முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் – மருமகள் தீ விபத்தில் மரணம் ! நடந்து என்ன ?
முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் – மருமகள் தீ விபத்தில் மரணம் ! நடந்து என்ன ?
தருமபுரி மாவட்ட முன்னாள் அமைச்சரும் தற்போது பாலக்கோடு எம்.எல்ஏ.வும் மா.செ.வுமான கே.பி அன்பழகன். அவரின் இளைய மகன் சசிமோகன் இவர் சென்னையை சேர்ந்த பூர்ணிமா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு திருமணம் செய்துக் கொண்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருமணம் நடைபெற்றது.
கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த சொத்து குவிப்பு வழக்கில் பூர்ணிமா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி வீட்டில் விளக்கு ஏற்றும் போது தீ விபத்து ஏற்பட்டு 40% மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. தீ விபத்தில் இருந்து மீட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் பூர்ணிமா சிகிச்சை பெற்று வந்தார்.

எதிர்பாராத விதத்தில் நடைபெற்றுள்ள இந்த தீ விபத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருப்பதாக சொல்கிறார்கள். முன்னால் அமைச்சர் மருமகள் பூர்ணிமா தீ விபத்து சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்று போலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று 25.01.2024 காலை பூர்ணிமா பரிதாபமாக உயிரிழந்தார். மருமகள் உயிரிழந்தது அதிமுக முன்னாள் அமைச்சரின் குடும்பத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
– விசாகன்