அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையன் …? திடீரென முளைத்த போஸ்டர் !
“செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி” என மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுகவில் பொதுச் செயலாளராக இருந்து வரும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அவ்வப்போது முன்னாள் அமைச்சர்களுக்கு இடையே சச்சரவுகள் எழுந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், எடப்பாடி தலைமையில் சிலரும் அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்கு பயணம் ஆனதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில்தான், மதுரையைச் சேர்ந்த முன்னாள் அதிமுக பிரமுகர் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, ராஜன் செல்லப்பா, தங்கமணி வேலுமணி, ஆகியோருடைய புகைப்படத்துடன் செங்கோட்டையனின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மதுரை மாநகர் மாவட்டம், மத்திய தொகுதி செயலாளர் மிசா செந்தில் என்ற பெயரில் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் செங்கோட்டையன் அவர்களுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி” என்பதாக அந்த வாசகம் அமைந்துள்ளது.
தனது புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டியிருக்கும் மிசா செந்தில், ஆரம்ப காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஆதரவாளராக இருந்தவர் என்றும் தற்போது கட்சியில் எந்த பொறுப்பிலும் அவர் இல்லை என்பதாக லோக்கல் கட்சி வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.