“கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு” – அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி !
திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் கீழ சிந்தாமணி பகுதியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் சாதிக் பாஷா, திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தை பார்வையிட்ட பின்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. மாயபிம்பம் என எந்த தரவும் இல்லாமல் போகின்ற போக்கில் கூற முடியாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடக்கப்பள்ளியில் பள்ளி இடை நிற்றல் பூஜ்யமாக உள்ளது. இந்திய அளவில் உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தான் 7.7 சதவீதமாக உள்ளது. அதையும் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எதையும் விளம்பரத்திற்காக கூறக்கூடிய அரசு தமிழ்நாடு அரசு இல்லை.
திருவள்ளுவர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவன் பள்ளி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் மிகவுக் வேதனையாக உள்ளது. 2014-2015 ஆம் ஆண்டு நபார்டு நிதியில் அந்த பள்ளிகள் கட்டப்பட்டது. சுவர் இடிந்து விழுந்த இடத்தில் கட்டுமான பொருட்கள் இருந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த கட்டுமான பொருட்களை எடுத்து சென்றுள்ளார்கள். அது பாதுகாப்பான இடம் என நினைத்து மாணவர்கள் அங்கு சென்று அமர்ந்துள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக சம்பவம் நடந்துள்ளது.
அந்த சம்பவத்தில் அஜாக்கிரதையாக யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, அந்த மாணவனின் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்போம்.
இந்நிகழ்வின் போது நகர செயலாளர் மதிவாணன், கவுன்சிலர்கள் வக்கீல் பன்னீர்செல்வம், சாதிக் பாஷா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.