அங்குசம் பார்வையில் ‘படை தலைவன்’
தயாரிப்பு : ‘வி.ஜே.கம்பைன்ஸ்’ ஜெகன்னாதன் பரமசிவம். தமிழ்நாடு வெளியீடு : கேப்டன் சினிகிரியேஷன்ஸ் எல்.கே.சுதீஷ். டைரக்ஷன் : யு.அன்பு. நடிகர்-நடிகைகள்: சண்முகபாண்டியன் விஜயகாந்த், யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, யுகிசேது, முனீஸ்காந்த், அருள்தாஸ், ஏ.வெங்கடேஷ், ஸ்ரீஜித்ரவி, ரிஷி ரித்விக். இசை: இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு :எஸ்.ஆர்.சதீஷ்குமார் எடிட்டிங் : எஸ்.பி.அஹமது, ஸ்டண்ட் : மகேஷ் மேத்யூ, பி.ஆர்.ஓ.: சதீஷ் [ எய்ம் ].
பொள்ளாச்சி அருகே உள்ள மலைகிராமம் ஒன்றில் மண்பானை செய்து பிழைக்கிறார்கள் அப்பா கஸ்தூரி ராஜாவும் மகன் சண்முகபாண்டியனும். இவருக்கு ஒரு தங்கை. மண்பானை வியாபாரம் என்றாலும் 25 வருடங்களாக யானை ஒன்றை வளர்த்து வருகிறார்கள் அப்பாவும் மகனும். மணியன் என்ற யானையும் இவர்கள் மீது பாசமாக இருக்கிறது. சொந்த மச்சினனிடம் பட்ட கடனை அடைக்க முடியாமல், மணியன் யானையை கோவில் திருவிழாக்களுக்கும் கல்யாண வீடுகளுக்கும் வாடகைக்கு அனுப்புகிறார் சண்முகபாண்டியன். அதே நேரம் யானையால் கிடைக்கும் லாபத்தைக் கணக்குப் பண்ணும் ஒரு கும்பல் ஒன்று, யானையை கடத்திக் கொண்டு போகிறது. மணியன் இல்லாமல் வீடு திரும்பமாட்டேன் என கிளம்புகிறார் சண்முகபாண்டியன். கூடவே அவரது நண்பர்களும். அப்படி இப்படின்னு விசாரிச்சு ஒடிசாவில் இருக்கும் பழங்குடி கிராமத்தில் மணியன் இருப்பதை உணர்கிறார் சண்முகபாண்டியன்.
ஏதோ நம்மால முடிஞ்ச அளவுக்கு நமக்கு புரிஞ்ச அளவுக்கு கதையை எழுதிட்டோம். ஆனால் இப்படி ஒரு மோசமான கதையை, படுமோசமான திரைக்கதையை புகழ்பெற்ற நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனும் அவரது மூத்த மகன் விஜயபிரபாகரனும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் இவரது தம்பி சுதீஷும் எப்படி ஒத்துக் கொண்டார்கள்னு தான் நமக்குத் தெரியல.
படத்தின் தலைப்பிலேயே ‘த்’விட்டுப் போச்சு. அ, ஆ, எழுதத் தெரிந்த குழந்தைகூட படைத்தலைவன்’னு தான் எழுதும். நாமளும் அப்படித்தான் பார்த்திருக்கோம், படிச்சிருக்கோம். ஆனா டைரக்டர் அன்புக்கு மட்டும் ‘படை தலைவன்’னு எப்படித்தான் தோணுச்சோ. தலைப்பிலேயே தள்ளாட்டம்னா, படம் முழுக்க படுதள்ளாட்டமாகி, நம்மை கிறுகிறுக்க வச்சுருச்சு. ஒடிசாவுல வில்லன் குரூப், வனபத்ரகாளிக்கு சினைப் பசுமாடு பலி, யானை பலின்னு சுத்தலில்விட்டு அடிச்சுட்டார் டைரக்டர். எய்யா ராசா நீ யாருகிட்டயா டைரக்ஷன் தொழில்கத்துக்கிட்ட. ஒரு உப்புமா படம் எடுக்கும் டைரக்டர் கூட இவ்வளவு கேவலாம எடுக்கமாட்டானய்யா.
சண்முகபாண்டியனுக்கு இது மூணாவது படமாகிப் போச்சு. ஆனாலும் நடிப்பதற்கு ரொம்ப ரொம்ப திணறுவது அப்பட்டமாக திரையில் தெரிகிறது. சாரி சகோதரா.. இதுக்கு மேல சொல்ல விரும்பல. இன்னும் நல்லா பயிற்சி எடுத்துக்கிட்டு வாங்க. நெக்ஸ்ட் பெஸ்டா மீட் பண்ணுவோம். இந்தக் கதைக்கு இது போதும்னு நினைச்சாரா? இல்ல மியூசிக் கண்டக்டரிடம் பொறுப்பை ஒப்படைச்சாரா இசைஞானின்னு தெரியல.
‘படை தலைவன்’. தலைவனுக்குரிய எந்த அம்சமும் இல்லை.
— மதுரை மாறன்.