விக்ரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி திடீர் மரணம் !
நேற்று மாலை விழுப்புரத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் புகழேந்தியும் பங்கேற்று இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
விக்ரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி திடீர் மரணம் !
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று (ஏப்.6) காலை 10.35 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 71. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி 1973 -ம் ஆண்டு முதல் தொடர்ந்து திமுகவில் கட்சிப்பணி ஆற்றி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். திமுக.வின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இருப்பினும், புகழேந்தியின் உழைப்பின் மீது நம்பிக்கைக் கொண்ட பொன்முடி 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் புகழேந்திக்கு மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதனை பயன்படுத்திக் கொண்ட புகழேந்தி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து திமுகவினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் புகழேந்தியும் தீவிர வாக்குசேகரிப்பில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை விழுப்புரத்தில் நடந்த முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் புகழேந்தியும் பங்கேற்று இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே அவருக்கு சிகிச்சை அளிக்க உதவிடும் வகையில் சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவக்குழுவினர் விழுப்புரம் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏற்கெனவே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். எம்எல்ஏவின் திடீர் மறைவு, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கே.எம்.ஜி.