அங்குசம் பார்வையில் ‘தாய்கிழவி’
பேஸன் ஸ்டுடியோஸ் & எஸ்கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை சிவக்குமார் முருகேசன் டைரக்ட் பண்ணியுள்ளார். இதில் ராதிகா, சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனீஸ்காந்த், இளவரசு, ரேச்சல் ரபேக்கா, முத்துக்குமார், ஜார்ஜ் மரியான் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : விவேக் விஜயகுமார், இசை : நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டிங் : ஷான் லோகேஷ், மேக்கப்: என்.செல்லதுரை, வினீஷ், ஆர்ட் டைரக்டர் : ராமு தங்கராஜ், பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.
உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலத்தின் கந்துவட்டிக்கிழவி பவுனுத்தாயி. இவர் வீட்டைவிட்டு வெளியே வந்தாலே அந்த ஊர் ஆண்கள்-பெண்கள், குழந்தைகள் எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள். தங்கள் கழுத்து, காதில் கிடக்கும் நகைகளைக் கழட்டி கடுகு டப்பாவிலும் பீரோவிலும் வைத்துப் பூட்டுகிறார்கள். “இந்த கிழட்டுச் சிறுக்கிக்கு என்னைக்குத் தான் சாவு வருமோ” என மக்கள் வயிறு எரியும் அளவுக்கு இருக்கு பவுனுத்தாயின் ரவுசு.
ஆத்தா பவுனுத்தாயுடன் இருக்கிறாள், மூணு பவுன் நகைக்காக புருஷனால் விரட்டப்பட்ட மகள் ரேச்சல். திடீரென ஒரு நாள் பவுனுத்தாய்க்கு கைகால் விளங்காமல் படுத்தபடுக்கையாகிறார். ஊரே கொண்டாடுகிறது. சொத்தை பிரித்துத் தராத கோபத்தில் ஆத்தாவைவிட்டுப் போன மகன்கள் உப்பிலி[சிங்கம்புலி] விஜயன்[ அருள்தாஸ்],செல்வம் [ பாலசரவணன்] ஆகியோர் விக்கிரமங்கலத்திற்கு வருகிறார்கள். சீக்கிரம் சோலி முடிஞ்சிருச்சுனா ஆத்தாவுக்கு கொள்ளி வச்சுப்புட்டு ஆகவேண்டிய வேலையைப் பார்க்கலாம்னு மகன்கள் காத்திருக்க, பவுனுத்தாயி 160 பவுன் நகை வாங்கியிருப்பதாக உசிலம்பட்டி கோல்டு குமார் [ இளவரசு] சொன்னதும் ஆத்தாவைக் காப்பாற்ற மதுரையில் பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்கள் மகன்கள்.
அதன் பின் சொத்துக்காகவும் 160 பவுன் நகைக்காகவும் மகன்கள் போடும் பாச நாடகத்தின் உருக வைக்கும் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘தாய்கிழவி.
டைடில்கார்டில் போடும் ‘கலையரசி’ பட்டத்திற்கு 100% பொருந்தியிருக்கிறார் ராதிகா சரத்குமார். அடேங்கப்பா… பாம்படக் காது, அந்தக் கால கிராமத்து பெரிய மனுஷிகளின் சேலைக்கட்டு, இடுப்பில் சுருக்குப்பை, கையில் டொரினோ பாட்டில், தெனாவெட்டு நடை, திமிர்ப்பேச்சு என பவுன் போல மவுசு குறையாமல் படம் முழுக்க தெக்கத்தி பூமியின் நிஜ பவுனுத்தாயாக வாழ்ந்திருக்கிறார் ராதிகா சரத்குமார்.
“60 வயசுல எனக்கு சுதந்திரம் கிடைச்சுச்சு, 30 வயசுல என்னோட மகளுக்கு சுதந்திரம் கிடைச்சுச்சு… 18 வயசுல எம்பேத்திக்கு சுதந்திரம் கிடைச்சுச்சு.. அவளோட பிள்ளைகளுக்கு பொறக்கும் போதே சுதந்திரம் கிடைச்சிரும்” க்ளைமாக்ஸில் பவுனுத்தாயி பேசும் இந்த வசனம் தான் ‘தாய்கிழவி’யின் சங்கநாதம். சபாஷ்…சபாஷ்….சபாஷ் டைரக்டரே…
சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன் இவர்களில் பாலசரவணனே டாப்ஸ்கோரர். பெவிகால் ஒட்டி மாலை கட்டுவது, கால்குலேட்டரில் கணக்குப் போடுவது, கருப்பசாமிக்கு விளக்கேற்றுவது, க்ளைமாக்ஸுக்கு முன்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் சொல்லும் கதையைக் கேட்டு கண்கலங்குவது என பாலசரவணன்….பக்கா நடிப்பு சரவணனாக பின்னுகிறார். கமல் ரசிகராக மைக்செட் உப்பிலியப்பனாக சிங்கம்புலி. நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் கமல் உருவத்தின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு, “அவரும் ஆண்டவர் தானே” எனச் சொல்லும் இடம் செம கிளாஸ். ஷேர் ஆட்டோ டிரைவராக அருள்தாஸும் அதகளம் பண்ணியிருக்கிறார்.
பென்னிகுயிக்காக முனீஸ்காந்த். 40 வயசாகியும் கல்யாணம் நடக்காமல் அல்லல்படுவதிலும் இந்த வயசுல ஏன் கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படுறேன் என்பதற்கு கண்கலங்கியபடி அவர் சொல்லும் சீனில் ஜொலிக்கிறார் முனீஸ்காந்த். இருக்குறதுலேயே பெரிய ‘ழ்’ இதாண்டா என ‘பென்னிகுயிக் இழ்ழம்’ என்பதற்கு அவர் சொல்லும் ரீஸன் டைரக்டர் டச். அதே போல் முத்துக்குமாரின் கேரக்டரின் பெயரான ஜவஹர்லால் நேரு, அவரின் மகன் ராஜீவ்காந்தி, கருப்பசாமி கோவிலின் முன்பு விழுந்து கிடக்கும் குடிகாரன் கேரக்டர் கங்காரு அடிகளார் சாமியாக மாறுவது, “சத்யராஜ் பாட்டைப் போடச் சொன்னதுக்கே இந்த வரத்து வராய்ங்களே..ராம்கி பாட்டை போடச் சொல்லியிருந்தா என்னாகுறது?” “அட போய்யா ராஜ்கிரண் பாட்டை போடச்சொன்னதுக்கு என்னை பாடாபடுத்திட்டாய்ங்க” இப்படி சகல ஏரியாவிலும் எழுத்திலும் வசனத்திலும் பட்டையக் கிளப்பிவிட்டார் சிவக்குமார் முருகேசன்.
பாடல்களைவிட பின்னணி இசையில் உருக வைத்துவிட்டார் நிவாஸ் கே.பிரசன்னா. குறிப்பாக பாலசரவணனிடம் ஆம்புலன்ஸ் டிரைவர் பேசும் சீன், ஆஸ்பத்திரியில் ராதிகாவுக்கு ஆபரேஷன் நடக்கும் சீன், க்ளைமாக்ஸில் தனது மூன்று மருமகள்களிடம் ராதிகா பேசும் சீன் இங்கெல்லாம் நிவாஸின் இசை தான் பெரும்பலம்.
ராதிகாவின் மகளாக ரேச்சல் ரபேக்கா, மருமகள்களாக நடித்த அந்த மூன்று பெண்கள், ரேச்சலின் புருஷனாக முத்துக்குமார், மகனாக நடித்த பப்ளிமாஸ் சிறுவன் என எல்லா கேரக்டர்களையும் உசிலம்பட்டி பூமியில் நிஜமாகவே உலவவிட்டிருக்கிறார் டைரக்டர். என்ன ஒண்ணு க்ளைமாக்ஸில் முத்துக்குமார் கதறியழுதும்..தாலியைக் கழட்டி ரேச்சல் வீசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முனீஸ்காந்துக்கு ரேச்சலைக் கட்டி வைக்க வேண்டும் என்பதற்காகவே வலிந்து திணிக்கட்டதைப் போலாகிவிட்டது. இதுவும் ஒருவகை பெண் சுதந்திரம் தானோ?
மற்றபடி இந்த ‘தாய்கிழவி’ உழைக்கும் பெண்களுக்கு, பெண் சுதந்திரத்திற்கான நம்பிக்கை விதை.
அங்குசம் பார்வையில் ‘தாய்கிழவி’ 75/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.