விதிமுறை மீறிய ஹோம் ஸ்டே விடுதிகள் ! நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் !
உதகை நீலகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் 920 ஹோம் ஸ்டே மற்றும் தங்கும் விடுதிகளில், இதுவரை 76 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு (நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி) முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
உதகை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் ஹோம் ஸ்டே மற்றும் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுத்து சீல் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நீலகிரி மாவட்டத்தில் 920 ஹோம் ஸ்டே மற்றும் தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 844 விடுதிகளுக்கு சீல் வைக்க இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இதுவரை 76 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள விடுதிகளின் கட்டட உரிமை உள்ளிட்ட ஆவணங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சட்டவிரோத விடுதிகளை உள்ளூரைச் சேர்ந்த 521 பேரும், வெளியூரைச் சேர்ந்த 399 பேரும் நடத்தி வந்தது தெரியவந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், வனத்துறை சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் சிறப்பு வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி, நீலகிரி மாவட்டத்தில் விதிமுறை மீறிய சுமார் 920 ஹோம் ஸ்டே தங்கும் விடுதிகளுக்கு இதுவரை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், 76 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர் . இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டு, நிலை அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து, அன்றைக்கு எத்தனை ஹோம் ஸ்டே (Home Stay) விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் சட்ட விதிகளை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை, மின்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் 21-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.