மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 14
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 14
சிறந்த எழுத்தாளர், ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக ஆர்வலர், யோகா ஆசிரியர். மிகச் சிறந்த பேச்சாளர், அமிர்தம் 24×7 என்கிற காணொளிக் காட்சி அலைவரிசையை நடத்தும் சமூக ஊடகவியலாளர் எனப் பன்முகக் கலைஞராகச் செயல்பட்டு வருபவர்தான் நம் திருச்சி மண்ணின் ஊடகவியலாளர் விஜயகுமார் அவர்கள்.
கவிதை, கட்டுரை, உடல் நலம் காத்திடும் யோகக் கலை சார்ந்த பல அரிய நூல்களை எழுதி உள்ளார். விஜயகுமார் என்ற தமது பெயரை வெற்றிச்செல்வன் என்று தமிழ்ப் படுத்தியிருக்கிற தமிழ் ஆர்வலர். தமது இல்லத்திலேயே நூலகம் ஒன்றை அமைத்துள்ள புத்தகக் காதலர். காவலர். நமது திருச்சி மாவட்ட ஆளுமைகளை காட்சி ஊடக வழி நேர்காணல் செய்து ஒளி பரப்பியவர்.
தமது தாயார் பெயரில் ‘அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை’யினை நடத்தி வருபவர். நாள்தோறும் சுமார் 50 வறியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறவர். ஆதரவற்று அனாதையாக இறந்து உரிமை கோரப்படாத உடல்களைச் சம்பந்தப்பட்ட சரகக் காவல் நிலையக் காவலர்கள் தரும் தகவலின் அடிப்படையில் அவர்களின் முன்னிலையில் தனது மனைவி, மகளுடன் குடும்பத்தோடு சென்று தமது சொந்த நிதியில் உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வருகிறார்.
இதுவரை நூற்றுக்கணக்கான ஆதரவற்ற அனாதைப் பிரேதங்களை நல்லடக்கம் செய்துள்ளது இவரது குடும்பம். தனியொருவனாகச் செய்வது நாம் கண்டவொன்றுதான் என்றாலும் இணையர், மகள் என்று குடும்பத்தோடு செய்து வருவது போற்றுதலுக்குரியதாகும். தொண்டறம் தொடர… நாமனைவரும்அவரது நற்பணியில் பங்கு கொள்வோம். ஆதரவு தருவோம்.
-பாட்டாளி