ஆசிரியர் – மாணவர் உறவின் மகத்துவம் ! 7.5% இடஒதுக்கீட்டில் கலக்கும் அரசுப் பள்ளி மாணவிகள்!
வாழ்க்கையில் மிக மிக மகிழ்ச்சியான தருணங்கள் எப்போதாவது தான் அமையும். அப்படியான ஒரு தருணத்தை இந்த நாளில் எனக்கு பரிசளித்துள்ளனர் எனது இரண்டு குழந்தைகள் ஆயிஷா மற்றும் மோனிஷா.
இருவருக்கும் 7.5% இல் மருத்துவப் படிப்பு கிடைத்துள்ளது என்ற செய்தி இன்றைய நாளை மிகவும் நெகிழச் செய்துள்ளது.
இவர்கள் குழந்தைகளாக எனது கைப்பிடித்த நாட்களை இப்போது நினைத்தாலும் மனதுக்குள் இனிக்கிறது.
இவர்கள் இருவரும் குரோம்பேட்டை மகாகவி பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்னிடம் ஆறாம் வகுப்பில் வந்து சேர்ந்தனர். நான்கு வருடங்கள் என்னுடன் வாழ்ந்தனர். இவர்களோடும் இவர்கள் வகுப்பு மாணவிகளோடும் தான் நான் சுற்றித் திரிந்தேன் என்று கூட சொல்லலாம்.
இவர்கள் இருவரையும் பல படி நிலைகளுக்கு அழைத்துச் சென்றது எங்கள் வகுப்பறை.
வகுப்புத் தலைவர்களாக இவர்கள் இருவரும் தான் மாற்றி மாற்றி இருப்பார்கள். பலருக்கும் தேர்தல் வைத்து வாக்களித்தாலும் இவர்களையே தேர்ந்தெடுப்பார்கள் வகுப்பு மாணவிகள்.
ஆயிஷா ஆரம்ப காலத்தில் எதற்கெடுத்தாலும் மிகவும் நாணுவாள். முன்வந்து பேசவே தயங்குவாள். ஆனால் வாசிப்புக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வர நிதானமாக தைரியமாக வகுப்பறையில் அனைவரது முன்னிலையிலும் பேசவும் தைரியமாக தலைமைப் பண்பு பெறும் இடத்திற்கு வந்தாள். மோனிஷா ஆரம்பத்தில் வாசிக்கவில்லை. பிறகு ஊக்கப்படுத்த ஊக்கப்படுத்த எல்லாவற்றிலும் இருவரும் மாறினர். மிகப் பெரிய மாற்றம் வாசிப்பில் இருவரிடமும் ஏற்பட்டது.
இந்த பேட்ச் (Batch) மாணவிகள் தான் வகுப்பறை நூலகம் அமைக்க என்னுடன் இணைந்தனர். எனது உரையாடும் வகுப்பறைகள் நூல் உருவாகப் பெரும்பாலும் காரணம் இந்த பேட்ச் குழந்தைகள் தான். தும்பி அறிமுகம் இவர்களுக்குத்தான். வாசிப்பு வாசிப்பு, வாசிப்பு… புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தது இந்த வகுப்பு மாணவிகளுக்கு தான். இப்படி ஏராளமான வகுப்பறை செயல்பாடுகளை செய்தோம். தேசியக் கல்விக் கொள்கை குறித்து கூட விவாதித்தோம்.
என்னுடன் மிகவும் ஒன்றிப் போனதால் பத்தாம் வகுப்பில் இவர்களை என்னிடமிருந்து பிரித்து வேறு ஆசிரியரிடம் இந்த வகுப்புக் குழந்தைகளை ஒப்படைத்தது பள்ளி நிர்வாகம். ஆனால் எங்கள் நான்கு வருடப் பிணைப்பை எந்த நிர்வாகத்திலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை எப்போதும் பறை சாற்றும் குழந்தைகளாக இருந்தனர்.
அந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் இவர்கள் இருவரும் பள்ளியின் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது , கணக்குப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றது தொடர்ந்து மேல்நிலை வகுப்பில் பள்ளிக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது என மிக நல்ல மாணவிகளாக வெளி வந்தனர். ஆசிரியர் மாணவர் உறவு என்பது எத்தனை எத்தனை மகத்தானது ஐந்து வருடங்கள் ஒரு ஆசிரியர் தொடர்ந்து மாணவர்களுடன் கற்றல் கற்பித்தலில் இருந்தால் எத்தனை அற்புதமான மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதற்கு இவர்களும் நானும் சாட்சிகள்.
இன்று கலந்தாய்வு நடந்து இருவருக்கும் மருத்துவப்படிப்பு கிடைத்துள்ளதை அவர்கள் என்னிடம் தெரிவித்து மகிழ்ந்த தோடு, பெற்றோர்கள் பேசியது நெகிழ்வு. நீங்கள் தான் அவளுக்கு அடிப்படை ஊக்கம் தந்தீர்கள் டீச்சர். எப்போதும் அவள் அப்பா உங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் என நெகிழ்ந்து பேசினார் ஆயிஷாவின் அம்மா. அவரது தந்தையும் அத்தனை நன்றியுணர்வுடன் பேசினார். எனது பங்கு எதுவுமில்லை, அவர்கள் முயற்சி மட்டுமே அது என்றேன்.
நான் அவர்களை விட்டு வேறு பள்ளிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆயிற்று. எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்று போலவே வகுப்பு எடுத்தேன். இவர்கள் இருவரும் அதை எடுத்துக் கொண்டனர், அவ்வளவே. மற்ற குழந்தைகளும் நிறைய மாற்றங்களை அவர்களுக்குள் ஏற்படுத்தியே இருந்தனர் .
இப்போது போராட்டமான சூழலில் கூட நீட் தேர்வை எழுதி வெற்றி கண்டு இருவருக்கும் 7.5% இட ஒதுக்கீடு திட்டத்தில் மருத்துவப் படிப்புக்குத் தேர்வாகி இருப்பது அளவு கடந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
குழந்தைகளுக்கு அன்பு முத்தங்கள் இருவரையும் எப்போதும் போல அன்பு மிகுதியுடன் ஆரத்தழுவிக் கொள்கிறேன். நல்லாருங்க குழந்தைகளா.
நீங்களும் வாழ்த்துங்கள்.











Comments are closed, but trackbacks and pingbacks are open.