திராவிட மாடலை அச்சுறுத்தும் மகாராஷ்ட்ரா அரசியல்… அடுத்து தமிழகம்?

ர. முகமது இல்யாஸ்

0

திராவிட மாடலை அச்சுறுத்தும் மகாராஷ்ட்ரா அரசியல்… அடுத்து தமிழகம்?

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையிலான அரசு முஸ்லிம்கள் மீது நிகழ்த்திய வெறியாட்டத்தைக் கண்டித்து பாஜகவின் தேசிய தலைமையின் மத்தியிலேயே சலசலப்புகள் எழுந்தன.

அப்போதைய பிரதமர் வாஜ்பேயி மோடியிடம் `ராஜதர்மத்தை’ கடைபிடிக்குமாறு அறிவுரை கூறினார். கட்சிக்குள் கடும் எதிர்ப்புகளை மோடி எதிர்கொண்டு வந்த சூழலில் அவருக்கு ஆதரவாக நின்றது பால் தாக்கரேவின் சிவ சேனா கட்சி. தீவிர இந்துத்துவ ஆதரவாளராகத் தம்மை முன்னிறுத்திக் கொண்ட சிவ சேனா, அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை `ஹிந்து ஹிருதய சாம்ராட்’ என்று பட்டம் கொடுத்து கொண்டாடியது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது விசுவாசம் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும், இந்துத் தேசியத்திற்கும் மட்டுமே என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போதைய மகாராஷ்ட்ரா அரசியல் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது மோடி – அமித் ஷா பாஜக தலைமை.

 

- Advertisement -

- Advertisement -

1960களில் மகாராஷ்ட்ராவில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இளைஞர்கள் வேலையின்றி இருந்த சூழலில் பிறந்தது சிவ சேனா கட்சி. மராட்டியர்கள் அல்லாத பிற மொழி பேசும் உழைக்கும் மக்களை எதிர்த்து வளர்ந்தது. தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், சிவ சேனா கட்சியின் முதன்மை எதிரிகளாகக் கருதப்பட்டனர். மகாராஷ்ட்ராவின் உருவாக்கத்திலும், மும்பையை யார் சொந்த கொண்டாடுவது என்ற பிரச்னையிலும் ஏற்கனவே மராட்டி & குஜராத்தி மோதல் வெளிப்படையாக இருந்தாலும், குஜராத்தி & மார்வாடி முதலாளி வர்க்கத்தைப் பகைத்துக் கொள்ளாமல், மராட்டி அல்லாத உழைக்கும் வர்க்கங்கள் மீது வன்முறையைச் செலுத்தி வளர்ந்தது சிவ சேனா கட்சி.

மகாராஷ்ட்ராவின் கிராமப்புறங்களில் வெறும் மராட்டி மக்கள் மட்டுமே வாழும் நிலையில், அவர்களிடம் இந்த அரசியல் எடுபடாது எனத் தெரிந்து, பாஜகவுடன் இணைந்து முஸ்லிம்களை எதிரிகளாக்கி, இந்துத் தேசியம் பேசியது சிவ சேனா. பாபர் மசூதி இடிப்பு, மும்பை முஸ்லிம்கள் படுகொலை முதலான விவகாரங்களில் பாஜகவே ஒப்புக்கொள்ளாத போதும், சிவ சேனா கட்சியின் அன்றைய தலைவர் பால் தாக்கரே இறுமாப்புடன் `நாங்கள் தான் முன்னணியில் நின்றோம்’ எனப் பேசியிருக்கிறார்.

4 bismi svs

பால் தாக்கரேவின் மறைவுக்குப் பிறகு, மோடி & அமித்ஷா தலைமையிலான பாஜகவுடன் உத்தவ் தாக்கரேவுக்கு உரசல் போக்கு நிலவியிருந்தது. உத்தவ் தாக்கரேவும் தன் மகன் ஆதித்யாவை முன்னிறுத்தும் நோக்கில், வழக்கமான இந்துத்துவ நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேறி தம்மை முற்போக்கானவர்களாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கினார்.  சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை அனுமதித்தது, ஞானவாபி மசூதி விவகாரத்தைக் கண்டித்தது தொடங்கி, `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு, இந்துத்துவ ஆதரவு நடிகை கங்கனாவின் வீட்டை இடித்தது வரை ஆர்.எஸ்.எஸ் கருத்தியலுக்கு எதிராக சிவ சேனா செயல்படத் தொடங்கியது.

ஒருபக்கம் இவ்வாறு செய்துகொண்டே, மறுபக்கம் தன் மகன் ஆதித்யாவை அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பினார் உத்தவ் தாக்கரே. தான் எப்போதும் இந்துத்துவத்தின் ஆதரவாளர் என்பதைத் தனது பதவி விலகல் உரையிலும் அழுத்தம் கொடுத்து பேசியிருக்கிறார் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்ட்ராவின் தற்போதைய அரசியல் நெருக்கடி என்பது `நல்ல இந்துத்துவம் க்ஷிs கெட்ட இந்துத்துவம்’ என்ற ரீதியில் உருவாகியிருக்கிறது. ஏற்கனவே குடியரசுத் தலைவர் போட்டியில் இரண்டு ஆர்.எஸ்.எஸ்காரர்கள் போட்டியிடுவதை இயல்பான ஒன்றாக மாற்றி வைத்திருப்பதைப் போல, இந்திய அரசியல் தற்போது `இந்துத்துவம்’ என்ற ஒற்றைக் கருத்தியலின் பல்வேறு வடிவங்களாக மாறி வருகிறது. தன் சொந்தக் கட்சிக்காரர்களே தம்மை அனாதையாக விட்டுச் சென்றிருப்பதை எதிர்கொண்டு வருகிறார் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்ட்ராவின் அனுபவம் என்பது இந்தியாவின் பிற மாநிலக் கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். `இந்துத்துவம்’, `இந்து’ அடையாளம் முதலான விவகாரங்களை பாஜக எதிர்ப்பு அரசியலாக, முற்போக்காக மாற்றும் விதமாக முன்னெடுப்போருக்கு என்ன விளைவுகள் நேரும் என்பதை மகாராஷ்ட்ரா அரசியல் நெருக்கடி உணர்த்தியிருக்கிறது.  பிற கட்சிகள் தம்மை `இந்து’ எனவும், `பாஜகவை விட இந்துக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் நாங்கள் மட்டுமே’ எனவும் என்ன தான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், அது பாஜக ஆட்சியில் அமரவும், ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் மக்களிடையே வீரியமாக சென்று சேரவும், பாஜகவின் மத அரசியலுக்கு வாக்காளர்களைப் பலிகொடுக்காமல் இருக்கத் தம்மை `90 சதவிகித இந்துக்களின் கட்சி’ என இந்து மதச் சீர்திருத்தம் பேசும் கட்சிகள் தம்மை பாஜகவுக்கு மாற்றாக ஒருபோதும் முன்னிறுத்த முடியாது.

தமிழ்நாட்டிலும் இதற்கான கூறுகள் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டன. அதிமுகவின் நெருக்கடி விவகாரம் முடிவடைந்த பிறகு, அவை மேலும் வெளிப்படையாக தெரிய வரலாம். திராவிட மாடல் ஆன்மிக அரசுக்கு மகாராஷ்ட்ரா அரசியல் நெருக்கடி ஒரு எச்சரிக்கை மணியாக அமையட்டும்

நன்றி : ர. முகமது இல்யாஸ்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.