உலகை உலுக்கிய பிஞ்சுகளின் மரணம் !
திரும்பிய பக்கமெல்லாம், வான வேடிக்கை போல, ஈரானின் நூற்றுக்கும் அதிகமான நகரங்களைத் தாக்கி அழித்திருக்கிறது, இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுப்படைகள். பிப்-28 தொடங்கிய இந்தப்போரில், இதுவரை 500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டது, ஈரானில் கொந்தளிப்பை ஆழ்த்தியுள்ள நிலையில், நடுநிலை பள்ளி ஒன்றை குறிவைத்து இறங்கிய ஏவுகனை தாக்குதலில் 168 ஏதுமறிய பள்ளி பிஞ்சுகள் பலியான சம்பவம் உலகை உலுக்கியிருக்கிறது.
“ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும்; யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும்; நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” என்பதாக அமெரிக்கா வலியுறுத்தியதாகவும், அதற்கு ஈரான் உடன்பட மறுத்ததாலேயே இந்த போரை தொடுத்திருப்பதாகவும் ‘சாக்கு’கள் சொல்லப்பட்டாலும், இது இஸ்ரேல் – பாலஸ்தீன பகையின் நீட்சி. அமெரிக்காவின் துணையோடு காரியத்தை சாதித்திருக்கிறது, இஸ்ரேல்.
அமெரிக்க அதிபராக, ஓபாமா இருந்தபோதும் இதே குற்றச்சாட்டுகளும் இருந்தன. 2015 இல் ஈரான் தனது அணு உலைகளை ஐ.நா.வின் ஆய்வுக்கு உட்படுத்தியது. இதனையடுத்து, ஈரானுக்கு எதிரான பல்வேறு தடைகளை விலக்க வகை செய்யும் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தபிறகு, நிலமை தலைகீழாகியிருக்கிறது. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. இஸ்ரேலும் அதிபர் ட்ரம்ப்-ம் விரும்பும் “அமைதி”யை நிலைநாட்டுவதற்கான போரை, உலக நாடுகளின் சார்பாக தொடுத்திருக்கிறது, அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப்படைகள்.
ஈரான் என்ற ஒரு நாட்டுக்கு எதிரான போர் மட்டுமல்ல; உலக நாடுகளின் இறையாண்மைக்கு எதிரான போர் இது. ஈராக், எகிப்து, துனிசியா வரிசையில் எண்ணைய் அரசியலில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான போர். மனிதத்தை நேசிக்கும் எவர் ஒருவரையும் உலுக்கியெடுக்கிறது, போரில் கொல்லப்பட்ட அந்த பிஞ்சுகளின் இறுதிப்பயணம். துயரில் துவண்டு நிற்கும் ஈரான் உங்களிடமிருந்து கோருவது அனுதாபத்தையும் இரக்கத்தையும் மட்டுமல்ல. உலக மேலாதிக்கத்திற்கு எதிரான – நாட்டின் இறையாண்மைக்கான – உரிமைக்கான உரத்தக்குரலை!
— இளங்கதிர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.