திருச்சியில் புஷ்பா பட பாணியில் டூவீலரில் செம்மரக்கட்டை கடத்தல் !
சட்டவிரோதமான முறையில் தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுவதும்; சந்தன மரங்களையும் செம்மரங்களையும் வெட்டி கடத்துவதிலும் உள்ள மாஃபியா அரசியலை புஷ்பா திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள். இதுபோன்று, பணத்துக்காக ஆசைப்பட்டு செம்மரக்கட்டைகளை சட்ட விரோதமான முறையில் கடத்த முயன்று போலீசாரை கண்டதும் செம்மரக்கட்டைகளை டூவீலரோடு போட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சந்தேகத்திற்கிடமான முறையில் மரக்கட்டைகளை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்வதாக, திருச்சி மாவட்ட எஸ்.பி.யின் சிறப்பு உதவி (9487464651) எண்ணிற்கு கிடைத்த தகவலையடுத்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
அய்யம்பாளையம் – திருவள்ளரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மண்ணச்சநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, TN 48 T 3324 TVS XL Heavy Duty என்ற இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மரக்கட்டைகளை எடுத்து வந்துள்ளனர். காவலர்களை பார்த்ததும் வாகனத்தையும் மரக்கட்டைகளையும் கீழே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர். பின்னர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மரக்கட்டை சம்மந்தமாக விசாரணை மேற்கொண்டதில், மேற்படி மரக்கட்டையானது, செம்மரக்கட்டை என உறுதி செய்யப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், மேற்படி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, இரு சக்கர வாகனம் மற்றும் தப்பி சென்றவர்கள் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.