படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் பெற வாய்ப்பு !
படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) என்ற திட்டத்தை மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.10 இலட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.500 இலட்சம் வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (மாசு ஏற்படுத்தும் தொழில்கள் நீங்கலாக) மற்றும் சேவைதொழில் துவங்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பட்டயபடிப்பு (டிப்ளமோ), இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்விதகுதி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் தேர்வு செய்யப்பட்டு, தொழில் முனைவோர் பயிற்சி அளித்து, தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்து வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின்கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு, தொழில் திட்டமதிப்பீட்டில் 25% அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை முதலீட்டு மானியமும், 3% வட்டி மானியமும் அளிக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கூடுதலாக 10% மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பட்டயபடிப்பு (டிப்ளமோ), இளங்கலைபட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்விதகுதி பெற்றிருத்தல் வேண்டும். வயது 21க்குமேல் 45-க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 55 ஆகும். பயனாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் செலுத்த வேண்டும்.சிறப்பு பிரிவு பயனாளிகள் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் கிராமவங்கிகள் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
எனவே, இம்மாவட்டத்தைச் சார்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.