ஐந்து புலிகள் சந்தேக மரணம், விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு….
தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதி பெரும்பாலும் காடுகளைக் கொண்டது. அந்தியூரைத் தாமையிடமாகக் கொண்ட தந்தை பெரியார் கானுயிர் காப்பகம் (Thanthai Periyar Wildlife Sanctuary) வனப்பகுதியை ஒட்டி, கர்நாடக மாநிலத்தின் மலை மாதேஸ்வரன் வனவிலங்கு சரணாலயம் (MM Hills wildlife sanctuary) அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் பர்கூர் வனச்சரக எல்லையை ஒட்டி அமைந்துள்ளத ஹூக்கியம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள், புலிகள், சிறுத்தைகள் ஊள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன. இங்குள்ள மின்னியம் வனப்பகுதியில், மாரி அணை என்ற இடத்தில், நேற்று காலை நான்கு புலிகள் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
ஹூக்கியம் வனச் சரக அலுவலர் மாதேஷ், மலை மாதேஸ்வரா வனக் கோட்ட துணை வனப் பாதுகாவலர் சக்கரபாணி தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று, இறந்து கிடந்த நான்கு புலிகளின் உடல்களைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் “இறந்துபோன தாய் புலிக்கு 13 வயது இருக்கலாம். அதன் நான்கு குட்டிகளுக்கு இரண்டிலிருந்து, மூன்று வயதுக்குள் இருக்கும். ஐந்து புலிகளும் 300 மீட்டர் சுற்றளவுக்குள் உயிரிழந்து கிடந்தன. இறந்து இரண்டு நாள்கள் ஆகியிருக்கலாம். நான்கு புலிகளின் உடல்களிலும் காயங்கள் எதுவும் இல்லை. சுற்றுப்பகுதியில் மேற்கொண்ட விசாரணையில், ஐந்து புலிகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்தக் காட்டுப்பகுதியில், அள்ளேகுருபன தொட்டி, கல்மாத்தூர், மின்னியம், ஹூக்கியம், ஜல்லிபாளையம் என பல ஊர்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் மாடு, ஆடுகளை மேய்த்து வருகின்றனர். வளர்ப்பு மாட்டை புலி அடித்து சாப்பிட்டிருக்கும். அதன் காரணமாக மாட்டு உரிமையாளர் மீதமிருந்த மாட்டு இறைச்சியில் விஷம் கலந்திருக்கலாம். வேட்டையாடிய புலியும், குட்டிகளும் அதை உண்டதன் காரணமாக உயிரிழந்து போயிருக்கலாம். கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகுதான் புலிகளின் மரணத்துக்காகன காரணம் தெரியவரும்” என வனத்துறை அலுவலர்கள் கூறினார்.
இதுகுறித்து கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கான்தரே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலை மாதேஸ்வரா வனவிலங்கு சரணாலய வனப்பகுதியில் உள்ள ஹூக்கியம் வனச்சரக எல்லையில் ஒரு தாய் புலி மற்றும் மூன்று குட்டிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனையான செய்தியாகும். மேலும் கர்நாடக அரசாங்கம், இதை மிகவும் தீவிர இழப்பாகக் கருதியுள்ளது.
மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள், அழிந்து வரும் புலிகளைப் பாதுகாப்பதற்காகப் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை (புராஜெக்ட் டைகர்) 1973-இல் தொடங்கி வைத்தார். அதன் பிறகு, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் புலிகளைப் பாதுகாக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகா மாநிலம் 563 புலிகளுடன் நாட்டில் 2வது இடத்தில் உள்ளது.
புலிகள் பாதுகாப்பிற்குப் பெயர் பெற்ற மாநிலத்தில், ஒரே நாளில் நான்கு புலிகள் இயற்கைக்கு மாறான முறையில் இறந்தது மிகவும் வேதனையானது. கர்நாடக மாநில முதன்மை வனப்பாதுகாவலர் (PCCF) சுபாஷ் கே. மல்கேடே தலைமையில் உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வன ஊழியர்கள் அலட்சியம் அல்லது மின்சாரம் தாக்கி, விஷ இறைச்சி மூலம் மரணம் ஏற்பட்டிருந்தால், அவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து இந்த அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் ஐந்து புலிகள் பலியான செய்தி வன ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படங்கள் – செய்தி
சிவசுப்பிரமணியன் –
மூத்த பத்திரிகையாளர்