*எம்.ஜி.ஆர். ‘அப்படிப்பட்ட ஆளா?’*–‘குற்றம் தவிர்’ டிரெய்லர் ரிலீஸ் குபீர் நியூஸ்!
ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’. இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, சென்றாயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா , மீசை ராஜேந்திரன், ராணுவ வீரர் காமராஜ், குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவு:பாஸ்கர், இசை: ஸ்ரீகாந்த் தேவா, எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக்.’படத்தின் டிரெய்லர் &, பாடல்களை இசையமைப்பாளர் & இயக்குனர் கங்கை அமரன் வெளியிட்டார். சென்னை பிரசாத் லேபில் ஏப்ரல் 27- ஆம் தேதி இரவு நடந்த விழாவில் பேசிய சிலர்….
படத்தின் தயாரிப்பாளர் *பாண்டுரங்கன்*
“நாங்கள் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்தாலும் படப்பிடிப்புகள் பெரும்பாலும் அங்கே நடந்திருந்தாலும் தமிழ்நாட்டு நடிகர்களையே முழுதாகப் பயன்படுத்திப் படம் எடுத்து இருக்கிறோம்.
ஒரு படத்தின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது . அவர்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது . இந்தப் படத்தை வெற்றி பெற வைத்தால் மீண்டும் படமெடுப்பேன். அதேபோல் நான் பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பேன்.எனவே இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்”.
*கங்கை அமரன்*
“முதலில் கர்நாடகத்திலிருந்து படம் எடுக்க வந்துள்ள இவர்களை வரவேற்கிறேன்.
இங்கே கதாநாயகன் நாயகி தோன்றிய காட்சிகளைப் பார்த்தேன்.
பொதுவாக இதுபோல வெளியீட்டு நிகழ்ச்சிகளில் படத்தின் பாடல்களைப் போடுகிறார்கள், சண்டைக் காட்சிகளைப் போடுகிறார்கள். ஆனால், சென்டிமெண்ட் காட்சிகளையோ நகைச்சுவைக் காட்சிகளையோ போடுவதில்லை .
இனி அதையும் போட்டுக் காட்ட வேண்டும் . அதையும் சேர்த்துக் காட்டுங்கப்பா .அதைப் பார்க்கும் போது தான் நடிகர்களுக்கு நடிப்புக்கான மதிப்பெண் கொடுக்க முடியும். இது ஒரு அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். எப்போதும் நான் வெளிப்படையாகப் பேசுவேன். ஏதாவது குறை இருந்தாலும் சொல்வேன். எனக்கு மனதில் தோன்றியதைச் சொன்னேன் .
இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா நன்றாக இசையமைத்துள்ளார் . அவர் எனது உறவினர் தான். நம்ம வீட்டுப் பிள்ளை.
பெங்களூரில் இருந்து படம் எடுக்க இங்கே வந் திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் “.
*இயக்குநர் கஜேந்திரா*
“இது எங்களுக்கு முதல் படம்.நாங்கள் புதிதாகப் படம் எடுக்க வந்திருக்கிறோம் அனைத்து நடிகர்களையும் சென்னையில் இருந்து வரவழைத்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறோம். இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் . தயாரிப்பாளர் எந்தக் குறையும் இல்லாமல் எங்கள் அனைவரையும் நன்றாகப் பார்த்துக் கொண்டார்”.
*ஹீரோ ரிஷி ரித்விக்*
” நான் வில்லனாக நடித்தேன் . இப்போது இதில் கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்ற போது நான் முதலில் யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் உடனே ஒரு லட்ச ரூபாய் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது . உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரின் ஈடுபாடும் உழைப்பும் சாதாரணமானதல்ல.
படம் ஒரு நல்ல கருத்தைப் பற்றிப் பேசுகிறது . இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்”.
*கதாநாயகி ஆராதியா*
” ஒவ்வொரு படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சிறப்பாகச் செய்யும் ஊடகங்களுக்கு நன்றி .இந்தப் படத்தையும் கொண்டு செல்லுங்கள் . ‘மதிமாறன்’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது .அதன் மூலம் என்னை அனைவருக்கும் தெரிய வைத்த இயக்குநர் மந்த்ரா சாருக்கு நன்றி .நான் இதுவரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. மற்றவை வெளிவர உள்ளன. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவரது குழுவினரும் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டதற்கு நன்றி “.
*பருத்திவீரன் சரவணன்*
“நான் இதில் வில்லனாக நடித்திருக்கிறேன்.
படப்பிடிப்பு பெங்களூரிலும் கர்நாடகாவின் சில பகுதிகளிலும் நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து படப்பிடிப்புக்காக அங்கே செல்கிறோம் எப்படி இருக்குமோ என்று தயங்கியபடியே சென்றேன். ஆனால் ஏர்போர்ட்டில் இறங்கியது முதல் அவர்கள் என்னை வரவேற்று அழைத்துச் சென்று தங்க வைத்து உபசரித்தது வரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பின் போதும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்.
அவர்களின் அந்த நல்ல மனதிற்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்”.
*நடிகை வினோதினி
“ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் தான் அடித்தளம் . முதலில் தயாரிப்பாளரைப் பார்த்தபோது இந்தப் படத்தை எப்படி எடுப்பாரோ? படத்தை எப்படிக் கொண்டு போய்ச் சேர்ப்பாரோ என்று கேள்வி இருந்தது. ஆனால் அவர் அனைத்தையும் கரெக்டா திட்டமிட்டுச் செய்தார் . திட்டமிட்டுச் செயல்படுவதில் அவர் என்னை ஆச்சரியப்படுத்தினார்.
ஒரு திரைப்பட விழாவுக்கு இத்தனை பேர் வந்திருக்கிறார்கள் . அந்த அளவிற்கு அவர் உறவுகளைச் சேர்த்து வைத்துள்ளார் .இந்த உறவுகளே அவருக்கு வெற்றியைத் தேடித் தரும் .இந்தப் படத்தில் நான் அம்மா பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவுடன் இணைந்து நடித்திருக்கிறேன். நான் நடித்த அம்மா பாடல் சிறப்பாக வந்துள்ளது.அனைவருக்கும் நன்றி”.
ராணுவ வீரரும் நடிகருமான *காமராஜ்*
” இதுவரை தைரியம், ஐ, மெர்சல், சிங்கம் 3 ,சுல்தான் போன்ற படங்களில் நான் நடித்திருக்கிறேன். இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறேன் . எனது முகநூல் பார்த்து ‘ஐ’ பட வாய்ப்பு கொடுத்த ஷங்கர் அவர்களை மறக்க முடியாது.
இந்தப் படத்தில் நான் ஒரு கேரக்டரில் நடிச்சுருக்கேன்.
சினிமா ஆர்வம்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. சினிமா அனைத்தையும் கற்றுக் கொடுக்கும்”.
*பெங்களூரு புகழேந்தி*
” குற்றம் தவிர் என்ற தலைப்பே சேதி சொல்கிறது.இந்த தலைப்புக்காகவே இந்தப் படம் ஓட வேண்டும்.
சினிமா தான் தலைவர்களை கொடுத்தது. சினிமாவில் ஜெயிப்பது நீச்சல் தெரியாதவன் நீச்சல் போட்டிக்கு வருவது போல.
எம்ஜிஆர் படங்களில் குற்றவாளியைப் போலீஸ் கைது செய்வது போல் தான் இருக்கும் . தண்டிப்பது போல கொலை செய்வது போல இருக்காது .ஆனால் இப்போது படங்களில் எல்லாம் கதாநாயகர்கள் கத்தியைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்” .
*பாடலாசிரியர் கு. கார்த்திக்*
“இந்தப் படத்தில் ஒரு கானா பாடல் உட்பட நான்கு பாடல்கள் எழுதி இருக்கிறேன்.பாடலாசிரியர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பது கடினம். இதில் அதைச் சரியாகக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் அவ்வளவு தெளிவானவர்.
பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன மகிழ்ச்சி”.
*இயக்குநர் ராஜகுமாரன்*
” குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள். குற்றம் தவிர் என்பது இந்த படத்தின் பெயர். உறவுகளில் குற்றம் பார்க்கக் கூடாது. தவிர்க்க வேண்டும். தயாரிப்பாளர் அனைவருக்கும் சம்பளத்தை பாக்கி இல்லாமல் கொடுத்தார் என்றார்கள். அதனால் தான் இயக்குநர் சிறந்த படமாக எடுத்திருக்கிறார். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து வந்து படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் வெற்றி பெறட்டும். பல தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்”.
இசையமைப்பாளர் *ஸ்ரீகாந்த் தேவா*
“நான் ஒரு பாடல் காட்சியில் ஆடி நடித்தேன். அதன் படப்பிடிப்பு இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை சென்றது. ஒரு குடிசைப்பகுதியில் நடந்தது. சுற்றிலும் மக்கள் கூடி இருந்தார்கள்.பத்து மணிக்கு சாப்பாடு வந்திருந்தது.ஆடிய களைப்பு பசியாக இருந்தது. சாப்பிடலாம் என்று திரும்பிப் பார்த்தபோது சாப்பாடு எங்கள் கைக்கு வரவில்லை. தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அதை எல்லாம் கூடி இருந்த மக்களுக்குக் கொடுத்து விட்டார்.சில நிமிடங்கள் பொறுத்திருங்கள் என்று எங்களுக்குப் புதிதாக வரவழைத்துக் கொடுத்தார்.அப்படிப்பட்ட நல்ல மனதுக்காரர் பாண்டுரங்கன்.
இந்தப் படத்தில் எனது அப்பா பாடல் பாடியது சிறப்பானது. படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் “.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
*இயக்குநர் பேரரசு*
“இங்கே பேசியவர்கள் பலரும் எம்ஜிஆர் பற்றிப் பேசினார்கள். எம்ஜிஆர் மட்டும் தான் வில்லனைக் கொல்ல மாட்டார். எந்தப் படத்திலாவது அவர் நம்பியாரைக் கொன்றிருக்கிறாரா?கெட்டது செய்பவர்களைக் கூட திருந்த வைப்பார்.
அதனால்தான் அவரைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.இப்போதெல்லாம் பழிவாங்க உடனே சுட்டு விடுகிறோம்.
சினிமாதான் அனைத்து துறையினரையும் ஒன்றிணைத்து வாழவைக்கும் துறை. இங்கே ஸ்ரீகாந்த் தேவா வந்திருக்கிறார் பாடல்கள் சிறப்பாக கொடுத்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”.
விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன் கர்நாடக பாரம்பரிய முறையில் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தது , தமிழ் சினிமா விழாவில் முதன்முறை அதிசயம்.
— மதுரை மாறன்.