2006ஆம் ஆண்டு மே 8ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் ஜனநாயக மக்கள் கூட்டணியும் போட்டியிட்டன. நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் முதல் முறையாக தேர்தலில் தனித்து போட்டியிட்டது.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியைப் பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்றாலும் திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால், அறுதிப்பெரும்பான்மையைப் பெறவில்லை. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் ஆதரவுடன் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மீண்டும் முதல் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். திமுக கூட்டணியில் இருந்த ஆதரவு தந்த கட்சிகள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
2004ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வைகோ தலைமையிலான மதிமுக கூட்டணியிலிருந்து விலகி, அதிமுக கூட்டணியில் இணைந்து 35 தொகுதிகளில் போட்டியிட்டது. திமுக, அதிமுக என்னும் இரு திராவிடக் கட்சிகளைக் குறைக்கூறி முதல்முறையாக அரசியல் களத்தில் இறங்கிய விஜயகாந்த்-இன் தேமுதிக 232 இடங்களில் தனிப்போட்டியிட்டு 8.45% வாக்குகளைப் பெற்றது. விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தேமுதிக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். இதனால் திமுக அறுதிப்பெரும்பான்மையை 2006 சட்டமன்றத் தேர்தலில் பெறமுடியாமல் போனது. திமுகவின் ஆட்சி 2011இல் முடியும் வரை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திமுக அரசை “மைனாரிட்டி திமுக அரசு” என்று கேலி செய்து பேசிக் கொண்டிருந்தார்.
2006 தேர்தல் முடிவுகள்
திராவிட முன்னேற்றக் கழகம் 96
அண்ணா திமுகழகம் 61
இந்திய தேசிய காங்கிரஸ் 34
பாட்டாளி மக்கள் கட்சி 18
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 9
இந்திய கம்யூனிஸ்ட் 6
மறுமலர்ச்சி தி.மு.க 6
விடுதலைச் சிறுத்தைகள் 2
தே.மு.தி.க 1
சுயேட்சை 1
2006 சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியிலும், ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியிலும், மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியிலும், ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் தொகுதியிலும், விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். விசிக சார்பில் இரவிக்குமார் மற்றும் கு.செல்வப்பெருந்தகை வெற்றி பெற்றனர்.
2006 சட்டமன்ற சபாநாயகராக திருநெல்வேலி அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுகவின் சார்பில் வெற்றி பெற்ற இரா.ஆவுடையப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார். துணை சபாநாயகராக வி.பி.துரைசாமி தேர்வு செய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார்.
2006 சட்டமன்றத் தேர்தலில்தான் மிக அதிகமான வாக்குப் பதிவாக 70.22% பதிவானது. இதில் 51% ஆண்கள் 49% பெண்கள். 18 வாக்குச் சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக மே 10ஆம் நாள் மறுவாக்குப் பதிவு நடைபெற்றது. மே 11ஆம் நாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கலைஞர் முதல் அமைச்சராக 5ஆவது முறையாக மே 13ஆம் நாள் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில், க. அன்பழகன், மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, கோ.சி. மணி, வீரபாண்டி எஸ். ஆறுமுகம், துரைமுருகன், க. பொன்முடி, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, எ.வ. வேலு, பரிதி இளம்வழுதி உள்ளிட்டோர் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர்.
(அடுத்த இதழில் 2011 தமிழ்நாடு சட்டமன்றம்)
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.