எல்லாம் முடிந்து விட்டது அவ்ளோதான் … ரயிலில் பாய்ந்த இளைஞர்!
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம் – எல்லாம் முடிந்துவிட்டது அவ்வளவுதான் – நண்பனுக்கு ஆடியோ அனுப்பி விட்டு ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர் – கோவில்பட்டியில் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரெயில்வே பீடர் ரோடு நகரைச் சேர்ந்த ரவிபாண்டியன் என்பவரது மகன் சக்தி கணேஷ் (20), இவர் ஆக்டிங் டிரைவர் மற்றும் கட்டிட வேலைகளுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு வீட்டை விட்டு வெளியே சென்ற சக்தி கணேஷ் இரவில் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் மதித்தோப்பு செல்லும் சாலையில் உள்ள ரயில்வே சுரங்க பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சக்தி கணேஷ் உடல் ஆங்காங்கே சிதறி கிடந்துள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சக்தி கணேஷ் தான் இறப்பதற்கு முன்பு நேற்றிரவு தன்னுடைய நண்பர் ஒருவருக்கு பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் ஏடேய் சந்தோஷ்.. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம்.. உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் போன் போகவில்லை. எதுவும் நினைத்துக் கொள்ளாதே.. பார்ப்போம்.. எல்லாம் முடிந்துவிட்டது அவ்வளவுதான். நீ காலையில் போனை எடுத்துப் பார்க்கும்போது தனியார் கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் இருப்பேன் எண்ணை வந்து பார் என்று பேசி ஆடியோ போட்டுள்ளார் சக்தி கணேஷ்.
காதல் தோல்வி காரணமாக கடந்த சில தினங்களாக மனம் உடைந்து காணப்பட்ட சக்தி கணேஷ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மணிபாரதி







Comments are closed, but trackbacks and pingbacks are open.