இந்த சமூகம் பெண்களை பற்றி இப்படிதான் பொது புத்தியில் பதிவு செய்து இருக்கிறதா ?
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் துரை வைகோ அவர்கள் நாடாளுமன்ற பணி இல்லாத நாட்களில், திருச்சி தொகுதியில்தான் காலை எட்டுமணி முதல் இரவு 9 மணிவரை மக்களிடம் மனுக்களை வாங்குவது மற்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்வது வழக்கம்.
சில நேரங்களில், இரவு உணவு இயக்கத் தோழர்களுடன் சேர்ந்து எதாவது, ஒரு ஹோட்டலில் சாப்பிடுவார்கள். கடந்த மாதம் அப்படி ஒரு இரவு நேர உணவுக்கு திருச்சியில் பிரபலமான ஹோட்டலுக்கு சென்றோம்.
முதல் டேபிளில் நான்கு இருக்கைகள் , ஒன்றில் அண்ணன் அமர்ந்து கொள்ள அவருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் மாவட்டசெயலாளர் அண்ணன் வெல்லமண்டி சோமு அவர்கள் அமர்ந்தார்கள் . அதற்கு எதிர்புறம் இருந்த இரண்டு இருக்கையில் ஒன்றில் நான் மட்டும் அமர்ந்திருந்தேன்.
பக்கத்து டேபிளில் இருந்த நான்கு இருக்கைகளிலும், நம் இயக்கத்தோழர்கள் அமர்ந்தார்கள்.
சாப்பாடு மெனு எடுப்பவர் முதலில் அண்ணன் துரைவைகோ அவர்களிடம் என்ன சாப்பிடுறீங்கனு கேட்டார். பிறகு, வெல்லமண்டி சோமுவிடமும் மெனு கேட்டு விட்டு என்னை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு எதுவும் கேட்காமல், அடுத்த டேபிளில் அமர்ந்து இருந்த நான்கு பேரிடமும் மெனு கேட்க போய்விட்டார். அண்ணன் துரைவைகோ டாக்டர் உங்களுக்கு வேண்டியதை சொல்லுங்கள் என்றபொழுது, வேண்டாம் அண்ணா, உங்களிடம் எல்லாம் கேட்ட அவர் என்னிடம் எப்பொழுது வந்து கேட்பார் என்று பார்ப்போம் என்றேன். அண்ணன் சிரித்துக்கொண்டு பேசாமல் இருந்தார்கள்.
ஆண்கள் அனைவரிடமும் மெனு கேட்டுவிட்டு இறுதியாக, என்னிடம் வந்து என்ன சாப்பிடுறீங்க மேடம்? என்றவுடன் அவர் முகத்தை ஒரு ஒரு வினாடி உற்றுப் பார்த்தேன்.
அண்ணன் துரைவைகோ உடனடியாக, ”என்னப்பா அவங்கதான் சாப்பாட்டுக்கு பணம் தரனும். அவங்க கிட்ட மெனு கேட்காமல் போய்டியேப்பா” என்றார். (அண்ணன் சில நேரங்களில் இப்படி Black comedy செய்வது உண்டு )
சாப்பாடு மெனு எடுத்த அந்த இளைஞர் ஏன் என்னிடம் இறுதியாக கேட்டுகொள்ளலாம் என நினைத்தார் ? Least priority பெண்களுக்கு தந்தால் பரவாயில்லை என அவருக்கு கற்றுக்கொடுத்தது யார் ?அவர் பிறந்து வளர்ந்த சூழ்நிலையா? அல்லது இந்த சமூகம் பெண்களை பற்றி இப்படிதான் பொது புத்தியில் பதிவு செய்து இருக்கிறதா?? பதிவை படிப்பவர்களுக்கு இது சாதாரண நிகழ்வாக இருக்கலாம். மீண்டும் ஒருமுறை படித்தால், அங்கு இருக்கும் நுண்ணரசியல் கொஞ்சம் புரியும் .
ஆண்குழந்தை, பெண்குழந்தை இருவரையும் உயிர்களாக மட்டுமே பார்த்து பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் நாங்கள். எனக்கு இந்த சாப்பாடு மெனு நிகழ்வு வருத்தம் அளிக்கிறது .
இன்று (மார்ச்-07) அதிகாலை 6 மணிக்கு 102 கிலோ எடை உள்ள ஒரு பெண்ணிற்கு பிரசவம் பார்த்துவிட்டு Mental fire உடன் இந்த பதிவை எழுதுகிறேன். பெண்களுக்கு மரியாதை தாருங்கள். குடும்பம், சமூகம், அரசியல், பொதுவாழ்க்கையில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தந்துவிட்டு நாளை ( மார்ச் 8) ஆம் தேதி மகளிர்தின நிகழ்வை கொண்டாடுங்கள்.
டாக்டர் ரொஹையா MDDGO,
துணைப்பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக.








Comments are closed, but trackbacks and pingbacks are open.