’படையாண்ட மாவீரா’ டிரெய்லர் ரிலீஸ்! – இயக்குனர் வ.கெளதமன் ஆவேசப் பேச்சு! நமக்கு வந்த டவுட்டு!
‘வி.கே.புரொடக்ஷன்ஸ்’ பேனரில் நிர்மல் சரவணராஜ், கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகி, விரைவில் ரிலீசாகவுள்ள படம் ‘படையாண்ட மாவீரா’. இயக்குனர் வ.கெளதமன் தலைப்பின் நாயகனாக நடித்து இயக்கியுள்ள இப்படத்தின் கதாநாயகியாக பூஜிதா நடித்துள்ளார். மற்ற கேரக்டர்களில் இளவரசு, சமுத்திரக்கனி, பாகுபலி பிராபகர், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, மதுசூதன்ராவ், மன்சூரலிகான், ஆடுகளம் நரேன், சரண்யா பொவண்ணன், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுத, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பின்னணி இசை : சாம். சி.எஸ்., ஒளிப்பதிவு : கோபி ஜெகதீஸ்வரன், எடிட்டிங் : ராஜாமுகமது, ஸ்டண்ட் : சில்வா. நடனம் : தினேஷ் & ஸ்ரீதர். இணைத் தயாரிப்பாளர்கள் ; கே.பாஸ்கர், குறளமுதன், யு.எம்.உமாதேவன். ‘படையாண்ட மாவீரா’வின் டிரெய்லர் வெளியீட்டு விழா, மே.30-ஆம் தேதி இரவு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் வீ.சேகர், வசந்தபாலன், பேரரசு, நீதியரசர், கலையரசன், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன், நா.த.க.வின் சீமான், பா.ம.க.வக்கீல் பாலு, மாஜி எம்.எல்.ஏ.கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ’பிக்பாஸ்’ புகழ் முத்துக்குமரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
தயாரிப்பாளர்கள் சரவணராஜும் கிருஷ்ணமூர்த்தியும் தங்களது வரவேற்புரையை சுருக்கமாக முடித்த பின், பேச வந்த இயக்குனர் வீ.சேகர், நீ……ண்ட நெடிய உரையை நிகழ்த்தி அரங்கத்தில் இருந்தவர்களை அசதியாக்கினார். காடுவெட்டிகுருவின் வீரத்தையும் போராட்ட குணத்தையும் புகழ்ந்து பேசினார் வக்கீல் பாலு. வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இயக்குனர் கெளதமனையும் படக்குழுவினரையும் வாழ்த்திப்பேசி அமர்ந்தனர்.
இயக்குனர் வ.கெளதமன் பேசும் போது,
“ மண்ணையும் மக்களையும் நேசிப்பது போல எனது திரைத்துறையையும் நேசிக்கிறேன். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் என்மீது மிகுந்த அக்கறை கொண்டு இப்படத்தை தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் கதை மக்களுக்கானது. ‘ஜெய்பீம்’ படத்தில் காடுவெட்டி குருவை தவறாக காட்டியதை நான் கண்டித்த போது, என்மீது சாதிச் சாயம் பூசினார்கள். அப்போது அப்படத்தின் டைரக்டர் எனக்குவிட்ட சவால் தான் இந்த படையாண்ட மாவீரா’. இந்த மாவீரன் அதே காடுவெட்டி குரு தான்.
என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகளைப் பற்றி படம் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, இரண்டு, தோழர் தமிழரசனும் காடுவெட்டி குருவும் வாழ்ந்த முந்திரிக்காடு, மூன்று தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிகாடு. இதில் ‘சந்தனகாடு’ டி.வி.சீரியல் எடுத்துவிட்டேன். இப்போது முந்திரிக்காட்டின் ஒருபகுதியாக இப்படத்தை எடுத்துள்ளேன். அடுத்தடுத்து தோழர் தமிழரசனின் கதையையும் வன்னிகாட்டில் பிரபாகரன் கதையையும் சினிமாவாக எடுக்காமல் நான் சாகமாட்டேன்” என ஆவேசமாகப் பேசினார்.
இதையெல்லாம் கேட்ட பிறகு இறுதியாகப் பேசிய சீமானின் ஆவேசத்திற்கு கேட்கவா வேண்டும். சும்மா பொள பொளன்னு பொளந்து கட்டினார் அண்ணன் சீமான்.
இது நமக்கு வந்த டவுட்டு!
‘படையாண்ட மாவீரா’வின் விழா சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடந்தது. ஆனால் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவும் டான்ஸ் மாஸ்டர் தினேஷும் மட்டுமே ஆஜராகியிருந்தனர். ஹீரோயின் பூஜிதா உட்பட நடிகர்கள் [ இளவரசு தவிர ] மியூசிக் டைரக்டர்கள் ஜி.வி.பிரகாஷ், சாம்.சிஎஸ் என எல்லோருமே ஆப்செண்டாகிவிட்டனர். அது ஏன்? இதான் நம்மோட டவுட்டு.
— மதுரை மாறன்.