கிட்னி முறைகேட்டை நிரூபித்தால் ஒரு கோடி பரிசு ! சவால் விட்ட எம்.எல்.ஏ. கதிரவன்!
திருச்சி – மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், சிட்டிங் எம்.எல்.ஏ. கதிரவன் தனக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கிட்னி விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் நிலையில், அந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடம் என்ன நடந்தது என்பதை விளக்கமாக பேசியிருக்கிறார்.
மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இந்த விவகாரம் குறித்து பேசும்போது, “ நான் நடத்திவரும் மருத்துவமனையில் எந்த விதமான கிட்னி முறைகேடு விஷயத்தை செய்யவில்லை. இதை நான் சொல்லவில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணையில் அதற்கான முடிவுகளை தந்துள்ளது. மீண்டும் சொல்கிறேன். நானும் அல்லது எனது கட்சியோ எந்த தவறிலும் ஈடுபடவில்லை. மண்ணச்சநல்லூர் தொகுதி மக்கள் நலனுக்காக மட்டுமே இதுவரை உழைத்து வருகிறோம். இனிமேலும் அப்படித்தான் இருக்கும். தொகுதி வளர்ச்சியையும் என் அரசியல் வளர்ச்சியையும் பொறுக்க முடியாத எதிர் அணியினர் என் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
எந்த ஒரு மருத்துவமனையிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் உள்ளன. அந்த நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் யார் உடலிலும் யாரும் கத்தியை வைக்க முடியாது. ஆயிரக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதை பொறுக்காமல், அதை தடுக்கும் வகையில் சிலர் திட்டமிட்டு புரளிகளை பரப்பி வருகின்றனர். தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் உரிய அனுமதி பெறாமல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை நிரூபித்தால், அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்குவேன்” என்று அதிரடியாக சவால் விடுத்துள்ளார் எம்.எல்.ஏ. கதிரவன்.
மேலும், ”இதற்கு பதிலடியாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 60,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்வதோடு எதிர் அணியினரின் டெபாசிட்டையும் இழக்க செய்ய வேண்டும். வாக்காளர்களாகிய உங்கள் கையில் தான் இது இருக்கிறது. தற்போது நீங்கள் கொடுக்கும் இந்த தீர்ப்பு, எதிர்காலத்தில் மண்ணச்சநல்லூர் தொகுதியில் பொய் புரட்டுகளை பரப்புவதற்கு பயப்படும் வகையில் இருக்க வேண்டும்” என்றவர், “கதிரவன் மீண்டும் இரண்டாவது முறையாக உங்களால் எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டேன் என்ற நல்ல செய்தியை அளிக்க வேண்டும். நான் உங்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் நிலைத்திருப்பேன்.” என்ற உருக்கமான வேண்டுகோளையும் முன்வைத்தார்.
– அங்குசம் தேர்தல் செய்திக்குழு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.