பொறிவைப்பு நடவடிக்கையில் சிக்கிய விஏஓ-க்கு 2 ஆண்டுகள் சிறை !
புகார்தாரர் கு.சதீஸ்குமார் வயது 46/2025, த/பெ.குணசீலன் என்பவரது மூத்த சகோதரி பெயரில் வாங்கிய வீட்டு மனைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை வழங்குவதற்காக ரூ.2,000/- கையூட்டு கேட்டுப்பெற்ற வழக்கில், அகமது சுலைமான், வயது 73/2025, த/பெ.சாலியா முகமது, கிராம நிர்வாக அலுவலர், நவல்பட்டு கிராமம், (பொறுப்பு) குண்டூர் கிராமம், திருச்சி தாலுகா, திருச்சி மாவட்டம் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், கொரடாசேரி, வடக்கு மாங்குடி என்ற முகவரியில் வசித்து வந்த குணசீலம் மகன் புகார்தாரர் சதீஸ்குமார் என்பவரது மூத்த சகோதரி சுமதி என்பவர் திருச்சி மாவட்டம் குண்டூர் கிராம சர்வே எண்.71/4ஏ-ல் 2160 சதுரடி வீட்டு மனையை தன் பெயரில் கிரையம் பெற்றுள்ளார்.
புகார்தாரர் சதீஸ்குமார், தனது சகோதரியின் பெயரில் உள்ள வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் செய்வதற்கு, திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமம், (பொறுப்பு) குண்டூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் அகமது சுலைமான் என்பவரை கடந்த 01.11.2007ஆம் ஆண்டு காலை சுமார் 10.30 மணிக்கு அணுகியுள்ளார். அப்பொழுது குண்டூர் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலர் அகமது சுலைமான், புகார்தாரர் சதீஸ்குமாரின் சகோதரியின் பெயரில் உள்ள வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிட்டதாகவும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை கொடுப்பதற்கு ரூ.2,000/- லஞ்சமாக கேட்டு, அது தொடர்பாக சதீஸ்குமாரின் புகார்மனு பேரில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 01.11.2007 ஆம் தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து 02.11.2007 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் சதீஸ்குமார் என்பவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.2,000/-த்தை கேட்டு பெற்ற போது எதிரி அகமது சுலைமான், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
19.12.2025ஆம் தேதி விசாரணை முடிவுற்று, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு , அகமது சுலைமான் வயது 73/2025, த/பெ.சாலியா முகமது, கிராம நிர்வாக அலுவலர், நவல்பட்டு கிராமம் (பொறுப்பு குண்டூர் கிராமம்) திருச்சி தாலுகா, திருச்சி மாவட்டம் என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ1,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், மேலும் அரசு ஊழியர் என்ற பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேற்படி வழக்கில் DSP மணிகண்டன், Inspector அ.பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்தும், அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிகண்ணன் வழக்கை திறம்பட நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.