புனிதமான நோக்கத்தை சிதைத்த அதிகாரிகளும் நியோமேக்ஸ் நிறுவனமும் !
புனிதமான நோக்கத்தை சிதைத்த அதிகாரிகளும் நியோமேக்ஸ் நிறுவனமும் !
நியோமேக்ஸ் வழக்கில் 29.04.2025 தேதியிட்டு, மே-06 அன்று வெளியான நீதிமன்ற உத்தரவில், முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் நியோமேக்ஸ் தொடர்பான நிலங்களின் மதிப்பை கண்டறிவதற்கான கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருந்தார் நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
வழக்கின் தகுதிவாய்ந்த அதிகாரியான மதுரை மாவட்ட வருவாய் அலுவலரை தலைவராக கொண்டு அமைக்கப்பட்ட இந்த கமிட்டியில், அந்தந்த மாவட்ட பதிவாளரை தலைவராகக் கொண்டு இரு மதிப்பீட்டாளர்களை உள்ளடக்கிய மூவரை கொண்ட துணைக்குழுவை அமைக்க வேண்டும் என்றும்; இந்த துணைக்குழுவுக்கு உதவியாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் இருவர், நியோமேக்ஸ் நிறுவனதரப்பில் ஒருவர் அங்கம் வகிக்கும் வகையில் இந்த கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

மே-12 ஆம் தேதி அந்தந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இந்த கமிட்டிகள் கூடி வேலைகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றும்; ஜூன்-05 ஆம் தேதி வரையிலான 25 நாட்களுக்குள் தங்களது மதிப்பீட்டறிக்கையை கமிட்டியின் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்; ஜூன்-05 முதல் ஜூன்-13 ஆம் தேதி வரையிலான 7 நாள் அவகாசத்தில் கமிட்டியின் தலைவர் அந்த அறிக்கையின் மீதான தனது கருத்துக்களோடு ஜூன்-13 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும்; இதற்கிடையில், மே-30 அன்று கமிட்டியின் தலைவர் அதுவரையில் நிறைவேறிய வேலைகள் குறித்த நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும்; மீண்டும் இந்த வழக்கின் விசாரணை ஜூன்-16 அன்று நடைபெறும் என்பதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியபடி, குறித்த நாளில் மாவட்ட கமிட்டிகள் கூடவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவு மாவட்ட பதிவாளருக்கு சென்று சேர்வதிலேயே கனிசமான காலதாமதம் ஆனது. உத்தரவு கிடைக்கப்பெற்ற சில மாவட்டப்பதிவாளர்களும்கூட, உடனடியாக கமிட்டி கூட்டத்தை கூட்டவில்லை. தீர்ப்பில் போதுமான தெளிவு கிடைக்கவில்லை என்பதை பதிலாக தெரிவித்திருந்தார்கள். அனைத்து மாவட்டங்களிலுமே, மதிப்பீட்டாளர்களை தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகள் தெரியாமல் தவித்தனர். வேறுவழியின்றி, தீர்ப்பில் இடம்பெற்றிருந்த மதிப்பீட்டாளர்களின் முகவரிக்கு கடிதம் அனுப்பி, வரவழைத்திருக்கிறார்கள்.

தற்போதைய நிலையில், 11 மாவட்டங்களிலும் சம்பிரதாயமான முறையில் முதல் கூட்டம் நடந்திருக்கிறது. சில மாவட்டங்களில் இடங்களை மதிப்பீடு செய்வதற்காக சென்றிருக்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளர்கள் தங்களை கலந்தாலோசிக்காமல், தங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தங்களுக்கு இந்த பணியை செய்வதில் விருப்பமில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
முதலீட்டாளர்கள் தரப்பு பிரதிநிதியாக தேனியில் நியமிக்கப்பட்ட செந்தில்குமார் என்பவரும், தான் சென்னையில் ஐ.டி. துறையில் பணியாற்றி வருவதால் இந்த பணியில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இதில் கொடுமையிலும் கொடுமை, தேனியில் நியமிக்கப்பட்ட இரண்டு மதிப்பீட்டாளர்களில் ஒருவர் இறந்தே ஆறு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. மற்றொருவர் விபத்தில் சிக்கி நடமாட முடியாத அளவுக்கு சிகிச்சையில் இருந்து வருகிறார். திருநெல்வேலியிலும், திண்டுக்கல்லிலும் மதிப்பீட்டாளர்களில் ஒருவர் விருப்பமில்லை என்று ஒதுங்கிவிட்டார். சிவகங்கை மாவட்டத்தில், இதற்கு முன்னர் இதேபோல 2020 இல் அரசுக்காக மதிப்பீடு செய்து கொடுத்ததற்கே இதுவரை பணம் வரவில்லை என்று சொல்லியே இந்த பணியை புறக்கணித்திருக்கிறார்.
தென்காசியில், சர்வே எண், குறிப்பான லொகேஷன் இல்லாமல் மதிப்பீடு செய்ய முடியாது என்று மதிப்பீட்டாளர் தெரிவித்திருக்கிறார். நியோமேக்ஸ் தரப்பில், போதுமான விவரங்களை தராமல் இழுத்தடிக்கிறார்கள். திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் மதிப்பீடு செய்வதற்காக, ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் நாகை மாவட்டத்தின் எல்லையில் வருவதால் அந்த மாவட்டத்திலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இடம் இருப்பதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவை திருநெல்வேலி மாவட்ட எல்லையில் வருவதால் அந்த இடங்களுக்கான மதிப்பீட்டு பணிகளும் தடைபட்டிருக்கின்றன.
தொகுப்பாக, 11 மாவட்டங்களிலும் முதல் கூட்டம் கூடியிருக்கிறது. மாவட்ட பதிவாளர்களிடையே தீர்ப்பு குறித்த தெளிவான புரிதல் இல்லை. குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட சில மாவட்டத்தின் பதிவாளர்கள், முனைப்போடு களம் இறங்கி, வருவாய்த்துறை அதிகாரிகளையும் இணைத்துக் கொண்டு மதிப்பீடு செய்யும் வேலையை தொடங்கியிருக்கிறார்கள். இந்த இடங்களில் நியோமேக்ஸ் நிறுவனத் தரப்பில் போதுமான விவரங்களை தராமல் இழுத்தடித்து வருவதாக, முதலீட்டாளர் தரப்பு பிரதிநிதிகள் குறிப்பிடுகிறார்கள்.
புனிதமான நோக்கத்தை சிதைத்த அதிகாரிகளும் நியோமேக்ஸ் நிறுவனமும் !
“புனிதமான நோக்கத்தை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள்” என்பதாக நீதியரசர் உருக்கமாக குறிப்பிட்டும்கூட, இந்த பணிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாதது நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. மதிப்பீட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் தரப்பு பிரதிநிதிகளையும் நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தது யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
அதுவே, இந்த பணிகளில் தற்போது ஏற்பட்டிருக்கும் சுணக்கத்திற்கு அடிப்படையாகவும் அமைந்திருக்கிறது. இதற்கு கீழும் நீதிபதி கீழிறங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மதிப்பீட்டாளர்களை கண்டறிந்து கமிட்டியில் போட்டிருக்க முடியாது. சிகப்புநாடாத்தனமான அதிகாரிகளின் பொறுப்பற்ற அணுகுமுறையும் மற்றொரு காரணமாக அமைந்திருக்கிறது. மூன்றாவது காரணமாக, நியோமேக்ஸ் நிறுவனத்தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததும் அமைந்திருக்கிறது. பொருந்திருந்துதான் பார்ப்போமே, என்னதான் செய்கிறார்கள் என்று?
— அங்குசம் புலனாய்வுக்குழு.