அங்குசம் பார்வையில் ‘குட் டே’
தயாரிப்பு : ‘நியூ மாங்க் பிக்சர்ஸ்’ பிரித்விராஜ் ராமலிங்கம். டைரக்ஷன்: என்.அரவிந்தன். நடிகர்-நடிகைகள் : பிரித்விராஜ் ராமலிங்கம், காளிவெங்கட், ‘மைனா’ நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், வேலராமமூர்த்தி, பக்ஸ், போஸ் வெங்கட், விஜய் முருகன், ஜீவா சுப்பிரமணியம். திரைக்கதை—வசனம் : பூர்ணா மைக்கேல், கூடுதல் வசனம் & பாடல்கள்: கார்த்திக் நேத்தா, ஒளிப்பதிவு & எடிட்டிங் : மதன் குணதேவ், இசை : கோவிந்த் வசந்தா, சவுண்ட் டிசைன்: எஸ்.அழகிய கூத்தன். பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [ எய்ம் ]
மனைவி, இரண்டு பெண் குழந்தைகளை ஊரில் விட்டுவிட்டு திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறார் சாந்தகுமார்[ பிரித்விராஜ் ராமலிங்கம்]. மாச சம்பளத்தில் மனைவிக்கும் அம்மாவுக்கும் பிரித்து அனுப்ப்விட்டு, மிச்சமிருக்கும் காசில் ரூம் வாடகை, மற்ற இதர செலவுகளை சமாளிக்கிறார் சாந்தகுமார். கம்பெனியில் எல்லோருக்கும் சம்பளம் கிரெடிட்டாகிவிட, இவருக்கு மட்டும் ஆகவில்லை. கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு இளம் பெண்ணிடம் ஓனரின் சொந்தக்காரனான, மேனேஜர் சில்மிஷம் பண்ணியதை தட்டிக் கேட்டதால் தான் சம்பளம் லேட் என்பது தெரிகிறது. ஓனரின் கண்முன்பே மேனேஜர் ஓங்கி அறைந்துவிட்ட விரக்தியாலும் அன்று சாந்தகுமாரின் பிறந்த நாள் என்பதாலும் டாஸ்மாக் பாருக்குள் நுழைந்து ஃபுல் போதையாகிறான். கையில் சரக்கு பாட்டிலுடன் இரவு முழுவதும் திருப்பூர் வீதிகளில் தள்ளாடுகிறான்.
தனக்காக வாங்கிய பிறந்த நாள் கேக்கும் மண்டைக்குள் ஏறிய போதையும் வேலை செய்ய, தனது கல்லூரித் தோழி, ‘மைனா’ நந்தினியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறான் சாந்தகுமார். மைனாவின் கணவன் ஆடுகளம் முருகதாஸ் போலீஸ் ஸ்டேஷன் போக, ஒரு பாலத்தின் மீதேறி நிற்கும் சாந்தகுமாரை ஸ்டேஷனுக்குத் தூக்கி வந்து சட்டையைக் கிழித்து லாடம் கட்டுகிறார் இன்ஸ்பெக்டர் விஜய் முருகன். ஒரு குழந்தை கடத்தல் சம்பந்தமாக ஸ்டேஷனில் எல்லோரும் சென்றுவிட, இன்ஸ்பெக்டரின் யூனிஃபார்மையும் வாக்கி டாக்கியையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார் சாந்தகுமார்.
அதன் பின் ஒரு இரவில் நடக்கும் குடிகாரனின் சம்பவங்களும் அவனுக்குள் இருக்கும் மனிதநேயமும் தான் இந்த ‘குட் டே’.
ஒட்டு மொத்தப் படத்திலும் அடடே போட வைப்பவர் ஹீரோ பிரித்விராஜ் ராமலிங்கம். மூளை மழுங்கிப் போகும் அளவுக்கு குடிக்கு அடிமையானவனை அச்சுஅசல் திரையில் கொண்டு வந்துள்ளார். படம் முழுக்க ஃபுல் போதையில் தள்ளாட்டம், போலீசிடம் அலம்பல், மேனேஜர் வீட்டு முன்பாக, அவனின் மனைவி முன்பாகவே மேனேஜரின் மானத்தை வாங்குவது, சினிமா போஸ்டரில் இருக்கும் ‘96’ த்ரிஷாவுக்கு முத்தம் கொடுப்பது, மைனா நந்தினி வீட்டில் சலம்பல், சுவற்றில் மனைவி, குழந்தைகளை கரியால் வரைந்து கண்ணீர் முத்தம் கொடுப்பது, சுடுகாட்டில் எரியும் கர்ப்பிணிப்பெண்ணின் உடலைப் பார்த்துக் கதறுவது என எல்லா ஏரியாவிலும் ரவுண்ட் கட்டி அடிக்கிறார் பிரித்விராஜ் ராமலிங்கம். மிகமிக நன்றாக நடிப்புப் பயிற்சி எடுத்து, புதுமுகம் எனச் சொல்ல முடியாத அளவுக்கு புகுந்து விளையாடியுள்ளார். சபாஷ் ராமலிங்கம், சபாஷ் ராமலிங்கம். முதல் முயற்சியே திருவினையாகியுள்ளது. இது நல்லபடியாக தொடரட்டும்.
இவருக்கு அடுத்து படத்தில் ரசனைமிகு கேரக்டர் என்றால் மைனா நந்தினி தான். ”நான் சொன்னா போயிருவான்” என கணவன் ஆடுகளம் முருகதாஸிடம் சொல்லிவிட்டு, நாக்கைக் கடிக்கும் சீனில் ஜொலிக்கிறார் நந்தினி. அதே போல் இன்ஸ்பெக்டராக வரும் ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன், சப்-இன்ஸ்பெக்டராக வரும் திருநங்கை ஜீவா சுப்பிரமணியம், அரசு போக்குவரத்துக் கழக ஊழியராக போஸ் வெங்கட் என எல்லோருமே இந்த ‘குட் டே’வுக்காக குட் பெர்ஃபாமென்ஸ் பண்ணியுள்ளார்கள்.
இந்த கேரக்டர்களெல்லாம் காஸ்ட்லியான பிராண்ட் சரக்கு என்றால் ஆட்டோ டிரைவர் காளிவெங்கட் கேரக்டர் தான் மிகமிக மட்டமான 105 ரூபாய் சரக்கு மாதிரி ஆகிப்போச்சு. வேட்டி மடிப்பிலிருந்து சப்பளிஞ்ச பிளாஸ்டிக் டம்ளரை எடுத்து ஊதி.. வாட்சைக் கழட்டி வைத்து பிரித்விராஜிடம் சரக்கு வாங்கி அடிக்கும் மாடர்ன் சாமியாராக கவிஞர் கார்த்திக் நேத்தாவுக்கு ஒரு சீன் என்றாலும் டைரக்டரின் ‘டச்’ அபாரம்.
இந்த ‘குட் டே’வில் கோவிந்த் வசந்தா தான் இரண்டாவது ஹீரோ. மனதை உருக்கும் இரண்டு பாடல்களிலும் சரி, சுவற்றில் கரியால் மனைவி, குழந்தைகளை வரைந்துவிட்டு பிரித்விராஜ் கண்ணீர் உகுக்கும் காட்சியிலும் சுடுகாட்டில் இசைக்கும் காட்சியிலும் கோவிந்த் வசந்தா கொடிகட்டிப் பறந்துள்ளார். இதைவிட முக்கியம் க்ளைமாக்சில் கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் நிசப்தமாக்கி பார்வையாளனை மெளன அழுகையில் ஆழ்த்திட்டார் மனுசன். இவருக்கு அடுத்து ஒளிப்பதிவையும் எடிட்டிங்கையும் ஒரே ஆளாக தோளில் சுமந்திருக்கும் மதன் குணதேவை மனதார பாராட்டலாம்.
இடைவேளைக்குப் பின் திரைக்கதை கொஞ்சம் ‘தள்ளாட்டம்’ கண்டு நாடகத்தனம் எட்டிப் பார்த்து நமக்கு ‘கேங் ஓவர்’ ஆகிறது. ஆனால் படத்தின் ஆகப்பெரிய பாராட்டுக்குரிய சமாச்சாரம் என்னன்னா.. பிரித்விராஜின் மனைவி, குழந்தைகளைக் காட்டவில்லை, மனைவி தாலியறுக்கவில்லை, குங்குமத்தை அழிக்கவில்லை, வளையல்களை உடைக்கவில்லை, எழவு வீட்டு ஒப்பாரி இல்லை, குழந்தைகளை நடுத்தெருவில் நிறுத்தவில்லை. இப்படி பல இல்லைகள் இல்லாமல், “நான் இருபது வருசமா குடிச்சதால என்னோட ஒரு கிட்னி போச்சு. எம்பொஞ்சாதி அவளோட கிட்னியைக் கொடுத்து என் உசுரக் காப்பாத்திட்டு போய்ச் சேர்ந்துட்டா. அவ உசுர நான் சுமக்கிறதால தாண்டா நான் குடியவிட்டேன்” என சுடுகாட்டில் பிரித்வியிடம் வேலராமமூர்த்தி பேசும் டயலாக் குடி நோயாளிகளின் கன்னத்தில் பொளேரென அடிக்கும் சீன்.
க்ளைமாக்சில் ஒரு இளைஞனிடம், “விடிஞ்சு போதை தெளிஞ்சதும் ஒரு குற்ற உணர்ச்சி வரும். அந்த குற்ற உணர்ச்சியைத் தூக்கி உன் குழந்தை மேல போடு, அது வைராக்கியமா மாறும். அதுக்குப் பிறகு உனக்கு குடிக்கவே தோணாது” என பிரித்விராஜ் ராமலிங்கம் பேசும் டயலாக் குடிகாரர்களின் கன்னத்தில் விட்ட பளார். அறிமுக இயக்குனர் அரவிந்தனை இதற்காகவே ஆரத்தழுவி பாராட்டலாம்.
— மதுரை மாறன்