நியோமேக்ஸ் : புனிதமான நோக்கத்தை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள் ! நீதியரசர் பரதசக்கரவர்த்தி !
புனிதமான நோக்கத்தை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள் ! நீதியரசர் பரதசக்கரவர்த்தி !
நீதியரசர் பரதசக்கரவர்த்தியின் முன்னெடுப்பில், நியோமேக்ஸ் வழக்கு ஒரு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. கடந்த ஏப்ரல்-29 ஆம் தேதியன்று இறுதியாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், மே-06 அன்று விரிவான உத்தரவு ஒன்று வெளியாகியிருக்கிறது.
முதற்கட்டமாக, நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களின் விவரங்களை பொது அறிவிப்பின் வாயிலாக இறுதி செய்த நிலையில், இதுவரையில் மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இதுவரையில் கண்டறியப்பட்ட நியோமேக்ஸ் தொடர்பான நிலங்கள் மற்றும் நியோமேக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலங்களின் மதிப்பை நிர்ணயம் செய்வதற்கான கமிட்டியை அமைத்து உத்தரவை பிறப்பித்திருக்கிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
அதன் அடிப்படையில், தற்போது வரையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களின் விவரங்களிலிருந்து ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவாரூர், திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களை மதிப்பீடு செய்வதற்கான வரையறையை வகுத்தளித்திருக்கிறார்.

இந்த வழக்கின் தகுதி வாய்ந்த அதிகாரியான மதுரை மாவட்ட வருவாய் அலுவலரை நிலங்களை மதிப்பீடு செய்வதற்கான கமிட்டியின் தலைவராக நியமித்திருக்கிறார். இவருக்கு கீழ், அந்தந்த மாவட்ட அளவில் மாவட்ட பதிவாளரை தலைவராக கொண்ட துணைக்குழுவை அமைத்திருக்கிறார். இந்த துணைக்குழுவில், அங்கீகரிக்கப்பட்ட இரண்டு மதிப்பீட்டாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். மாவட்ட பதிவாளர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இரு மதிப்பீட்டாளர்களை கொண்ட மூவர் குழுவாக இந்த கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, இந்தக் கமிட்டிக்கு துணையாக நிலங்களை மதிப்பீடு செய்வதில் உதவி செய்யும் பொருட்டும் விதிமீறல்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடமளிக்காத வகையிலும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து இருவர் மற்றும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் தரப்பில் ஒருவர் பங்குபெறும் வகையில் கமிட்டியை கட்டமைத்திருக்கிறார்.
இதன்படி,
- ராமநாதபுரம்
மாவட்டப்பதிவாளர், ராமநாதபுரம்.
மதிப்பீட்டாளர்கள் : 1. பி.குமரன் 2. முத்துபாபு.
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதிகள் : எம். அன்பழகன், அமலோற்பவ வேதராஜ்.
- சிவகங்கை
மாவட்டப்பதிவாளர், சிவகங்கை.
மதிப்பீட்டாளர்கள் : 1. முத்து ராமகிருஷ்ணன் 2. பாலசுப்பிரமணியன்.
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதிகள் : மாயக்கண்ணன், அ.சீனிவாசன்.
- தூத்துக்குடி
மாவட்டப்பதிவாளர், தூத்துக்குடி .
மதிப்பீட்டாளர்கள் : 1. ரவீந்திரன் வேல்சாமி 2. தங்கசாமி முருகேசன்.
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதி : கே.முருகன்,
- தஞ்சாவூர்
மாவட்டப்பதிவாளர், தஞ்சாவூர்.
மதிப்பீட்டாளர்கள் : 1. எஸ்.வெங்கடேஷ் 2. எஸ்.ரமேஷ்
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதிகள் : அஜய் விஸ்வநாத், வி.வினோத்குமார்.
- திண்டுக்கல்
மாவட்டப்பதிவாளர், திண்டுக்கல் .
மதிப்பீட்டாளர்கள் : 1. கிருஷ்ணமூர்த்தி 2. சௌந்தராஜன்
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதிகள் : பி.ராமராஜ், நிஜார் அஹமது.
- மதுரை
மாவட்டப்பதிவாளர், மதுரை.
மதிப்பீட்டாளர்கள் : 1. ரவிச்சந்திரன் ராமசாமி 2. விஜய்குமார் கிருஷ்ணன்.
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதிகள் : சுரேஷ், வி.ஜே.ராஜசேகரன்
- விருதுநகர்
மாவட்டப்பதிவாளர், விருதுநகர் .
மதிப்பீட்டாளர்கள் : 1. கு.குழந்தைவேல் 2. பி.கணேசன்
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதிகள் : எஸ்.கோகுலகிருஷ்ணன், ஜே.ராம்குமார்.
- திருவாரூர்
மாவட்டப்பதிவாளர், திருவாரூர் .
மதிப்பீட்டாளர்கள் : 1. செல்வகுமார். 2. பாலமுருகன்
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதி : எம்.ராஜா
- திருநெல்வேலி
மாவட்டப்பதிவாளர், திருநெல்வேலி .
மதிப்பீட்டாளர்கள் : 1. மணிகண்ட சரவண மூர்த்தி 2. எஸ்.வேம்பு
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதி : வி.சங்கரநாராயணன்.
- தென்காசி
மாவட்டப்பதிவாளர், தென்காசி .
மதிப்பீட்டாளர்கள் : 1. வினாயகி 2. ஏ.ரவீந்திரன்
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதிகள் : கே.சரவணகார்த்திக்கேயன், எம்.அப்துல் ரஹீம்.
- தேனி
மாவட்டப்பதிவாளர், தேனி .
மதிப்பீட்டாளர்கள் : 1.ஆர். ரவிசங்கர் 2. எம்.ஷாகுல் ஹமீது.
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதிகள் : ஆர்.செந்தில்குமார், ஆர். மணிகண்டன்.
ஆகியோர்களை கொண்ட குழுவாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக்குழுவின் முதல் கூட்டம் 12.05.2025 அன்று அந்தந்த மாவட்ட பதிவாளர்அலுவலகத்தில் கூட வேண்டும். தவிர்க்கவியலாத சூழலில் அன்றைய தேதியில் கூட முடியாத பட்சத்தில் உடனடியாக அடுத்த சில தினங்களில் கூட முயற்சிக்க வேண்டும். இந்த தகவலை மற்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்தக்கமிட்டியானது, 12.05.2025 முதல் 05.06.2025 வரையிலான 25 நாட்களுக்குள் மதிப்பீட்டு வேலைகளை முடித்து, கமிட்டியின் தலைவரிடம் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
கமிட்டியின் தலைவரும் வழக்கின் தகுதிவாய்ந்த அதிகாரியுமான மதுரை மாவட்ட வருவாய் அலுவலர், 13.06.2025 அன்று கிடைக்கப்பெறும் நாளிலிருந்து 7 நாள் அவகாசத்தில் இந்த அறிக்கைகளை பரிசீலித்து, இதில் அவசியமான திருத்தங்கள் அல்லது கருத்துக்களை தொகுத்து 13.06.2025 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் அறிக்கை 13.06.2025 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணை 16.06.2025 அன்று நடைபெறும்.
இதற்கிடையில், இந்த கமிட்டியின் செயல்பாடு அதுவரையிலான முன்னேற்றம் குறித்த நிலை அறிக்கையை 30.05.2025 அன்று நீதிமன்றத்தில் கமிட்டியின் தலைவர் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை, கமிட்டியில் இடம்பெற்றிருக்கும் மதிப்பீட்டாளர்கள் தங்களது பணியை தொடர்வதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அதனை உடனடியாக நீதிமன்றத்தில் முறையிட்டு உரிய உத்தரவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
புனிதமான நோக்கத்தை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள் ! நீதியரசர் பரதசக்கரவர்த்தி !
கமிட்டியின் முதல் கூட்டத்திலேயே, அந்தந்த மாவட்டத்தில் மதிப்பீடு பணிகளை எவ்வாறு செய்யப்போகிறோம் என்பதை தீர்மானித்துவிட வேண்டும். அதற்கு தேவையான முன் தேவைகளை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அது குறித்த தகவல்களை, முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் நிறுவன தரப்பு பிரதிநிதிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும்.
அந்தந்த மாவட்ட பதிவாளர், இந்த கமிட்டியின் செயல்பாடுகளுக்கு உதவிடும் வகையில் பதிவுத்துறை தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வழங்க வேண்டும்.
என்பதாக, கமிட்டியின் செயல்பாடுகள் எந்தவிதத்திலும் தொய்வு மற்றும் தடங்களுக்கு உள்ளாகிவிடாத அளவுக்கு நுணுக்கமான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார், நீதியரசர் பரதசக்கரவர்த்தி.
முன்னதாக, பிணை ரத்து தொடர்பான இந்த வழக்கில் இவ்வளவு விரிவான அடுத்தடுத்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய சூழல் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும் இந்த உத்தரவின் முன் பகுதியில் தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.

வருமானவரித்துறை, மற்றும் அமலாக்கத்துறையின் கருத்துக்களை வழங்குவதற்கு போதுமான அவகாசம் வழங்கியும் அவர்களது கருத்துரைகளை கேட்டறிந்தும்; பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்திற்கொண்டும்; நியோமேக்ஸ் நிறுவனத் தரப்பிலும் எந்தவிதமான ஆட்சேபனைகளை முன்வைத்திராத வகையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் உத்தரவாதப்படுத்தி பல்வேறு காரணிகளையும் கணக்கில் எடுத்து முழுநிறைவான உத்தரவை பிறப்பித்திருக்கிறார், நீதியரசர் பரதசக்கரவர்த்தி. எந்த சூழலிலும், நியோமேக்ஸ் நிறுவனத் தரப்பிலும் சரி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்தும் சரி யார் ஒருவரும் நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் இந்த முன்னெடுப்புக்கு இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து இப்பணிக்கு இடையூறு ஏற்படுத்திராத அளவுக்கு சட்ட நுணுக்கங்களை நேர்த்தியாக கையாண்டு உத்தரவை பிறப்பித்திருக்கிறார், நீதியரசர் பரதசக்கரவர்த்தி.
“துரதிர்ஷ்டவசமான முறையில் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு உதவுவது என்ற புனிதமான நோக்கத்தை மனதில் நிறுத்திக் கொண்டு முடிந்தவரை விரைவாக பணியாற்றுங்கள்” என்பதாக, கமிட்டிக்கு வேண்டுகோளையும் விடுத்திருக்கிறார்.
நியோமேக்ஸ் நிறுவனம் வருமான வரித்துறைக்கு ரூ49,34,83,376 வரிப்பாக்கி வைத்திருப்பதை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தது போக எஞ்சியுள்ள பணம் மற்றும் நிலங்களை மீண்டும் நியோமேக்ஸ் மற்றும் அதன் இயக்குநர்களிடம் ஒப்படைத்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டை தெரிவித்த வருமான வரித்துறையின் கருத்தை பாராட்டியிருக்கிறார், நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அமலாக்கத்துறையினருக்கு போதிய அவகாசம் அளித்தும், அவர்களது டெல்லி தலைமையகத்திலிருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவு வராத நிலையில் அவர்களது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாத சூழலை கருத்தில் கொண்ட நீதியரசர், அந்த பதிலுக்காக காத்திருந்தால் இந்த கோடை விடுமுறையை இழக்க நேரிடும் என்பதை பதிவு செய்ததோடு, நிலங்களை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்படும் இந்த கமிட்டியின் செயல்பாடு எந்த விதத்திலும் யாருக்கும் எந்தவிதமான இடையூறு மற்றும் பாரபட்சத்தையும் ஏற்படுத்திவிடாது. அமலாக்கத்துறையின் நிலைப்பாட்டை தெரிந்துகொண்ட பிறகே, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு தீர்வுத்திட்டங்களை வகுக்கும் என்பதாக குறிப்பிட்டு இந்த நடவடிக்கையை தொடர்ந்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு முதற்கட்டமாக நிவாரணத்தை எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ, அதே நேரத்தில் சட்டசிக்கல்களுக்கும் இடம் கொடுக்காமல், அதற்கேற்ப பணிகளை முன்நகர்த்தி கொண்டு செல்ல வேண்டுமென்ற முனைப்பிலிருந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பிலிருந்து அவர்களின் வலியையும் வேதனையும் உணர்ந்தவராக இந்த உத்தரவை நீதியரசர் பரதசக்கரவர்த்தி பிறப்பித்திருப்பது, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
— அங்குசம் புலனாய்வுக்குழு.