திருச்சி – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் புதிய பொதுக்குழுக் கூட்டம்
அரசு உதவி பெறும் கல்லூரிகளின் ஆசிரியர் சங்கங்களின் தாய் சங்கமாக கடந்த 75 ஆண்டு காலம் AUT என்றழைக்கப்படும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தொய்வின்றி செயல்பட்டு வருகின்றது. கடந்த 17.05.2025ஆம் நாள் சனிக்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அக் கூட்டத்தில் 2025 – 27 ஆண்டுகளுக்கான மாநில அளவில் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்
தலைவர் : முனைவர் ஜே.காந்திராஜ் (விவேகானந்தா கல்லூரி, சென்னை)
பொதுச்செயலாளர் : முனைவர் சேவியர் செல்வக்குமார் (டிபிஎம்எல் கல்லூரி, பொறையாறு)
பொருளாளர் : முனைவர் சார்லஸ் (தூய வளனார் கல்லூரி, திருச்சி)
முன்னாள் பொதுச்செயலாளர் முனைவர் கிருஷ்ணராஜ் மாநிலத் துணைத்தலைவரானார். இக் கூட்டத்தில், பல்வேறு மண்டலங்களின் பொறுப்பாளர்களாக 16 பேர் பொறுப்பேற்றுக் கொண்டனர். 60க்கும் மேற்பட்ட புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இப் பொதுக்குழுக் கூட்டத்தில் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் உள்ள கணேசர் கலை, அறிவியல் கல்லூரியில் புதிதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கிளை தொடங்கப்பட்டது. அதன் கிளைச் செயலராக தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் பொன்.கதிரேசன் அறிவிக்கப்பட்டார்.
2025 – 27 ஆண்டுக்கான புதிய பொதுக்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- 2025 – 27 ஆண்டுக்கான புதிய பொறுப்பாளர்களுக்கான தேர்தலைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த, தலைமை தேர்தல் அலுவலர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி பேராசிரியர் முனைவர் சரவணன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுக்குச் சங்கத்தின் கொள்கைகள் நோக்கங்கள் குறித்து விரைவில் புத்தாக்க பயிற்சி நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
- தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அரசு உதவிப் பெறும் கல்லூரிகளுக்கு வழக்கம்போல் வழங்கப்படும் நிநி ஆதாரங்களை தமிழ்நாடு அரசு உடனே வழங்கவேண்டும்.
- அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதியினை வழங்கவேண்டும்.
பொதுக்குழுக் கூட்டத்தின் நிறைவில் புதிய பொருளாளர் பேராசிரியர் முனைவர் சார்லஸ் நன்றி கூறினார். இப்பொதுக்குழுக் கூட்டத்தில் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்கள், ஜெயகாந்தி, சொக்கலிங்கம், பெலிசியா, திருஞானமூர்த்தி, நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். சென்னை, சேலம், கோவை, ஈரோடு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
— ஆதவன்.