இதுவும் என் குழந்தை மாதிரியே இருக்கு … ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க சார்!
வணக்கம் நண்பர்களே நான் உங்கள் மரு. கு. அரவிந்தன் அது என்ன 30 முதல் 3 வரைனு தலைப்பு என்ற ஐயம் உங்களுக்கு இருக்கும்.. இப்பெரிய கட்டுரையை படித்து முடிக்கும் போது அதற்கான விடை உங்களுக்கு தெரியவரும்.
முன்னாள் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் என்றும் நினைவு கூர வேண்டியவை. அவரது சீரிய நிர்வாகத்திறன் & மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையே, என்னைப் போன்ற பலருக்கும் ஊக்கம் தருவதாக அமைந்தது.. தஞ்சையில் இருந்து டெல்லி ஜனாதிபதி மாளிகை வரை அவரை கொண்டும் சென்றது.
தஞ்சாவூர் மண்ணின் வரலாற்றில் எத்தனையோ ஆளுமைகள் தடம் பதித்திருக்கிறார்கள். அந்த வரிசையில், குறுகிய காலத்தில் அர்ப்பணிப்புடன் கூடிய மக்கள் பணியால் தஞ்சையின் இதயங்களில் இடம்பிடித்தவர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அவர்கள்.

தேர்தல் பணிகளில் மாவட்டத்தை முதன்மையாக முன்னிறுத்தியது, நெல் கொள்முதலில் சாதனை படைத்தது, கல்வியில் 12-ம் வகுப்பு 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கீழிருந்த தஞ்சையை 2 வருடத்தில் மேலே உயர்த்தி கொண்டு வந்தது, ஆதரவற்றோர் மற்றும் மனநல பாதிப்பு அடைந்தவர்களுக்கு சேவை கரம் நீட்டி சிகிச்சை அளித்தது, என எண்ணற்ற பணிகளை சப்தமே இல்லாமல் செய்து காட்டியவர் நமது மேடம்.
எல்லாம் தாண்டி, தஞ்சை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை தரம் உயர்த்தப்படுவதிலும், தாய்-சேய் நலன் பேணுவதிலும் அவர் காட்டிய அக்கறை தமிழகத்திற்கே முன்மாதிரியான நிர்வாக சான்றாகும், தஞ்சை மற்றும் சுற்றுவட்டார மாவட்டத் தாய்மார்கள் & குழந்தைகளின் உயிர்நாடியாகத் திகழ்வது இராசா மிராசுதார் மருத்துவமனை. அதன் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், ஏழை எளிய மக்களுக்குத் தடையின்றி உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதிலும், சென்ற ஆட்சியர் அவர்கள் பெரும் கவனம் செலுத்தினார்.
ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் என்பது அந்த மண்ணின் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனைப் பொறுத்தே அமையும் என்பதை ஆழமாக நம்பி, மருத்துவமனைக்கு நூறு முறைக்கு மேல் நேரில் வந்து ஆய்வு செய்தது முதல், அங்குள்ள அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தது வரை அவரது பணி ஈடு இணையற்றது.
கடந்த 2 ஆண்டுகளில் RMH யில் அவர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளை சிலவற்றை பட்டியலிடுகிறேன்..
1. தனது முதல் ஆய்வின்போதே, பல மாதங்களாய் தீர்க்க முடியாத காரணத்தினால் பூட்டிக் கிடந்த மகப்பேறு அறுவை அரங்கை கண்டு மிகவும் வேதனை அடைந்து, அதை சரி செய்ய அன்று இரவே பணிகளை ஆரம்பித்து ஒரே மாதத்தில் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
2. மகப்பேறு பிரிவில், துரிதமாகவும் சாதகமாகவும் செயல்பட ஏதுவாக CTG கருவிகள் மற்றும் ஸ்கேன் கருவிகளை, மகப்பேறு ICU விற்கு தேவையான கருவிகள் என அனைத்தும் ஒரே மாதத்திற்குள் வாங்கி தந்தார். பிரசவ கால தாய்மார்களின் நலனுக்காக 24/7 warroom வைத்து உடனுக்குடன் அவரே விவரம் கேட்டு அறிந்து, தனியார் மருத்துவமனை பிரசவங்களையும் தீவிரமாக கண்காணித்தார்.
3. பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு (NICU) ஆய்வின்போது அங்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு செல்லாமல், கிட்டத்தட்ட 4 மணி நேரம் அங்கேயே அமர்ந்து, அனைத்து துறைியினரையும் அங்கே வரவைத்து, வியுகம் அமைத்து.. தேவைப்பட்ட சாதனங்கள், இருதய ஸ்கேன், HFNC, CPAP, Monitors என அனைத்து கருவிகளும் ஒரே வாரத்தில் வந்து சேரும் வண்ணம் செயல்படுத்திக் காட்டினார்.
4. கருவிகள் மட்டும் பத்தாது, உள் கட்டமைப்பும் வேண்டுமே என்று கேட்டு , புதிதாக Out born ward, Septic ward என அனைத்தையும் ஒரே மாதத்தில் கட்டமைத்துக் கொடுத்தார். ஓடாத அனைத்து AC க்களையும் புதிதாக மாற்றினார்.
5. கருவிகள் மட்டும் கட்டமைப்புகளை வைத்து மட்டுமே, குழந்தைகளின் இறப்பு விகிதத்தை நம்மால் கட்டுக்குள் கொண்டு வர இயலாது, கூடுதல் செவிலியர்களும் வேண்டுமல்லவா, உடனே தமிழகத்தில் முன்மாதிரியாக CSR fund வாயிலாக Dist. Health Society மூலம் 20 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தினார், பணி அமர்த்தியதோடு இல்லாமல் இன்று வரை அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் ஏற்பாடு செய்து சென்று இருக்கிறார்.
6. குழந்தைகள் உள்நோயாளி பிரிவு ஒரு புறம் இருக்கிறது, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மருபுறம் இருக்கிறது, எவ்வாறு குழந்தைகளை அங்கும் இங்கும் மாற்றுகிறீர்கள் என்று கேட்டார், எங்களிடம் பதில் இல்லை.. ஒரே மாதத்தில் 3 பேட்டரி கார்களை குழந்தைகளை வெயிலிலும் மழையிலும் மாற்றாத வண்ணம் நன்கொடையாக பெற்றுத் தந்தார்.
7. பேட்டரி கார் இருக்குது சரி, அது ஓட நல்ல ரோடு இருக்குதா? என்று கேட்டார், அதற்கும் எங்களிடம் பதில் இல்லை.. ஒரே வாரத்தில் 2 வார்டுகளையும் இணைக்க ஒரு புது ரோடு போட்டுக் கொடுத்தார்.
8. PG மருத்துவர்கள் எல்லாம் RMH பணிபுரிகிறார்கள், ஆனால் அவர்களின் விடுதிTMC யில் இருக்குதே? நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார், அதற்கும் பதில் இல்லை.. 3 மாதத்தில் விடுதி கட்ட ஆரம்பித்து, இப்பொழுது பணி முடியும் தருவாயில் இருக்கிறது.
9. RMH இரத்த வங்கி மிகவும் பழமையாகி போன காரணத்தினால், இரத்தம் கொடுக்க , வாங்க நோயாளிகள் மருத்துவ கல்லூரிக்கு அலையும் நிலை இருந்தது, அதைக் கண்டு வேதனை அடைந்த அவர்.. இப்பொழுது RMH யில் புதிய இரத்த வங்கியை கட்ட ஆரம்பித்து அதுவும் முடிவும் தருவாயில் உள்ளது. CT Scan வசதியையும் ஏற்படுத்தி திறக்கும் தருவாயில் உள்ளது.
10. எல்லாவற்றிக்கும் மேலாக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக, பல நூறு டன் கணக்கில் வளாகத்துக்குள்ளேயே தேங்கி கிடந்த மருத்துவ கழிவுகளையும், சாதாரண கழிவுகளையும்.. யாருமே அகற்றாத நிலையில்.. அவர் பதவியில் சேர்ந்த முதல் மாதமே அகற்றி காட்டினார். குப்பைகள் அகற்றும் வரை அருவெறுப்பும் ஏதும் இன்றி தினமும் அங்கு நிற்பார்..
அனைத்தையும் அரசுக்கு எழுதுவோம், வருவது வரட்டும் என காத்திருக்காமல், நடைமுறை சாக்கு போக்கு சொல்லாமல், CSR fund, நன்கொடை என நிதி திரட்டி, ஓடி ஓடி விரைவாக செய்தார், இன்னும் சொல்ல எத்தனையோ இருக்கிறது, ஆனால் என்னால் முழுதாக எழுத முடியவில்லை .
பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்தியதன் மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதம் (IMR) பெருமளவு குறைக்கப்பட்டது. IMR யில் தடுமாறிய தஞ்சை இப்பொழுது கம்பீரமாக மேலே நிற்கிறது.
பிரசவ கால பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சைகளில் நவீன முறைகளைப் புகுத்தி, தாய்மார்களின் பாதுகாப்பை உறுதி செய்ததன் மூலம் தாய்மார்கள் இறப்பு விகிதம் (MMR) பெருமளவு குறைக்கப்பட்டது. தமிழகத்தில் முன்மாதிரியாக திகழ்கிறது.

சென்ற ஆட்சியர் அவர்களின் இந்தச் சாதனைகள் ஏதோ தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல. அவை முறையான திட்டமிடல், தொடர் கண்காணிப்பு மற்றும் களப்பணி ஆகியவற்றின் விளைவாகும். இரவு நேரம் பார்க்காமல் குழந்தைகள் நலம் மற்றும் தாய்மார்களின் நலனை வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் கலந்துரையாடி கவனிப்பார். எத்தனையோ முறை நடு இரவில் அங்கு வந்து நிற்பார், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை ஊக்குவித்து, அவர்களுக்குத் தினந்தோறும் நம்பிக்கை விதைப்பார். இதுவே அவரது நிர்வாகத் திறமைக்குச் சான்று. கிட்டத்தட்ட அவருக்கு செவிலியர்களின் பெயர் கூட அத்துபடி “மக்களின் துயரம் துடைப்பதே உண்மையான அரசுப் பணி” என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் திருமதி பிரியங்கா பங்கஜம் அவர்கள்.
அதன் விளைவாக தான் நமது தஞ்சை RMH யின் NICU வில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 30 ஆக இருந்த சிசு இறப்பு எண்ணிக்கை .. ஒரே வருடத்தில் மாதம் 3 ஆக குறைந்தது .. “”அதுதான் 30 முதல் 3 வரை””.. அதை அசராமல் செய்தவர் திருமதி பிரியங்கா பங்கஜம் IAS .
அவர் தஞ்சைக்காற்றிய பணி இன்னும் பல நூறாண்டுகள் RMH மூலம் பேசும்.. எனது ஆசை ஒன்றுதான், மேடம் பணி மாறுதலாக ஊராட்சி துறை என்னும் ஒரு துறைக்கு செல்கிறார்.. ஆனால் இத்தகைய ஒருவரை நமது அரசு சுகாதாரத் துறையில் வைத்துக் கொள்ள வேண்டும். தஞ்சாவூரில் பல நூறு குழந்தைகளின் உயிரை காப்பாற்றியது போல, தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரம் உயிர்கள் காக்கப்படலாம் . பல தாய் /சேய்கள் அதனால் பயன்பெறுவர்.
மேடம் எப்போது RMH வந்தாலும் கூறும் ஒரு வாக்கியம் ***” இதுவும் என் குழந்தை மாதிரியே இருக்கு ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க சார் ” ****
Madam அவர்கள் நல்ல ஆயுளுடன், மக்கள் பணியாற்றிட ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
— Dr. கு. அரவிந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.