குளித்தலை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!

கே.எம்.என்.

0

அங்குசம் செய்தி எதிரொலி

கடந்த வாரம் முதல் வாரத்தில் நமது அங்குசம் செய்தி இதழில், “கலைஞர் வென்ற முதல் தொகுதியில் பேருந்து நிலையத்திற்காக 3 தலைமுறையாக போராடும் மக்கள்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில்,

“கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி பேரூராட்சி நிர்வாகத்தில் இருந்து கடந்த 1995ஆம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 24 வார்டுகளை கொண்டு செயல்படுகிறது. தரம் உயர்ந்து இந்த 22 ஆண்டுகளில் அப்பகுதியின் மக்கள் தொகை 4 மடங்கு அதிகரித்துவிட்டது.

கடந்த 1957-ல் குளித்தலை தொகுதியில் கலைஞர் முதன்முதலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 5 முறை தமிழ்நாடு முதலமைச்சர். அப்படிப்பட்ட கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலைக்கு இதுநாள் வரையிலும் ஒரு நகராட்சிக்கு ஏற்ற வகையிலான பேருந்து நிலையம் இதுவரை இல்லை.

புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்பது குளித்தலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது” என குறிப்பிட்டு விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

நமது செய்தியை அடுத்து குளித்தலை நகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை, காவல்துறை ஆகியோர் ஒன்றிணைந்து பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டன. திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 1963ஆம் ஆண்டு, 1.22 ஏக்கரில் டானா வடிவில் தொடங்கப்பட்ட பேருந்து நிலையம், 59-ஆண்டுகள் கடந்தும் அதே நிலையில் எந்த மாற்றமும் இன்றி நீடித்து வருகிறது. பேருந்து நிலையம் குளித்தலை கடம்பர் கோவில் நிர்வாகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும்.

இந்த நிலத்தை, குளித்தலை நகராட்சி நிர்வாகம் வாடகை கொடுத்து நடத்தி வருகிறது. நகராட்சி நிர்வாகம் வைத்துள்ள வாடகை பாக்கி தொகை ரூ.50 லட்சமாகும். வாடகை பாக்கியை நகராட்சி நிர்வாகம் செலுத்தக் கோரி இந்து அறநிலைத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கும் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் நகராட்சி ஆணையர் கோர்ட்டில் ஆஜராகி அவகாசம் கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு 3ம் வகுப்பு படிக்கும் ஹரிஷ்மிதா என்ற பள்ளிச் சிறுமி, சென்ற  அதிமுக ஆட்சியின் போது, திமுகவைச் சேர்ந்த அப்போதைய எம்எல்ஏ. மாணிக்கத்திடம், (தற்போதைய எம்எல்ஏ) கொடுத்த கோரிக்கை மனுவில், என் பாட்டன் போராடி விட்டார்.

என் தந்தையும் போராடி விட்டார். நானும் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், நீங்களாவது சட்டமன்ற உறுப்பினராகி, குளித்தலைக்கு நல்ல பேருந்து நிலையத்தை பெற்றுத்தர வேண்டும் என்று அந்தப் பள்ளி சிறுமி அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருந்தார்.

சிறுமியின் கோரிக்கை நிறைவேறினால், திமுகவின் சாதனைப் பட்டியலில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிய பேருந்து நிலையம் என்ற வரலாறும் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது லோக்கல் அரசியல்வாதிகள் ஆசியுடன் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.