்பார்கள். ஒருநாள் 85 வயது ஒரு பாட்டியை வாக்கிங் ஸ்டிக் தந்து நடக்கவைத்து அழைத்துச்சென்றது ஒருக்குடும்பம். நான் 3 கி.மீ தூரம் போய் ரிட்டன் வரும்போது, அந்த பாட்டி 200மீட்டர் அளவே கடந்துயிருந்தார்கள்.
பக்தர்கள் நடந்துதான் கிரிவலம் வரவேண்டுமென அண்ணாமலையார் சொன்னதாக தெரியவில்லை. கடவுள் நம்பிக்கையும், வேண்டுதலும், பரிகாரமும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது. நீங்கள் சொன்னதை செய்யவில்லை என எந்த கடவுளும் நேரில் வந்து கேட்கப்போவதில்லை. அதனால் நடக்கமுடியாதவர்கள் தயவு செய்து நடக்காதீர்கள். கோவில் நிர்வாகம் சார்பில் கட்டணம்மில்லா பேருந்துகள் கிரிவலப்பாதையில் இயக்கப்படுகின்றன. வயதானவர்கள், உடல்நிலை முடியாதவர்கள் என அனைவரும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு கோடைவெய்யிலில் நடந்தேதான் போவேன் என்பது முட்டாள்தனமானது, உடல்நிலைக்கு ஆபத்தானது என உணருங்கள்.
-ராஜ்ராஜ்பிரியன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.