திருச்சியில் இளைஞர்களை ஏமாற்றும் தனியார் நிறுவனம்
திருச்சி தில்லை நகர் 4வது கிராஸில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் அலஸ் இனோவேசன்(ALAS INNOVATION). இவர்கள் இணையதளத்தில் வேலைவாங்கி தருவதாக விளம்பர இணையப்பக்கமான ஓ.எல்.எஸ்ஸில் விளம்பரம் செய்துள்ளனர். அதில், பகுதிநேர வேலையில் மாதம் 10ஆயிரம் சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்யவே, வேலையில்லாத இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் இந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இணைய பக்கத்தில் வைப்பு நிதியைப்பற்றி எந்த தகவலும் முழுமையாகக்கொடுக்காத நிலையில், அலுவலகத்திற்கு சென்று வேலைகுறித்து விசாரிப்பவர்களிடம் ‘எளிமையாக மாதம் 10ஆயிரம் சம்பாதிக்கலாம், ஆனால், அதற்கு வைப்பு நிதியாக ரூ.1500 செலுத்தவேண்டும். இதில் ரூ.1000த்தை முதல்மாத ஊதியத்துடன் திருப்பித்தரப்படும் என கூறுகின்றனர். இதனை நம்பி பலர் பணத்தைசெலுத்தி வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

இதில், பலருக்கு வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதம் கழித்தும், அவர்கள் தெரிவித்தபடி ஊதியத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். இது குறித்து நிறுவனத்திடம் வேலைபார்த்தவர்கள் சென்று கேட்கும் போது, நீங்கள் வேலையை சரியாக செய்யவில்லை என்று அலைக்கழிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கல்லூரிமாணவர்கள், பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அமுதா கூறுகையில், ALAS INNOVATION நிறுவனத்தின் விளம்பரத்தை ஓஎல்எக்ஸில் பார்த்தேன். பகுதி நேர வேலை மாதம் 10ஆயிரம் ஊதியம் என இருந்தது. எனவே, அலுவலத்திற்கு நேரில் சென்று விசாரித்தேன். வங்கி தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தான் வேலை, மிக எளிமையாக இருக்கும், எளிதில் வருமானம் வரும் கல்லூரி மாணவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு என கூறினார்கள்.
இறுதியாக ரூ.1,500பணம் செலுத்தவேண்டும். 1,000ம் முதல் மாத ஊதியத்துடன் திருப்பி கொடுத்து விடுவோம். ரூ.500 வைப்புதொகை என்றனர்.
நானும் செலுத்தினேன். முதலில் பயிற்சி பெற வேண்டும் என சொல்லி ஒரு நாளைக்கு 100 விளம்பரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அந்த லிங்கை இரவு 11 மணிக்குள் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என்றார்கள். அதற்காக வாரம் ரூ.1,000 ஊதியம் என்றார்கள். வேலைசெய்து கொடுத்தால், லிங்கை தவறாக அனுப்பிட்டீர்கள், நேரம் முடிந்து விட்டது என ஏதோ ஒரு காரணத்தை கூறி ஊதியத்தை தராமலேயே எங்களை அலைக்கழித்து வந்தனர்.
என் கல்லூரியில் உள்ள பலரும் என்னை போன்று இந்த நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு நாள் நேரில் சென்று இது குறித்து ALAS INNOVATION நிறுவனத்தில் கேட்ட போது மிரட்டும் தோணியில் பேசினார்கள். எனவே, தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தோம். பின்னர், நாங்கள் செய்த வேலைக்கு ரூ.2000மும், வைப்புத்தொகையாக பெற்ற ரூ.1500யையும் திரும்ப கொடுத்து விட்டார்கள்.
எங்களைப்போன்று பலர் பாதிக்கப்பட்டுள் ளார்கள் என அந்த நிறுவனத்தில் இருந்த எண்கள் பட்டியலை எடுத்து தொடர்பு கொண்ட பொழுது தான் எங்களுக்கே தெரிந்தது என்கிறார்.
மேலும், பாதிக்கப்பட்ட மற்றொரு கல்லூரி மாணவர் முத்தமிழ் கூறுகையில், படித்த வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களையே இவர்கள் குறிவைத்து இந்த வேலையை செய்கின்றனர்.
ஏனெனில், அவர்கள் தான் பணம் போனாலும் திருப்பி கேட்கமாட்டார்கள். அதுமட்டுமின்றி, அங்கு செல்லும் நபர்களை நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம், கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும் என முதலில் நன்கு மூளைசலவை செய்துவிடுகின்றனர். நாம் வேலையில் சேர்ந்து விடலாம் என முடிவெடுத்த பிறகே அவர்கள் வைப்புதொகையை பற்றி கூறுகின்றனர். இது போன்ற அதிக நிறுவனங்கள் திருச்சியில் உள்ளது. எனவே, மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றார்.