பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிகள் அறிவிப்பு !
அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி 04.112025 ஆம் நாளன்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களிடையே ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு 05.11.2025 ஆம் நாளன்றும் மாவட்ட அளவில் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்திப் பரிசு வழங்குதல்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இவ்வறிவிப்பின்படி 2025-2026ஆம் நிதியாண்டில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி 04.11.2025 ஆம் நாளன்றும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு 05.11.2025 ஆம் நாளன்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முற்பகல் 10.00 மணிக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளலாம்.
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்தநாளையொட்டி (அக்டோபர்-02) 04.11.2025 ஆம் நாளன்று நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு” 1) காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, 2)மதுரையில் காந்தி 3) சத்தியசோதனை எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு “1) இமயம் முதல் குமரி வரை, 2) காந்தியடிகளும் மனித வாழ்க்கையும், 3) வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.
ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை (நவம்பர்-14) முன்னிட்டு 05.11.2025 ஆம் நாளன்று நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு “1) இளைஞரின் வழிகாட்டி நேரு, 2)நேருவின் வெளியுறவுக் கொள்கை 3)அமைதிப் புறா நேரு எனும் தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு 1) உலக அமைதிக்கு நேருவின் பங்கு, 2)நேரு கட்டமைத்த இந்தியா, 3)நூல்களைப் போற்றிய நேரு” எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும். மேலும், பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தெரிவு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.
அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தெரிவு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும். கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/, இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000/- வீதம் வழங்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்.இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.