அப்படித்தான் இலஞ்சம் வாங்குவேன் … மேலிடம் வரையில் பிரிச்சிக் கொடுக்கனும் … கறார் வசூலில் சார்பதிவாளர்கள் !
மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பாமக சார்பில் பத்திர பதிவுத்துறையில் கையூட்டு சர்ச்சையில் சிக்கிய வீரகுமார், தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பாமக சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமையில், பத்திர பதிவு துறையில் கையூட்டு சர்ச்சையில் சிக்கிய விளாங்குடி சார் பதிவாளர் வீரக்குமார் மற்றும் செக்கானூரணி சார்பதிவாளர் தமிழ்ச்செல்வி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் உட்பட பாமகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், மதுரை மாவட்டம், செக்கானூரணி பத்திர பதிவாளர் தமிழ் செல்வி என்பவர் பாகபிரிவினை சொத்து பதிவு செய்வதற்கு ரூ.1,00,000/- ஒரு லட்சம் லஞ்சமாக பெற்றுக்கொண்டும்; முறைகேடாக பத்திரபதிவு செய்வதற்கு செண்டு ஒன்றுக்கு ரூ.20,000/- (ரூபாய் இருபதாயிரம் ) விகிதம் லஞ்சமாக பெற்றுக் கொண்டும் வருகிறார்.
நாங்கள் கட்சியின் சார்பாக கேட்டதற்கு நான் அப்படித்தான் லஞ்சம் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. காரணம் மேல் அதிகாரி முதல், அமைச்சர் வரை நான் வாங்கிய பணத்தில் பங்கு கொடுக்க வேண்டி உள்ளது என எங்களை மிரட்டும் தோரணையில் பேசிவருகிறார்.
மேலும் விளாங்குடி பத்திரபதிவு அதிகாரி வீரக்குமார் அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக ரூ.1,90,000/- (ரூபாய் ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் மட்டும்) லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டார். அது சம்மந்தமாக செய்தி பத்திரிக்கையில் வெளிவந்தது. இதை நாங்கள் அவரிடம் கேட்ட போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்களின் உறவினர் என்று கூறினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தினமும், பல லட்சம் லஞ்சமாக வாங்கினால் தான் நான் அமைச்சர், முதலமைச்சர் வரை லஞ்ச பணம் கொடுக்க வேண்டி உள்ளது என தெரிவித்து உள்ளார்கள். ஆகவே, கனம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்ட இரண்டு பத்திர பதிவாளர் மீது தகுந்த விசாரணை செய்து பொது மக்களுக்கு தெரியுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் கிட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி ராஜா, விஜி , ஈஸ்வரன் , குருபாலமுருகன் சேகர் , மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.