மதுரை – இரசிகர் மன்றங்களின் தலைநகர் : சில்க் முதல் த்ரிஷா வரை அலசல் !
தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டியர் ஆண்டனர் என்ற வரலாறு உண்டு. இலக்கியங்களோடு தொடர்புடைய வைகை ஆறும் அதற்கு அடிப்படை காரணம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, மட்டன் சுக்கா, பன் புரோட்டா, அப்பம், மசால் – உளுந்தவடை, பனியாரம் என்று மதுரைக்கு என்று பல புகழ்கள் உள்ளன. உச்சமாக தூங்கா நகரம் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. அப்படிப்பட்ட மதுரை இரசிகர் மன்றங்களின் உலகமாகவும் இருந்துள்ளது … இருந்து வருகின்றது. இரசிகர் மன்ற செயல்பாடுகளில் மதுரையைப் பொறுத்தவரை அதிகம் ஈடுபாடு காட்டியவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்.
சிவாஜி நடித்த கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களின் வெற்றிக்குப் பிறகு மதுரையில் சிவாஜிக்கு இரசிகர் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. திமுகவின் முன்னணித் தலைவர் மதுரை முத்து, எம்.ஜி.ஆர் இரசிகர் மன்றத்தை மதுரையில் தொடங்குகின்றார். பின்னர் நற்பணி மன்றங்களாகவும் மாற்றம் பெறுகின்றன. திருச்சியில் எம்.ஜி.ஆர் மன்றங்கள் தொடங்க காரணமாக இருந்தவர் திமுகவின் அன்பில் தர்மலிங்கம் என்பது வரலாறு. திமுகவின் கிளை அமைப்பாகவே எம்ஜிஆர் இரசிகர் மன்றங்கள் இயங்கின.
மதுரையில் தொடர்ந்து நடிகர்கள் எஸ்.எஸ்.இராஜேந்திரன், ஜெய்சங்கர், இரவிச்சந்திரன், ஏவிஎம் இராஜன், ஜெமினிகணேசன், முத்துராமன் ஆகியோருக்கு செல்லூர், ஆரப்பாளையம், கீழவாசல் போன்ற பகுதிகளில் தனித்தனி இரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வந்தன.
1980களில் இரஜினிகாந்த்க்கு மதுரையில்தான் முதன்முதல் அதிகாரப்பூர்வ இரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. இதற்குப் போட்டியாக மதுரையின் பல பகுதிகளில் “வீரத்தமிழன் கமல் இரசிகர் மன்றங்கள்” தொடங்கப்பட்டன.
1980களுக்குப் பிறகு நடிகர்கள் விஜயகாந்த் சத்யராஜ், பிரபு, இராமராஜன், முரளி மற்றும் மோகன் ஆகியோருக்கும் இரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டன.
‘பூவே உனக்காக’ (1996) படத்திற்குப் பிறகு மதுரையில் விஜய் ரசிகர் நற்பணி மன்றங்கள் வேகமெடுத்தன. இது பின்னாளில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. அடங்காத அஜித் குரூப்ஸ்’ போன்ற பல பெயர்களில் மதுரையின் தெருவெங்கும் அஜித் ரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டன.
2000த்திற்கு பிறகு சூர்யா, விக்ரம், தனுஷ், சிலம்பரசன் ஆகியோருக்கும் மதுரையில் தனித்தனி மாவட்ட ரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. காமெடி மற்றும் துணை நடிகர்கள் வடிவேலு, கவுண்டமணி -செந்தில் போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கும் மதுரையில் கிளை மன்றங்கள் இருந்தன.
2010-க்குப் பின் அறிமுகமான நடிகர்களில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கு மதுரையில் கிளை நற்பணி மன்றங்கள் விரிவடைந்தன.
நடிகர்களுக்கு மட்டுமே இரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட மதுரையில்தான் நடிகைக்கு முதன்முதலாக இரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது.
80-90களில் தமிழ்த்திரை உலகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சில்க் என்று அழைக்கப்படுகின்ற நடிகை ஸ்மிதாவுக்கு மதுரையில் “அகில உலக சில்க் இரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. 1980-90களில் நடிகை ஸ்ரீதேவி மற்றும் குஷ்பூவிற்கு மதுரையில் அபிமானிகள் மன்றங்கள் செயல்பட்டன. 1990-களின் பிற்பகுதியில் சிம்ரன் , ஜோதிகா நடிகைகளுக்கும் ரசிகர் மன்றப் பலகைகள் மதுரையின் சில பகுதிகளில் வைக்கப்பட்டன. 2010-க்குப் பிறகு நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளுக்கு மதுரை மாவட்ட நற்பணி மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்தவுடன் நடிகை திரிஷா பெயரில் தொடங்கப்பட்ட ரசிகர் மன்றத்தின் சிறப்பு என்னவென்றால், முறையாக பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அரசின் அங்கீகாரம் பெறப்பட்டு பதிவு எண் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான். தமிழ் திரையுலகில் “ரசிகர் மன்றங்களின் தலைநகரம்” என்ற பெருமையோடு மதுரை வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.
— ஆசைத்தம்பி







Comments are closed, but trackbacks and pingbacks are open.