நான் முதல்வன் திட்டம் : வெறும் கோச்சிங் கிளாஸ் மட்டுமல்ல !
IAS/IPS படிப்பவர்களுக்கான ‘நான் முதல்வன் திட்டம்’ என்பதை கோச்சிங் கிளாஸ் மட்டுமே என பலர் நினைக்கிறார்கள். அதில் ஏற்கனவே உள்ள ‘அரசு சிவில் சர்வீஸ் கோச்சிங் மையம்’ மூலம் கோச்சிங் உண்டு. ஆனால் இந்தத் திட்டம் கோச்சிங் கிளாஸ் மட்டுமே கிடையாது.
முதலில் ஒரு ஸ்காலர்ஷிப் தேர்வு வைத்து அதில் 1000 பேரைத் தேர்வு செய்கிறார்கள். பிறகு அந்த மாணவர்களுக்கு மாதம் 7500ரூ என 10 மாதத்திற்கு (மொத்தம் 75000ரூ) வழங்குகிறார்கள். இதை மாணவர்கள் படிப்பு சார்ந்த எதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு கோச்சிங் மட்டுமல்ல, தனியார் கோச்சிங்கும் வேண்டும் என நினைப்பவர்கள் அவற்றில் சேரலாம், நூல்கள் வாங்கலாம், ஹாஸ்டல் ஃபீஸ் கட்டலாம், கம்ப்யூட்டர் வாங்கலாம், நேர்முகத்தேர்வுக்கு நல்ல ஆடைகள் கூட வாங்கலாம்…
முதல்நிலைத் தேர்வில் (Prelims) வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குத் (Mains) தயாராக உதவியாக ஒருமுறை தொகை 25000ரூ ஒரே தடவையில் வழங்கப்படுகிறது. இதையும் மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் அடுத்தகட்டத் தேர்வுக்குத் தயாராகப் பயன்படுத்தலாம்.
முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்று நேர்முகத் தேர்வுக்குத் (Interview) தயாராக உதவியாக ஒருமுறை தொகையாக 50000ரூ ஒரே தடவையில் வழங்கப்படுகிறது. இதையும் மாணவர்கள் தங்கள் விருப்பம்போல் அடுத்தகட்டத் தேர்வுக்குத் தயாராகப் பயன்படுத்தலாம்.
தொகை உதவி போக திமுக அரசின் நான் முதல்வன் திட்டம் ‘தேமே’ என கடனுக்கு நடந்துவந்த அரசு சிவில் சர்வீஸ் கோச்சிங்கை சிறப்பாகச் சீரமைத்து, தனியார் கோச்சிங்குகளைப் போல மாற்றியுள்ளது.
கெஸ்ட் லெக்சரர்கள், பணியில் உள்ள IAS/IPS அதிகாரிகள் அடிக்கடி வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 24 மணி நேரம் இயங்கும் அதிநவீன லைப்ரரி வசதி, இலவச தங்கும் விடுதியும் உண்டு.
எல்லாவற்றையும்விட முக்கியம், தமிழர்களை, குறிப்பாக BC/MBC/SC/ST மாணவர்கள் சிக்கலைச் சந்திப்பது நேர்முகத் தேர்வில்தான். அங்குதான் குறைவான மதிப்பெண் அவர்களுக்கு வழங்கப்படும். திறன் இல்லாததால் அல்ல, தேவையான ‘நூல்’ இல்லாததால். அதனால் அதில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ஓய்வுபெற்ற UPSC போர்டு மெம்பர்கள், உயர் அதிகாரிகளைக் கொண்டு ‘பயிற்சி நேர்காணல்களை’ தீவிரமாக நடத்துகிறது அரசு.
இன்று தேர்வாகியுள்ள 60 பேரில் 56 பேர் நான் முதல்வன் திட்டத்தின் பயனாளிகள். அதில் இருவர் அகில இந்திய அளவில் முதல் 10 ரேங்குகளில் வந்துள்ளார்கள். ஒருவர் 18வது ரேங்க். இவர்களில் சிலர் (17 பேர்) நான் முதல்வன் திட்டத்தின் ஸ்காலர்ஷிப் பணத்தின் மூலம் தனியார் கோச்சிங்கும் எடுத்துள்ளனர். ‘அதனால்தான் அவர்களின் படங்கள் தனியார் விளம்பரங்களிலும் தென்படுகின்றன.’ மீதமுள்ள 39 பேரும் முழுக்க முழுக்க அரசு சிவில் சர்வீஸ் கோச்சிங் மூலம் மட்டுமே பட்டை தீட்டப்பட்டவர்கள்.
கடந்த பல ஆண்டுகளாக, IAS/IPS தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் வெற்றிபெறுவது வெகுவாகக் குறைந்துபோயிருந்தது. அதை சீரிய திட்டத்தால், கடும் உழைப்பால், செயல்பாட்டால் மாற்றி இந்தச் சாதனையைப் படைத்துள்ளது தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.
இதெல்லாம் புரியாமல் அல்லது புரிந்து வேண்டுமென்றே சிலர் கேலி செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டுத்தள்ளுங்கள்.
நம் முதல்வர் “உங்கள் கனவு என்ன?” என கேட்கிறாரே அது சும்மா கேட்கப்படும் கேள்வி அல்ல. ஆக்கபூர்வமான கனவு என்னவென்றாலும் அவரது அரசு அதற்கான திட்டங்களை வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் நான் முதல்வன் திட்டம்.
நான் சொல்வதெல்லாம் இதுதான். இது தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷமான ஆட்சி. இது தொடர வேண்டும். இதை நாம் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். நம் நிகழ்காலத்திற்காக மட்டுமல்ல, நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும்.
— டான் அசோக்








Comments are closed, but trackbacks and pingbacks are open.