அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் துடைப்பம் ! தூக்கியடிக்கப்பட்ட தலைமையாசிரியர் !
வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் துடைப்பம் வைத்து சுத்தம் செய்யும் வீடியோ வெளியான விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார் .
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், இந்தப் பள்ளியில் ஆசிரியர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் டேங்க்கை படிக்கும் மாணவிகளை கொண்டு தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய வைப்பதாக பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 15- ஆம் தேதி பள்ளியில் உள்ள வளாகத்தையும், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட , பள்ளி கட்டிடத்தின் மீதிருக்கும் நீர் தேக்கத் தொட்டியை ஆபத்தான நிலையில் மாணவர்கள் ஏறி சுத்தம் செய்யக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
படிக்க வரும் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொடுத்து சுத்தம் செய்ய வைக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து வட்ட தலைமை கல்வி அதிகாரி புண்ணியகோட்டி வாணியம்பாடி வட்டார கல்வி அலுவலரை (பிஇஓ) நேரில் அனுப்பி விசாரணையை நடத்தியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாராணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார், திருப்பத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பள்ளியில் மாணவர்களுக்கு படிப்பதைத் தவிர வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என்பது விதி. ஆனால், பல அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் சொந்த வேலைகளுக்கும் பள்ளி , வகுப்பறை கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை நிர்ப்பந்திக்கும் போக்கு மாற்றம் பெற வேண்டும். இதுபோன்ற பணிகளை செய்வதற்கு ஏற்ப அவசியமான பணியாளர்களை நியமிப்பதிலும் கல்வித்துறை அக்கறை செலுத்த வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.
— மணிகண்டன்.