ஆன்லைன் லோன் : வசமாய் சிக்கிய கணவன் மனைவி !
ஆன்லைன் லோன் ஆப்-பை நம்பி கடன் வாங்கும் ஆசையில் ஒரு இலட்சம் ரூபாயை இழந்த நிலையில், அவரை ஏமாற்றிய கும்பலை கூண்டோடு பிடித்து அசத்தியிருக்கிறார்கள், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார்.
திருச்சி மாவட்டம் இலால்குடி புறத்தாக்குடியை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர், பேஸ்புக்கில் கேப்பிடல் பைனான்ஸ் – லோன் (Capital Finance – Loan) என்ற விளம்பரத்தை பார்த்து அதில் இடம்பெற்றிருந்த எண்ணில் தொடர்பு கொண்டிருக்கிறார்.
மூன்று இலட்ச ரூபாய் கடன் தருவதாக பேசியவர்கள், கேட்ட ஆவணங்களை அடுத்தடுத்து அனுப்பி வைத்திருக்கிறார் ஆரோக்கியசாமி. டாகுமெண்ட் பீஸ், அப்ளிகேஷன் பீஸ் என அடுத்தடுத்து ஒரு இலட்சம் ரூபாய் வரையில் கறந்திருக்கிறது, அந்தக் கும்பல். பணத்தை வாங்கியதோடு, சொன்னபடி மூன்று இலட்ச ரூபாய் கடனையும் தரமால் ஏமாற்றியிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஆரோக்யசாமி புகார் அளித்திருக்கிறார். திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை தேடி வந்தனர்.
போலீசாரின் தொடர் முயற்சிகளையடுத்து, செப்-19 அன்று தனிப்படை போலீசில் சிக்கியிருக்கிறது, ஆன்லைன் மோசடி கும்பல். திருப்பூரில் பதுங்கியிருந்த ஸ்ரீனிவாசன், கவிதா, கணபதி ஆகிய மூவரை கைது செய்திருக்கிறார்கள். இதில், கணபதியும் கவிதாவும் கணவன் – மனைவி என்பதுதான் ஹைலைட்.
மேலும், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 10 மொபைல் போன்கள், லேப்டாப், மோடம், 10 சிம் கார்டுகள், வங்கி கணக்குப் புத்தகங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
மோசடிக் கும்பலை விரைந்து கைது செய்த சைபர் கிரைம் போலீசு தனிப்படை போலீசாரை பாராட்டியதோடு, அவர்களது சிறந்த பணிக்கு வெகுமதி வழங்கவும் பரிந்துரைத்திருக்கிறார், எஸ்.பி. செல்வநாகரத்தினம்.
நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிக் கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி கவனத்தைப் பெற்றிருக்கிறது.
— ஆதிரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.