தாராளம் காட்டுங்கள் விசிகவின் தலைவரே!
ஆளூர் ஷாநவாஸ் வெறும் பெயரல்ல, ஒரு சமூகத்தின் அடையாளம்!
மதிப்பிற்குரிய அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்…
சமூக நீதிக்கான களத்தில் சரிசமமாகப் போராடும் ஒரு பெரும் சமூகத்தின் சார்பாக, மண்ணின் மைந்தனாக இந்த ஆதங்கத்தைப் பதிவு செய்கிறேன்…
ஷாநவாஸ் என்பது விசிக-வின் ‘ப்ராடக்ட்’ அல்ல..
ஆளூர் ஷாநவாஸ் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் வந்து அடையாளம் தேடிக்கொண்டவர் அல்ல…
ஊடகத்துறையிலும், பொதுச் சமூகத்திலும், இடதுசாரிச் சிந்தனைத் தளங்களிலும் இஸ்லாமிய அமைப்புகளிலும் ஏற்கனவே தடம் பதித்து, தர்க்கரீதியான வாதங்களால் எதிரிகளையும் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு ‘தனித்துவமான’ ஆளுமை…
அவரை வெறும் ஒரு வேட்பாளராகப் பார்ப்பது, ஒரு பெரும் அறிவுசார் சொத்தை (Intellectual Asset) சிறுமைப்படுத்துவதற்குச் சமம்…

இஸ்லாமிய வாக்கு வங்கியின் அசைக்க முடியாத அச்சாணி…
விசிக இன்று பட்டியலின மக்களின் அடையாளத்தைத் தாண்டி, ஒரு பொதுவான ஜனநாயக சக்தியாகப் பரிணமித்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் இஸ்லாமியச் சமூகத்தின் ‘சிந்தாத சிதறாத’ வாக்குகள் இருக்கின்றன…
அண்ணன் திருமாவின் அணுகுமுறை ஒரு காரணமென்றால், அந்த நம்பிக்கைக்கு இஸ்லாமிய சமூக மக்களிடையெ முகவரி கொடுத்தவர் ஆளூர் ஷாநவாஸ்….
“எங்கள் சமூகத்தின் பிரதிநிதி அங்கு இருக்கிறார்” என்கிற தைரியத்தில்தான், பல மாவட்டங்களில் நிலவும் உள்ளூர் அதிருப்திகளையும் கடந்து இஸ்லாமியர்கள் ‘பானை’ சின்னத்தை நெஞ்சில் சுமக்கிறார்கள்…
கறைபடியாத கரங்களும், கவர்ந்திழுக்கும் ஆளுமையும்..
சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மீது எழும் புகார்கள் மற்றும் பொதுச் சமூகத்தின் அவப்பெயர்களைத் துடைத்தெறியும் ஆயுதமாக இருப்பவர் ஷாநவாஸ்…
வசீகரமான பேச்சாற்றல், நாகரிகமான அரசியல், ஆழமான தரவுகள் என அவர் மேடையில் தோன்றும் போது, விசிக-வை வெறுப்பவர்கள் கூட விசிக-வின் கொள்கைகளை நேசிக்கத் தொடங்குகிறார்கள்…
இது போன்ற ஒரு ‘மக்களைக் கவரும் காந்தத்தை’ (Mass Magnet) இழப்பது தற்கொலைக்குச் சமமான அரசியல் முடிவு….
இது ஒரு துரோகமாகப் பார்க்கப்படும் ஒரு வரலாறும் கூட…
அவருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்படுவதாக வரும் செய்திகள், நடுநிலை மக்களுக்கும், இஸ்லாமியச் சமூகத்திற்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளன…
இது ஒரு தனிநபருக்குச் செய்யப்படும் துரோகம் அல்ல; சமூக நீதியை நம்பி விசிக-வின் பின்னால் அணிவகுத்து நிற்கும் ஒரு பெரும் சமூகத்தின் நம்பிக்கைக்குச் செய்யப்படும் துரோகம்…
ஒரு போர்வாளை உறையிலேயே போட்டு வைப்பது, எதிரிக்குக் கொடுக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்பதை அண்ணன் திருமா அவர்கள் அறியாதவர் அல்ல…

தயவுசெய்து முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்!
அடிதட்டு மக்களின் நாடித் துடிப்பை அறிந்த அண்ணன் திருமா அவர்கள், இந்த உணர்ச்சிகரமான சூழலைப் புரிந்துகொள்வார் என்று நம்புகிறோம்….
ஷாநவாஸின் மனோநிலை என்பது, அவரை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களின் மற்றும் ஒரு பெரும் சமூகத்தின் மனோநிலை…
அரசியலில் வெற்றி என்பது வெறும் எண்கள் அல்ல; அது மக்களின் நம்பிக்கை…
அந்த நம்பிக்கையின் முகமாக இருக்கும் ஆளூர் ஷாநவாஸை ஓரங்கட்டுவது, விசிக-வின் எதிர்கால வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை வைப்பதாக அமைந்துவிடும்..
துணிந்து முடிவெடுங்கள் விசிகவின் தலைவரே!
மீண்டும் ஷாநவாஸைக் களமிறக்குங்கள். எந்த மண்ணாக இருந்தாலும் சரி, தமிழகத்தின் எந்த மூலையாக இருந்தாலும் சரி… உங்கள் பின்னால் ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது, ஷாநவாஸுக்காக….
நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் அல்ல, ஒரு சாமானியனாக, ஒரு பாசிச எதிர்ப்பாளனாக, ஒரு அரசியல் விமர்சனகனாக மிகுந்த அக்கரையோடு இந்த கோடிக்கையை வைக்கிறேன்..
— கூத்தாநல்லூர் ஜின்னா








Comments are closed, but trackbacks and pingbacks are open.