இது என் அனுபவம் – உங்களுக்கு பயன்படுமா ? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் .
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தன்னுடைய முகநூல்.. எழுதியுள்ள பதிவை அப்படியே தருகிறோம்…
அரசியலில் நான் பலரை பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். சிலர் மட்டுமே பொறுமையுடன் காத்திருப்பார்கள். ஆனால் பலர், வேகமாக வளர வேண்டும் என்றுதான் நினைத்தார்கள், நினைக்கிறார்கள், நினைப்பார்கள். தகுந்த காலம் வந்தால் மட்டுமே உங்கள் முயற்சிகளுக்கான பலன் கிடைக்கும்.
சரியில்லாத நேரத்தில் நீங்கள் செய்யும் முயற்சிகள் பின்னடைவையே ஏற்படுத்தும். மன அழுத்தத்தையே உண்டாக்கும். அதில் காத்திருந்து வெற்றி பெற்றவர்கள் சிலர். அவசரப்பட்டு கட்சி மாறி போகிறவர்கள் பலர். காத்திருந்து வெற்றி பெற்றவர்களுக்கு பல உதாரணங்களை நான் தரலாம். ஏன் நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

ஒரு தலைவருடன் சிலர் பயணிப்பார்கள். அவர் எதுவும் செய்து தரவில்லை என்று ஆறு மாதத்திற்கு பிறகு வேறு தலைவரோடு பயணிப்பார்கள். பிறகு மீண்டும் அவரும் எதுவும் செய்து தரவில்லை என்று சொல்லி அடுத்த ஆறு மாதத்திற்கு வேறு ஒருவருடன் பயணிப்பார்கள். இப்படி மாறி மாறி பயணிப்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்காக இரக்கப்பட்டிருக்கிறேன்.
இவர்கள் பல தலைவர்களோடு நெருங்கிப் பழகியதால் புதிதாக பொறுப்பேற்கும் தலைவர்களும் இவர்களை பார்த்து பயந்து, இவர்களை உடன் வைத்துக்கொள்வார்களே தவிர பதவி தரமாட்டார்கள். காரணம் இவர் வளர்ந்துவிடுவாரோ! என்ற பயம்தான். இவர் யாருடன் பயணப்பட்டு விலகி வந்தாரோ, அவர் பின்நாளில் வளர்ந்திருப்பதை பார்க்கும்போது மனதில் ஏக்கம் தான் உண்டாகும். கவலைதான் ஏற்படும். எனவே அரசியலில் பொறுமை முக்கியம் அதனுடன் நம்பிக்கை அவசியம்.
இப்படித்தான் ஒரு அரசன், தனது ராஜ்யத்தை வளமாக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டான். ஒருநாள், அவன் தெருக்கள் சந்திக்கும் இடங்களில் விதைகளை நடச் செய்தான். அந்த விதைகள் மிக மெதுவாக வளர ஆரம்பித்தன. அரசன் அதை தினமும் பார்த்து. “ஏன் இத்தனை நாளாகியும் இந்த செடிகள் வளரவில்லை?” என்று கோபப்பட்டான்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அப்போது மந்திரி அருகே வந்து சொன்னான், “மகிமையுடைய மன்னா, சில விஷயங்கள் வேகமாக நடக்காது. மழை, நேரம், பொறுமை ஆகியவை சேர்ந்தால் மட்டுமே அதற்கான பலன்களைப் பெற முடியும்.”
அதை கேட்டு, அரசன் தன்னுடைய முடிவுகளை எடுக்கும் போது மேலும் பொறுமையாக இருக்க முடிவு செய்தான். காலத்தால் அந்த செடி பெரிய மரமாக மாறி நாடு முழுவதும் நிழலும் பழங்களும் வழங்கியது.
“நண்பர்களே! அரசியலும் இதுபோன்றது தான். உழைப்பும், நம்பிக்கையும், பொறுமையும் சேரும் போது மட்டுமே நன்மை கிடைக்கும்.” அரசியலில் மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் பொறுமை மிகவும் முக்கியமானது. உடனடி முடிவுகள், வெற்றிகளைப் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பொறுமை வெற்றிக்கான ஆயுதம்..!