நியோமேக்ஸ் வழக்குகள் ஒரே நீதிபதியிடம்… கண்ணாமூச்சி ஆட்டம் !
நியோமேக்ஸ் வழக்குகள் ஒரே நீதிபதியிடம்… கண்ணாமூச்சி ஆட்டம் ! அங்குசம் !
நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில், நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக நடைபெற்றுவரும் பிணை ரத்து தொடர்பான வழக்கில், இதுவரை 11 இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.
செங்கல்பட்டு, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தென்காசி, தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 16 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட நியோமேக்ஸ் தொடர்பான சொத்துக்களை மதிப்பிடும் பணி பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல்-29 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஜூன்-13 ஆம் தேதிக்குள் மதிப்பிடும் பணிகளை முடிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டும், நான்கு மாதங்களை கடந்தும் ஒரு முடிவுக்கு வர முடியாத சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது.

ஆக-11 அன்று நடைபெற்ற விசாரணையில், ஆக-31 ஆம்தேதிக்குள் மொத்த நிலங்களின் மதிப்பீட்டு பணிகளை முடிக்கக்கோரியும், ஆக-22 அன்று அதுவரையிலான பணிகளின் முன்னேற்றம் குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், ஜே.வி. என்றழைக்கப்படும் தொழில்கூட்டு அடிப்படையில் போடப்பட்ட பத்திரங்களின் நிலை குறித்தும், சொத்துக்களை அட்டாச் செய்வது குறித்தும், எஸ்.பி.க்கு குறையாத விசாரணை அதிகாரி, தனி டி.ஆர்.ஓ. நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம், நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாகவே விசாரணைக்கு பட்டியிலடப்பட வேண்டுமென்று பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நியோமேக்ஸ் வழக்குகள் ஒரே நீதிபதியிடம்… கண்ணாமூச்சி ஆட்டம் ! அங்குசம் !
இதற்கு பதிலளித்த, நீதியரசர் பரதசக்ரவர்த்தி, “இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரைக்கிளையின் பதிவாளருக்கு கடிதம் எழுதுங்கள். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பார். இறுதியாக, தலைமை நீதிபதி எடுக்கும் முடிவுப்பொறுத்து அமையும்.” என்பதாக கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

நியோமேக்ஸ் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்தது, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார். டான்பிட் எனப்படும் சிறப்பு சட்டப்பிரிவுகளின் கீழ்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை விசாரிக்கும் வரம்பு டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தின் வசம் இருக்கிறது. ஆனாலும், டான்பிட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மாஜிஸ்ட்ரேட் அந்தஸ்தில் விசாரிப்பதால், பிணை கோருவது, பிணை ரத்து செய்வது உள்ளிட்ட அப்பீல் கோரிக்கைகள் அனைத்தும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படுகிறது. இது, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு பணிச்சுமையாகவும், பெரும் தலைவலியாகவும் மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கும் பெரும் செலவு பிடிக்கும் விவகாரமாக மாறி நிற்கிறது. இங்கே, டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு என்ன? அவர்களுக்கு என்னதான் வேலை? என்பதே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
தனி விசாரணை அதிகாரியும் தனி டி.ஆர்.ஓ.வும் நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு, ஒரே நீதிபதியின் முன்பாக வழக்குகள் அனைத்தும் விசாரிக்கும் வகையில் அமைந்தால்தான் இந்த வழக்கில் ஒருங்கிணைந்த முறையில், இழுத்தடிப்புகள் இல்லாமல் உரிய நிவாரணத்தை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் பெற முடியும் என்பதே யதார்த்தம்.
இந்த விவகாரத்தில், சட்ட பாயிண்டுகளை காட்டி, இந்த வழக்குகள் அலைக்கழிக்கப்படுவதான கண்ணாமூச்சி ஆட்டத்தை நடத்தி வருகிறார்கள் என்பது குறித்து அலசுகிறது, இந்த காணொளிப்பதிவு.
— அங்குசம் புலனாய்வுக்குழு.