வரலாற்று சாதனை படைத்த எம்.ஜி.ஆர். ஃபார்முலா !
காலப் பெட்டகம் : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1984 !
தமிழ்நாட்டிற்கான 8ஆவது சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 24, 1984 அன்று நடைபெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றது. அதன் பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர். மூன்றாவது முறையாகத் தொடர்ந்து முதலமைச்சராகப் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரம் செய்யாமல், அமெரிக்காவில் உள்ள புரூக்ளிள் மருத்துவமனையில் நோயுற்று இருந்த நிலையில் அதிமுகவின் வெற்றி வரலாற்று சாதனையாகும். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.கருணாநிதி போட்டியிடவில்லை. சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார் .
1984ஆம் ஆண்டு அக்டேபர் 31ஆம் நாள் இந்திய தலைமை அமைச்சர் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையொட்டி புதிய தலைமை அமைச்சராக அவருடைய மகன் இராஜிவ் காந்தி பொறுப்பில் அமர்த்தப்பட்டார். தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சராக இருக்க வேண்டும் என்று நாடாளுமன்றத் தேர்தலைச் இராஜிவ் காந்தி அறிவித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இருந்த அதிமுகவும் சட்டமன்றத்திற்கான பதவிக் காலம் ஓராண்டு இருக்கும் நிலையில், சட்டமன்றம் கலைக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது.
இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட எம்.ஜி.ஆர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். கட்சியின் பொதுச்செயலாளர் வெளிநாட்டில் இருந்த நிலையில், கட்சிப் பணி மற்றும் அனைத்து தேர்தல் பணிகளையும் சிறப்பாக நடத்தி, அதிமுகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றதில் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
1984 டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் இணைந்தே தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியும் அதிமுகவும் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. அப்போது அறிவிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். ‘பார்மூலா’வின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சி 75%+ தேசிய கட்சி 25% என்றும், மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சி 25%+தேசியக் கட்சி 75% என்றும் போட்டியிடுவது என்ற அடிப்படையில் போட்டியிட்டன. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அந்த பார்முலாவை அதிமுக தொடர்ந்து கடைபிடித்ததா? என்பது ஆய்வுக்குரியது.
இரண்டு முறை ஆட்சியை இழந்த திமுக எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் இல்லாத சூழ்நிலையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற திமுக பல வழிமுறைகளைக் கையாண்டது. கரூரில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அக் கட்சியின் தலைவர் கருணாநிதி, “திமுகவை வெற்றிப்பெற செய்யுங்கள். என் இனிய நண்பர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு திரும்பியவுடன் அவருக்கு முதல் அமைச்சர் பொறுப்பைத் தந்துவிடுவேன்” என்று நயமாகப் பேசினார். மக்கள், “உன்னை வெற்றிப்பெற வைத்து, நீ எம்.ஜி.ஆரை முதல் அமைச்சர் ஆக்குவதா? நாங்களே முதல் அமைச்சர் ஆக்குகிறோம்” என்று அதிமுகவுக்குப் பெரும் வெற்றியைத் தந்தனர்.

1984 டிசம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோதே தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது என்பதும், அதில் எம்.ஜி.ஆர். ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் சிகிச்சை முடிந்து 1985 பிப்ரவரி 4 அன்று தமிழகம் திரும்பினார். ஆளுநர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரனை புதிய முதலமைச்சராக 1985 பிப்ரவரி 10 ஆம் தேதி நியமித்தார். இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 14, 1985 அன்று மேலும் 16 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில், ஆர். நெடுஞ்செழியன், எஸ். ராமச்சந்திரன், ஆர். எம். வீரப்பன், சி. பொன்னையன், சு. திருநாவுக்கரசர், எம். தம்பிதுரை டாக்டர் எச். வி. ஹண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் நாள் எம்ஜிஆர் மறைந்தார். இதனை தொடர்ந்து, நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சராகப் பதவியேற்றார். ஒரு வாரம் கழித்து, ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி தேர்வு செய்யப்பட்டு முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஜானகி தலைமையிலான அமைச்சரவையில், ஆர்.எம். வீரப்பன், பி.யு.சண்முகம், சி. பொன்னையன், எஸ். முத்துசாமி, வி.வி. சுவாமிநாதன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இதனையொட்டி அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிளவுபட்டது. ஆளுநர் வி.என். ஜானகி ராமச்சந்திரனுக்கு அவையில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கினார். 30 எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளித்தனர். வி.ஆர். நெடுஞ்செழியனின் 10 ஆதரவாளர்கள் நடுநிலை வகித்து வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர். ஜானகிக்கு 105 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே இருந்தது.
வாய்மொழி வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பு, அவையில் வன்முறை வெடித்தது, சபாநாயகர் காயமடைந்தார். தலையில் ரத்தம் வழிய, ஜானகி 105 எம்எல்ஏக்களுடன் தனது பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக அறிவித்தார் அவைத்தலைவர் பி.எச்.பாண்டியன். அவை உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான சூழலில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பை மாநில ஆளுநர் ஏற்க மறுத்து, சட்டமன்றத்தை கலைத்துவிட்டு புதிய பொதுத் தேர்தல்களை நடத்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். மத்திய அரசு இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, குடியரசுத் தலைவரால் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
1984 ஆம் ஆண்டு தேர்தல் எம்.ஜி.ஆரின் கடைசி தேர்தலாக அமைந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் இரண்டாக பிளவுபட்டது. தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் பெண் முதல் அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதிமுகவில் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி தொடங்கிய கால கட்டமும் இதுதான்.
– ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.