நியோமேக்ஸ் மோசடி விவகாரம் : வீதிக்கு வந்த பிறகும் வீட்டில் முடங்கிக் கிடப்பதில் நியாயமில்லை !

9

நியோமேக்ஸ் விவகாரம் : வீதிக்கு வந்த பிறகும் வீட்டில் முடங்கிக் கிடப்பதில் நியாயமில்லை !

நியோமேக்ஸ் நிறுவனம் மோசடியான வார்த்தைகளைக் கூறி பலரையும் ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறது என்பது எந்தளவுக்கு உண்மையோ, அந்த அளவிற்கு அதிக வட்டிக்கு ஆசைப்பட்டதன் காரணமாகத்தான் தற்போது பணத்தை இழந்து நிற்கின்றனர் என்பதும் மறுக்க முடியாத மற்றொரு உண்மை.

பாதிக்கப்பட்டவர்கள் என்பதாலேயே பரிவு காட்டுவதும் சலுகை காட்டுவதும் அவசியமற்றது என்றே தோன்றுகிறது. பல்வேறு தரப்பினரும் நியோமேக்ஸில் பணத்தை இழந்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலோனோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அதிக வட்டி என்றாலே, அதில் ’ஆபத்தும்’ அடங்கியிருக்கிறது என்பதை அறியாதவர்கள் அல்ல அவர்கள்.

நியோமேக்ஸ் மோசடி மன்னர்கள்
நியோமேக்ஸ் மோசடி மன்னர்கள்

அடுத்து, நியோமேக்ஸ் நிறுவனம் பொறி வைத்து தூக்கியது உள்ளூர் அளவில் சிறிய அளவில் தொழில் நடத்தி வந்த, சிறு தொழிலதிபர்களை. கையில் இலட்சங்களை வைத்துக்கொண்டு எப்படியும் கோடீஸ்வரனாகிவிட வேண்டுமென்ற இலட்சியத்தோடு இருந்தவர்கள் அவர்கள். ஐ.டி. ரிட்டர்ன்ஸ் குறித்த அச்சம் காரணமாக, தந்திரமான பணபரிமாற்ற முறைக்கு ஏற்கெனவே பழகியிருந்த இவர்களை வீழ்த்துவதற்கு அதிகம் மெனக்கடல் தேவைப்பட்டிருக்காது. நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த எளிதான ’இரைகள்’ இவர்கள்.

அடுத்து, கம்பம் செல்வகுமார் போன்ற அரசியல்வாதிகள். பொதுமக்களிடம் உள்ள பரிச்சயம் … நம்ம ஊர் காரர் … ஏமாத்திவிட்டு எங்கு போய்விட போகிறார்? என்ற நம்பிக்கை. மக்களிடமிருந்த இந்த நம்பிக்கையோடு தனிநபர் பிரபலமும் நியோமேக்ஸுக்கு பெரிய முதலீடாக மாறியிருக்கிறது.

திமுக முக்கிய புள்ளி கம்பம் செல்வகுமார்
திமுக முக்கிய புள்ளி கம்பம் செல்வகுமார்

மிக முக்கியமாக, அவரை நம்பி போட்டேன்; இவரை நம்பி போட்டேன்; தம்பி சொன்னானு போட்டேன்; மாமா சொன்னாருனு போட்டேன்; நானே நிறைய பேரை முதலீடு செய்ய வச்சிருக்கேனு … ஒரு இடத்தில் தொட்டால் மொத்த கட்டுமானமும் கதிகலங்கி போகுமளவுக்கு சங்கிலி தொடர்போல படர்ந்திருக்கும் வலைபின்னலை சொல்லலாம்.

நியோமேக்ஸ் நிறுவனத்தின் மிரட்டலுக்கு பயந்துதான் இன்னும் பலரும் போலீசில் புகார் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று இந்த விசயத்தை தட்டையாக சொல்லிவிட முடியாது.

”நியோமேக்ஸில் மோசடியே நடைபெறவில்லை. யாருமே புகார் கொடுக்கவும் முன்வரவில்லை. போலீசுதான் மனுமேளா நடத்தி புகார் கொடு கொடுனு கேட்கிறார்கள். அப்படி அவர்கள் மனு மேளா நடத்தினாலும் ஒன்றிரண்டு புகார்கள்தான் வருகிறது. ஒன்றுமில்லாத விசயத்தை போலீசும் மீடியாவும்தான் பெருசுபடுத்தி பணம் பண்ண பார்க்கிறார்கள்” என்று தட்டை திருப்பிப் போட்டு தட்ட தொடங்கியிருக்கிறார்கள்.

மதுரை பொருளாதர குற்றப்பிரிவு போலிசார் குழு
மதுரை பொருளாதர குற்றப்பிரிவு போலிசார் குழு

புகார் கொடுத்தால் என்ன? புகார் கொடுக்காவிட்டால் என்ன? மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாசா மாசம் சம்பளம் அவர்கள் அக்கவுண்டில் விழப்போகிறது. உங்களிடம் புகாரை வாங்கியா, அவர்கள் பாக்கெட்டில் பதக்கங்களை குத்திக்கொள்ளப் போகிறார்கள்?

இவ்வளவுக்குப் பிறகும், போலீசில் பலரும் வெளிப்படையாக புகார் கொடுக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

* போலீசில் புகார் கொடுத்தால் முழு பணமும் திரும்பக் கிடைக்காது.

* நீதிமன்றத்தில் சிவில் வழக்காகத்தான் நடத்துவார்கள். 20 வருடத்துக்குக்கூட இழுத்துகொண்டே போகும். பணம் கிடைக்காது.

நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.
நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.

* புகார் கொடுத்து நியோமேக்ஸ் நிறுவனத்தை பகைத்துக் கொண்டால், பலன் கிடைக்காமல் போய்விடும். புகார் கொடுத்ததை காரணம் காட்டியே பழிவாங்கிவிடுவார்கள் என்ற அச்சம்.

* நியோமேக்ஸில் அரசியல்வாதிகள், நீதிபதிகள், போலீசு அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என பவர் உள்ள பலரும் முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்கள் மறைமுகமாக இருந்து நியோமேக்ஸ் நிறுவனத்தை தப்ப வைத்துவிடுவார்கள். அதன்பிறகு, பணத்தை வாங்கிக் கொள்ளலாம்.

* நியோமேக்ஸ் நிறுவனத்திடம் கோடி கணக்கில் இடம் இருக்கிறது; பணம் இருக்கிறது. விசாரணை அதிகாரிகளுக்கு பணத்தை தாரேன், இடத்தை எழுதி வைக்கிறேனு பேரம் பேசி எப்படியும் வெளியே வந்துவிடுவார்கள்.

* போலீசில் புகார் கொடுத்துட்டோம்னா, பத்திரிகையில் வந்துவிடும். மீடியா காரங்க சும்மா விடமாட்டாங்க. அப்புறம் இதுபோன்று குறுக்குவழியில் தப்பிக்க வழிவகை இல்லாமல் போய்விடும். காதும் காதும் வைத்தாற் போல காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். என்ன, கொஞ்ச காலம் பொறுத்திருக்கனும் அவ்ளோதான்.

* புகார்னு போனா, இவ்ளோ பணம் உனக்கு எப்படி வந்துச்சுனு போலீசு கேட்கும். ஐ.டி. பிரச்சினை வரும். எதுக்கு வம்பு. சத்தம் இல்லாமல் இருந்துவிடுவோம். இது கோடிகளை போட்டவர்களின் கவலை.

* ஓய்வுபெற்ற நீதிபதிகள், போலீசு அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பரிச்சயமான அரசியல்வாதிகள் போன்றோர்கள் தேள் கொட்டிய கதையாய் கமுக்கமாக கிடக்கிறார்கள்.

இதுபோன்ற இன்னும் பல காரணங்களால்தான் புகார் கொடுக்காமல், “நல்ல முடிவுக்காக” காத்திருக்கிறார்களே ஒழிய, நியோமேக்ஸில் மோசடியே நடைபெறவில்லை என்பதால் அல்ல!

நியோமேக்ஸ் மனுமேளா
நியோமேக்ஸ் மனுமேளா

அதிக வட்டிக்குக்கும் இரட்டிப்பு பணத்திற்கும் ஆசைப்பட்டது முதல் ஊழல். அதையும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய சொல்லாமல், ”அவன் வங்கிக்கணக்கில் போடு” என்று நியோமேக்ஸ் கை காட்டிய நபருக்கு பணத்தை போட்டது அடுத்த ஊழல். அப்படியும், போட்ட பணத்திற்கும் இடத்தை எழுதிக் கொடுக்காமல், நம்பகமில்லாத வெற்று பாண்டு பத்திரத்தையும் வாயில் நுழையாத பெயர்களை தாங்கிய டுபாக்கூர் கம்பெனிகளின் பெயர்களிலும் ரசீதுகளை வழங்கிய போதும்கூட வாயைத் திறக்காமல் அதனை பத்திரமாக வாங்கி வீட்டு பீரோவில் வைத்து அடைகாத்தது மேலும் ஒரு ஊழல். ”உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்” என்பது, நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு மாத்திரமா என்ன?

”பாதிக்கப்பட்டவர்கள்” என்ற இடத்தில் நீங்கள் இருப்பதால்தான் பரிவோடு புகார் கொடுங்கள் என கோரிக்கை வைக்கிறார்கள். அதுவும், பாதிப்பின் ஆழம் அறிந்து அதற்கேற்ப வழக்கை கையாளவும் விரைந்து முடிப்பதற்காகவும். எப்படியோ போய் தொலையுங்கள் என்று இப்படியே விட்டு விலக வேண்டுமென்பது நியோமேக்ஸ் நிறுவனத்தை நடத்தியவர்களுக்கு மகிழ்ச்சியை தரலாம். ஆனால், உங்களுக்கு?

”மோசடியான நிறுவனம் என்று தெரிந்துதான் முதலீடு செய்திருக்கிறீர்கள். ஒருவகையில் நீங்களும் இந்த மோசடிக்கு துணை போனவர்கள்தான்” என்று உங்களையும் போலீசு தேடினால் தானாக வருவீர்கள் அப்படித்தானா? நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு, தன்னால் பலரும் பாதிக்கப்பட்ட துயரம் தாளாமல், தன்னைத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து மாண்டு போனார் கம்பம் சிவக்குமார்.

மற்றவர்கள் பார்க்க வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வேட்கையோடு வாழ்வை தொடங்கிய சிவக்குமார், முப்பது வயது முடிவதற்குள்ளாகவே முற்றிலுமாக முடிந்து போயிருக்கிறது அவர் வாழ்க்கை. மூன்றாண்டு திருமண வாழ்க்கை, இரண்டு வயதில் கைக்குழந்தையோடு கணவனை இழந்து நிர்க்கதியாக நிற்கிறார் அவரது மனைவி ஜெனித்தா.

கம்பம் சிவக்குமார் - ஜெனித்தா குடும்பத்தினர்.
கம்பம் சிவக்குமார் – ஜெனித்தா குடும்பத்தினர்.

இவ்வளவுக்குப் பிறகும், “சிவக்குமார் சாவுக்கும் நியோமேக்ஸ் நிறுவனத்துக்கும் சம்பந்தமில்லை” என்று ஒருவரால் சமாதானம் கொள்ள முடியுமென்றால் … “யார் பிணம் விழுந்தாலும் பரவாயில்லை; நான் போட்ட பணம் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்” என்று இயல்பாக கடந்து போக முடிகிறதென்றால் … போலீசில் புகார் கொடுத்தவர்களையெல்லாம் ஏளனமாகவும் எள்ளி நகையாடும் விதமாகவும் வெளிப்படையாகவே பேச முடிகிறதென்றால் … அதைவிட வக்கிரம் வேறு இருக்க முடியுமா?

நியோமேக்ஸ் நிறுவனத்தில் பணத்தை இழந்து கணவனை இழந்து கைக்குழந்தையுடன் பரிதவிக்கும் கம்பம் ஜெனித்தாவுக்கு இதுவரை ஒற்றை ரூபாய் கூட வழங்காதவர்கள் தான், மொத்த பணத்தையும் கொடுத்து கணக்கு தீர்ப்பார்கள் என்று காத்திருக்கும் உங்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?

வே.தினகரன்.

9 Comments
  1. . says

    Sir, why don’t write an article about who is allegedly taken money from account through app. So many were affected, still no one got that money.

  2. . says

    Sir, why don’t write an article about who is allegedly taken money from account through app. So many were affected, still no one got that money.

    1. வே.தினகரன் says

      பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து தகவல்களை பரிமாறிக் கொள்ளாதவரையில் யாராலும் எதுவும் செய்ய இயலாதல்லவா? அலுவலக மின்னஞ்சல் அல்லது வாட்சப் எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கு தெரிந்த விவரங்களை பகிருங்கள்.

  3. Sarathi says

    How much u r charging for front page advertisement and u don’t hav any other news to post in your publish except neomax

    1. வே.தினகரன் says

      அங்குசம் இணையம் மற்றும் அச்சு இதழில் நியோமேக்ஸ் தவிர வேறு செய்திகளே இடம் பெறவில்லையா? கண்ணாடியை துடைத்து விட்டு மீண்டும் ஒரு முறை பாருங்கள் சார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம்… என்ற கதையாக அங்குசம் என்றாலே நியோமேக்ஸ் என்பதாக தங்களுக்கு படுகிறது போல! அய்யோ பாவம்!

  4. Sarathi says

    All your news about neomax seems like threatening the common person n who are not affected
    Wats your intention
    To save common people
    Or to kill them by your news

  5. Muthulinkam says

    நீங்கள் மேலே சொன்ன செய்தியில் 99% பொய்யும் கட்டு கதையும் தான் அதிகமாக உள்ளது, நீங்கள் நிருபரா கதை ஆசிரியரா?
    கம்பம் சிவகுமார் சம்பவம் 6மாதம் ஆச்சு இப்போதான் உங்களுக்கு தெரியுமா? உங்கள் அறிவுக்கு எட்டுன இந்த கதை போலீஸ் க்கோ மற்ற அமைப்புகளுக்கோ தெரியாதா, இந்த ஒரு செய்தி போதும் நீங்கள் எதை எதிர்பார்த்து நியோமாக்ஸ் கம்பெனி யை டார்கெட் பண்றிங்க னு, இப்படி பிண அரசியல் பண்றதில் இருந்தே நீங்க ஏரோட பினாமி னு தெரியுது…….

    1. J.Thaveethuraj says

      ஏஜெண்ட் ஆகிய நீங்கள்… இப்படி சொல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம்…

  6. Ganesan P says

    இந்தியாவுல இந்த புதிய தொழில் நிறுவனம் Neomax நல்ல வரையறை செய்யப்பட்டு , வி‌திமுறைகளை வகுத்து சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுத்ததப்படவேண்டும். ஏ‌ற்கனவே RARA , TTC , Approved அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. அடுத்து செபி மற்றும் RBI அனுமதிக்கு செயல் திட்டங்களை தயார்ப்படுத்தி கொண்டிருக்கும் வேலையில் ஒரு சில இடங்களில் சில தவறுகள் ஏற்பட்டது உண்மையாக இருந்தாலும்கூட இந்த தொழில் நிறுவனம் பொருளாதார குற்றப் பிரிவுக்கு உட்படுத்தப்பட்டது உண்மை தான். இருந்தாலும்
    இதை பயன்படுத்தி பொருளாதார குற்றம் என குற்றம்சாட்டப்பட்டு முடக்கியது , பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டாலும் கூட , இந்த புதிய தொழில் முனையம் முனையும் நிறுவனமாக , வளர்ந்து கொண்டிருக்கிறது . அறிவார்ந்தவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு செயல்பட வழி காட்டுங்கள். நாட்டின் பொருளாதாரம் பெருகும் , வேலைவாய்ப்பு உருவாகும் , அரசுக்கு வருவாய் பெருகும் . இந்த தொழில் முனைய நிறுவனம் , நிதி நிறுவனம் அல்ல. இந்த நிறுவனத்தின்
    மீது தவறு செய்பவர்கள் கடுமையாக தண்டித்தும் அவர்கள் சொத்துக்கள் முடக்கியும் , அபதாரம் மற்றும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட வேண்டு்ம் . எதிர்கால இந்தியாவை உருவாக்க இப்படிப்பட்ட நிறுவனம் சட்ட ரீதியாக செயல்பட வழி காட்டுங்கள் . ஏன் வெளிநாட்டுல தொழில் செய்ய வாருங்கள் என கெஞ்ச வேண்டும். வெறும் பணத்தைமட்டும் வைத்து நிதி நிறுவனம் என்ற பெயரில் பல மடங்காக வட்டி தருவதாக கூறி ஏமாற்றி, ஏமாந்தவங்க புகார் கொடுக்க போராட்டத்துக்கு , மாநாட்டுக்கு வந்ததைப் போன்று கூட்டம் கூட்டமாக குவிகின்றார்கள். இந்த புதிய நிறுவனம் அப்படிப்பட்டதல்ல . ரியல்எஸ்டேட் மூலதனமாக கொண்டு ஸ்மார்ட் சிட்டி , பள்ளி , கல்லூரி , மருத்துவமனை (மருத்துவச் சலுகை) , ஹோட்டல் , பெட்ரோல் பங்க் , தீம்பார்க் , பொருள் கொள்முதல் விற்பனை , பொருள் உற்பத்தி விற்பனை , சூப்பர் மார்கெட் , உடற்பயிற்சி மையம் extra …. பல தொழில் நிறுவனங்களை உருவாக்கி ஆயிரக்கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது . இதுவா நிதி நிறுவனம் , பத்திரிக்கை ஊடகவியலார்களே ஆராய்ந்து பாருங்கள். உலக நாடுகள் இப்படிப்பட்ட நல்ல நிறுவனங்களால் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர். பொருளாதார வல்லுநர்களும் , சட்ட வல்லுநர்களும் ஆராய்ந்து வளர்ச்சி அடைந்த நாடாக தன்னிறைவை அடைய சட்ட நெறிமுறைகளை சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வழி காட்டுங்கள் . 2008/8 முதல் யாரையும் ஏமாற்ற நினைத்ததில்லை கூட்டு நிறுவாகம். தவறுகளையும் , பொருளாதார குற்றத் தவறுகளுக்கு உட்பட்டடது , என்பதை சுட்டிக்காட்டி தவறை திருத்தி கொள்ள வாய்ப்பு அளித்து , மக்கள் தொகை பெருக்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இது போன்ற தொழில் முனைவோர் நிறுவனத்தை கைகோர்த்து ஊக்குவிக்க வேண்டும்.தொழில் நிறுவனங்களால் நாடு ஏற்றமடையும் என்பது சாத்தியமானதாகும் .

Leave A Reply

Your email address will not be published.