தங்க நகை மதிப்பீட்டில் இப்படி ஒரு மோசடியா ? அதிர்ச்சி ரிப்போர்ட்!
உங்களுடைய பழைய தங்கநகையை கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக புதிய தங்கநகை வாங்கப்போகிறீர்களா? உங்களை குறிவைத்துதான் இந்த மாபெரும் மோசடியே அரங்கேறி வருகிறது.
தங்க நகைகளை விற்கவோ அல்லது பழையதுக்கு பதில் புதிய தங்க நகைகளை வாங்குவதற்கோ முற்பட்டால், அவர்கள் முதலில் கை காட்டுவது அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு தங்க நகை டெஸ்டிங் செய்யும் நிறுவனத்தைதான். அவர்களிடம் நகையை காட்டி டெஸ்டிங் செய்து சான்று பெற்று வரச் சொல்வார்கள். அந்த சான்றில் குறிப்பிட்டுள்ள விவரங்களை வைத்துதான், தங்க நகையை ரொக்கமாக மதிப்பிடுவார்கள்.
இவ்வாறு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் டெஸ்டிங் நிறுவனங்கள் மத்திய – மாநில அரசுகளின் முறையான அனுமதியை பெற்றுத்தான் இயங்கி வருகின்றனவா? ரோட்டோரம் கத்தரிக்காய் விற்கும் வியாபாரிகளின் தராசுகளைக்கூட பறிமுதல் செய்வதைப்போல இவர்களின் மதிப்பிடும் தரத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனைக்குட்படுத்துகிறார்களா? என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.
இந்த அவலத்துக்கு எடுப்பான உதாரணமாகத்தான், திருச்சியில் அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது. “திருச்சியில் பத்துக்கும் மேற்பட்ட தங்கநகை டெஸ்டிங் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மருத்துவ தேவைக்காக நண்பரின் நகையை விற்க முயற்சித்தார். அதற்காக, டெஸ்ட் எடுத்தபோது, சந்தேகம் எழுந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று அதே டெஸ்ட் நிறுவனத்தில் அதே நகையை மீண்டும் ஒருமுறை டெஸ்ட் எடுக்க சென்றபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.
முதல்முறை எடுத்ததற்கும் தற்போது வீடியோ ஆதாரத்துடன் நான் எடுத்ததற்கும் 8 புள்ளிகள் மாறுபடுகிறது. இது கிராமுக்கு ஆயிரம் ரூபாய் வரையில் நட்டத்தை ஏற்படுத்தும். பழைய தங்க நகைகளை வாங்குபவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இவ்வாறு நகைகளின் தரத்தை குறைத்து காட்டி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். நான் இதை சரியாக கவனிக்கத்தவறியிருந்தால், இந்த ஒரு நகையில் மட்டும் ஒரு இலட்சத்தை இழந்திருப்பேன்.” என்கிறார் அரசு நாகராஜ் அதிர்ச்சி விலகாமலே.
மேலும், “ இந்த மோசடி தொடர்பாக, திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேஷனிடம் முறையிட்டபோது எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்கிறார்கள். அப்படி எனில், யார்தான் இவர்களை கண்காணிப்பது? யார் முறைப்படுத்துவது? நகை தொழிலில் முன் அனுபவம் உள்ள நானே இவர்களிடம் ஏமாந்திருக்கிறேன் எனும்போது சாமானியர்களின் நிலை எப்படி?” என கேள்வி எழுப்புகிறார், அவர்.
திருச்சியில் என்றில்லை, தமிழகம் முழுவதும் இயங்கும் தங்கநகை டெஸ்டிங் நிறுவனங்களை கண்காணித்து முறைப்படுத்துமா, தமிழக அரசு?
— அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.