ஈரானில் 50 டிகிரி செல்ஷியஸ் வெயில்! தலை விரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு!
மேற்காசிய நாடான ஈரானின் பல்வேறு பகுதிகளில், வெப்பநிலை 50 டிகிரி செல்ஷியசை தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் 41 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இது மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதால், ஈரானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, அந்நாட்டின் தெற்கு பகுதி கடும் வறட்சியை சந்திக்கிறது. தெஹ்ரானுக்கு நீர் வழங்கும் அணைகள், இந்த நுாற்றாண்டிலேயே முதன்முறையாக வறண்டு காணப்படுகின்றன.
இந்த நெருக்கடியை தணிக்கும் முயற்சியில் தலைநகரின் சில பகுதிகளில் தண்ணீர் வினியோகத்தை 12 முதல் 18 மணி நேரம் வரை தண்ணீர் விநியோகத்தை அரசு குறைத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க உதவும் வகையில், பயன்பாட்டை 20 சதவீதம் வரை குறைக்கும்படி ஈரான் நீர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தால், பல ஆண்டுகளாக மழைப்பொழிவு குறைந்து கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் ஈரான் முழுதும், தண்ணீரை சேமிக்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
— மு.குபேரன்