பலரும், நான் உட்பட அவரை காயப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் யாரையும் எந்த வகையிலும் காயப்படுத்திடாத மகத்தான தோழர் !

0
தோழர் மகபூப் பாட்சா
தோழர் மகபூப் பாட்சா

தோழர் மஹூபூப் பாட்சா அவர்களுக்கு செவ் வணக்கம்!

https://businesstrichy.com/the-royal-mahal/

வழக்குரைஞர் மனித உரிமைப் போராளி சோகோ மற்றும் நீதிநாயகம் சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை நிறுவனர், மதுரையின் அடையாளமாக திகழும் நீதியரசர் வீ. ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தை நிறுவியவர் அன்பிற்கு இலக்கணமாக திகழ்ந்த தோழர் மஹூபூப் பாட்சா அவர்கள் 14.02.2024 அன்று தனது உலகப் பயணத்தை நிறைவு செய்துக் கொண்டார்.

மாற்றுக் கல்லீரல் பொருத்துவதற்கான அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவமனை செல்வதற்கு முன்பாக ஜனவரி 1, 2024 அன்று தோழர் மஹூபூப் பாட்சா அவர்களிடம் இருந்து ஒரு செய்தி வந்தது

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

“அன்பிற்குரிய தோழர் அவர்களுக்கு, வணக்கம். நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று ரிலா மருத்துவ மனையில் சொல்லி இருக்கிறார்கள். இன்று மதியம் மருத்துவ மனையில் சேர அறிவுறுத்தினர். இப்போது மருத்துவ மனைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறேன். எனது செயல்பாடுகள், வார்த்தைகள், நடவடிக்கைகள் தங்களைப் பாதித்திருந்தால், காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.”

நான் அதிர்ந்து போனேன்.

இந்த செய்தி வருவதற்கு 48 மணி நேரம் முன்பாக அவரை சந்தித்து உரையாடிக் கொண்டு இருந்தேன். மகிழ்ச்சி, உற்சாகம், நம்பிக்கை அனைத்தும் அந்த உரையாடலில் இருந்தது. அவ்வாறு இருக்க இப்படி ஒரு செய்தியை ஏன் அனுப்பினார். வாழ்க்கையில் பலரும், நான் உட்பட, அவரை காயப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் யாரையும் எந்த வகையிலும் காயப்படுத்தியது கிடையாது. தனது நெருக்கடியான நேரங்களில்கூட மற்றவர்களுக்கு உதவ முன்வருவர். அவருடைய முகம் எப்போதும் அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும்.

தோழர் மகபூப் பாட்சா - கலைஞருடன்
தோழர் மகபூப் பாட்சா – கலைஞருடன்

நீதிநாயகம் வீ. ஆர். கிருஷ்ணய்யர் அரங்கம் பராமரிப்பு செலவுகள் பல நெருக்கடிகளை சந்தித்த நேரத்தில்கூட மக்கள் இயக்கங்கள் தங்களின் கூட்டத்தை நடத்த மகிழ்ச்சியுடன் எந்த கட்டணமும் வசூலிக்காமல் தந்தவர். இன்று பெரும் இயக்கங்களாக வளர்ந்துள்ள பல அமைப்புகள் அவரின் இடத்தில்தான் தங்களின் அமைப்பு உருவாக்கம் குறித்த ஆலோசனை கூட்டத்தையே நடத்தி உள்ளனர் என்பது வரலாறு.‌

தமிழ்நாடு அரசு இயற்றி அனுப்பிய “மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை சட்டம் 2021” குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்கான போராட்டத்தில், 2022 ஜனவரி மாதத்தில் மதுரை வீதிகளில் இறங்கி வீடுவீடாக, கடைகடையாக, தனது உடல் நலம் குறித்து கவலைப் படாமல் துண்டறிக்கைகளை வினியோகம் செய்தார்.

சிவகங்கையில் நடந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மண்டல கருத்தரங்கின் இறுதியில் தேசியக் கல்விக் கொள்கை 2020க்கு எதிராக ஆசிரியர்கள் எழுப்பிய உணர்ச்சிகரமான முழக்கங்களைக் கேட்டு மிகவும் உற்சாகம் அடைந்தார். “நாம் வெல்லுவோம் என்ற நம்பிக்கை பிறந்திருக்குத் தோழர்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். மாநாடு நுழைவாயிலில் பதாகை அருகில் நின்று முஷ்டி உயர்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அன்றைய தினம் அவர் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. வண்டியில் ஏறும் போது கால் விரலில் இரத்தம் வந்திருந்தது. எந்த அடியும் படாமல் இரத்தம் ஏன் கசிகிறது என்று புரியவில்லை. மருத்துவரிடம் செல்லுங்கள் என்று வற்புறுத்தி கூறினோம். ஆனால் அவர் அனைவரிடமும் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் குறித்து பேசிவிட்டுதான் புறப்பட்டார்.

தோழர் மகபூப் பாட்சா
தோழர் மகபூப் பாட்சா

கொத்தடிமை தொழிலாளர் மீட்பு, குழந்தை தொழிலாளர் மீட்பு என்று தொடங்கி சமூக மாற்றத்திற்கான போராட்டக் களத்தில் முன்னனி படை வீரராக செயல்பட்டவர். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் என்றும் மக்கள் ஊழியனாக திகழ்ந்தவர் அன்புத் தோழர் மஹூபூப் பாட்சா அவர்கள்.

புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சரியான தங்கும் வசதி இல்லை. அதற்கான ஒரு கட்டடத்தை உருவாக்க வேண்டும், டயாலிசிஸ் மிகக் குறைந்த கட்டணத்தில் செய்வதற்கு வசதிகள் செய்ய வேண்டும், அரசமைப்புச் சட்டத்தை மாணவர்கள் உணர்வதற்கு, மனித உரிமை குறித்து மாணவர்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்துவதற்கு, தத்துவத்தின் அடிப்படையில் மாணவர்கள் அமைப்பாக செயலாற்ற மாணவர்களுடன் தொடர் உரையாடல் நிகழ்த்தி ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தர வேண்டும் என்று அடுத்தத் தலைமுறையை வளர்த்தெடுக்க பெரும் செயல்திட்டமும் கனவும் வைத்திருந்தார்.

கல்லீரல் பாதிப்பு தனது உயிரைப் பறிக்கும் என்று நன்கு உணர்ந்தவர், அறுவைச் சிகிச்சை செய்ய யாரையும் சிரமமப் படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து தவிர்த்து வந்தார். ஒரு பெரும் ஆசை அனைத்து நண்பர்களுக்கும் இருந்தது. அறுவை சிகிச்சை நடந்தால் மீண்டும் பழையபடி களப் பணியில் ஈடுபட முடியும்.‌ நீங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளுங்கள் என்று பலரும் கோரியதின் விளைவாக அறுவைச் சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார்.சிகிச்சை முடிந்து மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அறைக்கு வந்த உடன் மிகுந்த உற்சாகத்துடன்..

ஜனவரி 7 ஆம் தேதி, “Today evening around 5.30pm . I have shifted to general ward from ICU . Thank you very much Comrade.” ஜனவரி 11ம் தேதி “Good evening Comrade. Everything fine. Tomorrow evening Dr.Suresh V.R.L promised to come and meet me.- A.Mahaboob Batcha. இந்த இரண்டு செய்திகளும் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் தந்தது. அவரின் களப் பணிகள் மீண்டும் விரைவில் தொடங்கும் என்ற உற்சாகம் தந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

32 நாட்களில் இடி போல ஒரு செய்தி அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று. அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவமனை சென்றவரை உயிரற்ற உடலாக பார்ப்போம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சாதி ஒழிப்பிற்கான செயல்திட்டத்தை பாடத்திட்டதின் வாயிலாக வகுப்பறைச் செயல்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி தென்காசி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்ததைக் குறித்த செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து உற்சாகத்துடன் செய்தி அனுப்பினார்.

தோழர் மகபூப் பாட்சா
தோழர் மகபூப் பாட்சா

ஜனவரி 12, 2024 தோழர் மஹூபூப் பாட்சா அவர்கள் அனுப்பிய செய்தி:

“Good morning Comrade. Happy to hear the representation of Tenkasi students before the Government of Tamil Nadu and one man committee Comrade.”

அன்றைய தினமே, “நாங்கள் சாதி ஒழிப்புக்கான ஒரு உறுதிமொழியை உருவாக்கியுள்ளோம். அதையும் நாங்கள் தயாரித்துள்ள கும்மிப்பாடலையும் அனைத்துப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். முயற்சிக்கிறேன் என்று அமைச்சர் சார் சொன்னார்…” என்று உற்சாகமாகக் கூறி விடைபெற்றார்கள் மாணவிகள்.”

என்ற விகடன் செய்தியை படித்து விட்டு
படமாக பதில் அனுப்பினார்.

“🙏🏻🙏🏻🙏🏻”

இதுவே அவரிடம் இருந்து எனக்கு வந்த கடைசி செய்தி.

அவருக்கு பல வகையில் நம்பிக்கை அளித்து உறுதுணையாக இருந்த பல நண்பர்கள் அவரின் வாழ்க்கை 14.02.2024 அன்று மருத்துவமனையில் முடிவிற்கு வந்ததை ஏற்க இயலாமல் தவித்துப் போயினர்.

அவரை கண்ணின் இமைகள் போல காத்து வந்த அவரின் மனைவி, இரண்டு மகன்கள், மருமகள்கள், அவருக்கு கல்லீரல் கொடை வழங்கிய உறவினர், அவருக்கு ஆறுதலாக இருந்த மற்ற உறவினர்கள், நண்பர்கள் , அவரின் மகன்களின் நண்பர்கள், அவரின் அலுவலக பணியாளர்கள் எல்லோரும் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாத நிலை. ஒரு சகாப்தம் முடிவிற்கு வந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

தோழர் மஹூபூப் பாட்சா தனக்கென வாழாமல் சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். சாதி ஒழிப்பே சமூக மாற்றம்‌ என்பதை நன்கு உணர்ந்தவர்.‌

பன்முகத் தன்மை கொண்ட இந்தியா. அனைவரும் அவரவர்களின் தனிப்பட்ட இறை நம்பிக்கையை பின்பற்றும் முழு உரிமைப் பெற்ற இந்தியா. உலகிற்கே பன்முகத் தன்மைக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் இந்தியா. இத்தகைய பண்புகள் கொண்ட இந்திய நீடித்து நிலைக்க வேண்டும் என்பது ஒன்றே தோழர் மஹூபூப் பாட்சா அவர்களின் விருப்பம்.

“எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்ற தாயுமானவர் வரிகள் தோழர் மஹூபூப் பாட்சா அவர்களின் வாழ்க்கை.

சாலையை கடக்கும் போது வழியில் முள்ளை கண்டால் உனக்கு அடுத்து வருபவர் அதை மிதித்து காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்க அந்த முள்ளை அப்புறப்படுத்திவிட்டு செல்வது இறைவனைத் தொழுததற்கு சமம் என்ற நபிகளின் மொழியே தோழர் மஹூபூப் பாட்சா அவர்களின் வாழ்க்கைத் தத்துவம்.

அனைவரும் அனைத்து நிலையிலும் சமமாக வாழும் சமத்துவச் சமூகம் உருவாக்கும் பணியை தொடர்வது ஒன்றே தோழர் மஹூபூப் பாட்சா அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாக அமையும். தோழர் மஹூபூப் பாட்சா அவர்கள் ஒவ்வொரு முறையும் கூறும் முழக்கம் “நாம் வெல்வோம் தோழர்!”

தோழர் மகபூப் பாட்சா
தோழர் மகபூப் பாட்சா

ஆமாம் தோழர் நாம் வெல்வோம்!
மக்கள் கோரிக்கைகள் வெல்லும்!
மக்கள் போராட்டங்கள் வெல்லும்!
உங்களின் பணியை உங்களின் அடுத்த தலைமுறை தொடரும்!
ஆயிரமாயிரம் மஹூபூப் பாட்சாக்களை உருவாக்கிவிட்டு சென்றிருக்கிறீர்கள்.
சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் சமத்துவ இந்தியா மலரும்!
நீடித்து நிலைக்கும்!
லால் சலாம்!
இன்குலாப் ஜிந்தாபாத்!
தோழர் மஹூபூப் பாட்சா அவர்களுக்கு
செவ் வணக்கம்!
வீர வணக்கம்!
புரட்சி வெல்லும்!
தோழமை அன்பில்,
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.