திருச்..சீ…சீ… மாநகரில் இடுகாட்டின் இழிநிலை ! அதிகார திமிர் !

0

திருச்..சீ….. சீ…..மாநகராட்சியில் இடுகாட்டின் இழிநிலை !

இறந்தவர்களைப் புதைக்கும் இடுகாட்டில், எச்சில் இலைகளையும் குப்பைக்கூளங்களையும் ஒருவர் கொட்டிச் செல்வதை காணும் உங்களால் அதை இயல்பாக கடந்து செல்ல முடியுமா? ஒருவர் அல்ல ஒரு லாரி குப்பையைக் கொட்டினால்?… மூக்கை மாத்திரமல்ல, ஐம்புலன்களையும் பொத்திக்கொண்டு போக வேண்டுமென்று போதிக்கிறது, திருச்சி மாநகராட்சி நிர்வாகம்.

https://businesstrichy.com/the-royal-mahal/

திருச்சி மாநகராட்சியைச் சேர்ந்த பீமநகர் – புதிய ராஜா காலனி பகுதியில் அமைந்துள்ள முள்ளச்சி தோப்பு இடுகாட்டைத்தான் திறந்தவெளி குப்பை மேடாக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறது, திருச்சி மாநகராட்சி நிர்வாகம்.

முள்ளச்சி தோப்பு இடுகாட்டைத்தான் திறந்தவெளி குப்பை
முள்ளச்சி தோப்பு இடுகாட்டடில் திறந்தவெளி குப்பை

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

– பொணத்த பொதைக்கிற இடம்தானேனு கண்டதை கொண்டு வந்து கொட்டுறத கண்டுக்காம இருக்க முடியுங்களா? தொன்னூறு வருசத்துக்கும் மேலா இருக்க இந்த இடுகாட்ட இப்ப ஒருவருஷமாத்தான் குப்பை மேடாக்கிட்டாங்க. இந்த மயானத்துக்குள்ளேயே, குப்பை கழிவுகளிலிருந்து நுண் உரம் தயாரிக்கிற இடம் இருக்கு. அதுக்காக குப்பையை இங்க வந்து கொட்ட ஆரம்பிச்சதுல இருந்துதாங்க தலைவலி.இந்த நாத்தத்துக்கு நடுவுலதான் போன வாரம் எங்க உறவினர் ஒருவரை அடக்கம் செய்துவிட்டு வந்தோம்.

இடுகாட்டில் குப்பை மேடு
இடுகாட்டில் குப்பை மேடு

இவுங்க இங்க குப்பை கொட்ட ஆரம்பிச்சதில இருந்தே, நாங்க எதிர்ப்பு தெரிவிச்சிட்டுதான் இருக்கோம்.  அப்போதைக்கு சமாதானம் பண்ணுவாங்க. இனி கொட்டமாட்டோம்பாங்க. அப்பறம் அவங்க வேலையை ஆரம்பிச்சிருவாங்க. இங்கே பாருங்க., குப்பையை கொட்டி திரும்ப அள்ளுறப்ப கல்லறையையும் சேர்த்து சிதைச்சிட்டாங்க.

திருச்சி மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர், பொன்மலை கோட்ட தலைவர், வார்டு மாமன்ற உறுப்பினர்னு எங்களுக்கு தெரிஞ்ச அளவுல எல்லாருக்கும் கம்ப்ளையிண்ட் செஞ்சிட்டோம். ஆனாலும், வழி பொறக்கல. எங்கள் குல தெய்வங்கள் வாழும் இடமாகவும், தெய்வங்கள் இருக்கும் இடமாக கருதிதான் இறந்தவர்களை இங்கே நல்லடக்கம் செய்து பராமரித்து வருகிறோம். இதுக்கு நீங்களாவது ஒரு விமோசனம் தேடி தந்தா நல்லாயிருக்கும் – என்று தனது ஆதங்கத்தை நம்மிடம் கொட்டித்தீர்த்தார், அப்பகுதியைச் சேர்ந்த வீரமணி.

திமுக கட்சிகாரர் என்றாலும் இது தான் நிலை
திமுக கட்சி  என்றாலும் இது தான் நிலை

இதோ பாருங்க, இது எங்க பகுதியை சேர்ந்த அப்பு (எ) அ.வீ. அன்பழகன் என்பவரோட கல்லறை. அவரு குடும்பமே தி.மு.க. குடும்பம். கட்சிக்காக வெட்டுக்குத்து, ஜெயிலுனுலாம் போயிட்டு வந்த குடும்பம். அந்தக் குடும்பத்தை சேர்ந்தவங்களும் தனிப்பட்ட முறையில, மேலிடத்துல முறையிட்டும் பார்த்துட்டாங்க. ஆனாலும் ஒன்னும் கதைக்கு ஆகல. _ என்று புலம்பினார் அருகிலிருந்த மற்றொருவர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அங்குசம் சார்பில் நாம் அங்கே சென்றபொழுது, அப்பொழுதான் தான் சுமந்து வந்த மொத்தக் குப்பைகளையும் கொட்டிவிட்டு அடுத்த சுற்றுக்கு ஆயத்தமாகி நின்று கொண்டிருந்தது மாநகராட்சியின்  (TN45 – CB 9753) குப்பை லாரி ஒன்று. வழியில் சிந்திய குப்பைகளையும் வாரி வழித்து இடுகாட்டுப் பக்கமாக நிரவிக்கொண்டிருந்தது, பொக்லைன் (TN 45 CB 8141) வாகனம் ஒன்று.

எத்தனை புகார்...
எத்தனை புகார்…

இதுவரையில், இப்பகுதி மக்கள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல முறை புகார் தெரிவித்தும், இந்த அவல நிலையை மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றும்கூட திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது, அதிர்ச்சியளிக்கிறது. இதில் கொடுமை என்னவெனில், இவர்களது புகாரை பெற்றுக்கொண்டு வார்டு குழு அலுவலகம் (IV), உதவி ஆணையர் அளித்துள்ள பதில் வக்கிரத்தின் உச்சம்.

கடந்த 08.11.2022 தேதியிட்ட, ந.க.எண்:7945/2022/எச்-1/(ம-IV) என்ற கடிதத்தில், – ””திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, வார்டு அலுவலகம்- IV , வார்டு எண் 53-இல் அமைந்துள்ள நுண் உரசெயலாக்க மையத்திற்கு செல்லும் வழியாகிய முல்லைச்சி தோப்பு சுடுகாட்டில் தற்பொழுது எந்த குப்பைகளோ, வேறு கழிவுகளோ கொட்டப்படுவதில்லை. அதனை மீறி குப்பை வாகனம் செல்லும்போது விழும் திடக்கழிவுகள் அவ்வப்பொழுது சுத்தம் செய்யப்பட்டு வரப்படுகிறது என்ற விவரம் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது” என்று கூசாமல் பச்சைப்பொய்யை பதிலாகத் தந்திருக்கிறார்கள்.

 

கவுன்சிலர் கலைச்செல்வி
கவுன்சிலர் கலைச்செல்வி

இதுகுறித்து விளக்கம் அறிய, வார்டு எண் 53- இன் கவுன்சிலர் ஜெ.கலைச்செல்வி அவர்களின் அலுவலக கைப்பேசி எண்ணிற்கு அங்குசம் இதழ் சார்பில் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பிற்கு இதுவரை பதிலில்லை. அவர் பதிலுக்கு அவசியமில்லாத வகையில், எவரும் நேரில் கண்டால் உண்மை விளங்கும் வகையில், இன்று வரையிலும் இழிநிலையில்தான் இருக்கிறது, முள்ளச்சி தோப்பு இடுகாடு.

இன்று வரை இப்படி தான்.
இன்று வரை இப்படி தான்.

குறிப்பிட்ட பட்டியலினச் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் புதைப்பதற்கான இடமாக முள்ளச்சி தோப்பு இடுகாடு அமைந்திருக்கிறது என்பதால் என்னவோ, சாதிய ரீதியான அணுகுமுறையோடுதான், திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப்படுத்துகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

நாம் புகைப்படம் எடுப்பதை பார்த்த மாநகராட்சி ஊழியர்கள்… கொஞ்சம் இடம் சுத்தம் செய்வது போல் பவலா செய்து கொண்டு இருந்தார்கள்…

நடு சுடுகாட்டில் லாரி லாரியாக குப்பையைக் கொட்டிவிட்டு, வழியில் சிந்திய குப்பைகள் என்று பச்சையாகப் புழுகி, மாநகராட்சியின் முத்திரையோடு பதிலும் கொடுப்பதை, அதிகாரத்திமிர் என்றழைக்காமல், வேறெப்படி விளிக்க முடியும்?

– இளங்கதிர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.