மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியா? அதிகாரிகள் ஆட்சியா? மாமன்ற சாதாரணக்கூட்டத்தில் விவாதம்
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பி. ஜெயா நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் , துணை ஆணையர், நகர பொறியாளர்,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நடந்தத கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு :-
கவிதா (திமுக):
எனது வார்டில் இருந்து இளநிலை பொறியாளர் அலுவலகம் திடீரென சாத்தனூருக்கு மாற்றப்பட்டுள்ளது . இதனை யாரை கேட்டு மாற்றினீர்கள்.
புஷ்பராஜ் (திமுக):
எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மே மாதத்தில் இருந்து இதுவரை ஐந்து இளநிலை பொறியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதனால் மக்கள் பணி செய்ய முடியவில்லை.
முத்து செல்வம் (திமுக):
திருச்சி பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது தெரியுமா ?
மேயர் அன்பழகன் :
எனக்கு தெரியாது. என்னுடைய கவனத்திற்கு வரவில்லை.
முத்து செல்வம் (திமுக):
இந்த மாநகராட்சியில் அதிகாரிகள் ஆட்சி நடக்கிறதா? மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி நடக்கிறதா?
அதைத்தொடர்ந்து ஒட்டுமொத்தமாக மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுக கவுன்சில்கள் எழுந்து கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர். அப்போது மண்டல குழு தலைவர் துர்கா தேவி, முத்துச்செல்வம்,காஜாமலை விஜய் புஷ்பராஜ், நீலா வேலு உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் திருச்சி மாநகராட்சி ஆணையர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கூச்சலிட்டனர் இதனால் மாநகராட்சி கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு நிலவியது.
மாநகராட்சி சுகாதார நல அலுவலர் :
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் 14 ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகை விடப்பட்டது. அதனால் அந்தத் திட்டத்தை அங்கு செயல்படுத்த இயலாது.
இதற்கும் திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே வழங்கப்பட்ட காலை உணவு திட்டத்தை நிறுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேயர் அன்பழகன் :
மீண்டும் அந்த தனியார் நிறுவனத்திடம் கலந்து பேசி காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரவிந்தன் (அதிமுக )
திருச்சி தெப்பக்குளம் தூர் வாரும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.மேரிஸ் பாலம் போல இதுவும் கிடைப்பில் உள்ளது.
எல்.ரெக்ஸ் (காங்கிரஸ்) :
திருச்சி ஓயாமரி சுடுகாடு கடந்த ஒன்றரை மாதமாக செயல்படவில்லை.
இதனால் திருச்சி வாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பராமரிப்பு வேலை இன்னும் எத்தனை நாட்கள் நடைபெறும்.
மேயர் அன்பழகன் :
இன்னும் 10 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும்.
கமால் முஸ்தபா (திமுக):
திருச்சி தென்னூர் அண்ணா நகர் குழுமிக்கரை பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், நர்சுகள் பணியில் இல்லை.
அதனால் கடந்த 10 நாட்களாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி நல அலுவலர்
மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது அங்கு பணியாற்றி வந்த நர்லம் விருப்ப ஓய்வில் சென்று விட்டார். ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மஞ்சுளா தேவி பாலசுப்ரமணியம் (திமுக):
எனது வார்டில் இருக்கும் மயானத்துக்கு காம்பவுண்டு சுவர் மற்றும் கேட் இல்லாமல் உள்ளது.
அதனை சீர் செய்து தர வேண்டும்.கொல்லங்குளம் அழகுப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டு விட்டது.எனவே அங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேயர் அன்பழகன் :
பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
கோ. கு. அம்பிகாபதி (அதிமுக):
மாநகராட்சி ஆணையரை பலமுறை பார்க்க முயற்சித்தும் பார்க்க முடியவில்லை அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று பத்திரிகைகளில் தினந்தோறும் செய்து வருகிறது ஆனால் இது லஞ்சம் வாங்காத அரசு என்று பெருமைப்பட கூறுகிறார்கள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை மக்கள் பிரதிநிதியாக நாங்கள் ஆணையரை எப்போது பார்க்க வந்தாலும் கூட்டம் நடக்கிறது கூட்டம் நடக்கிறது என்றே சொல்கிறார்கள்.பின்னர் எப்படி மக்கள் பிரச்சனை இல்லை ஆணையரிடம் எடுத்துரைக்க முடியும்
ஆணையர்
மக்கள் குறைதீர்க்கும் நாளில் 700 மக்களை நான் சந்திக்கிறேன் நானும் மக்கள் பணி தான் செய்கிறேன் ஆய்வுக்கூட்டம் நடக்கும்போது மட்டும்தான் பார்க்க முடிவதில்லை மற்ற நேரங்களில் அனைவரையும் சந்தித்து கொண்டு தான் இருக்கிறேன்.
சீதாலட்சுமி முருகானந்தம் (திமுக):
எனது 45வது வார்டில் பிரச்சனை உள்ளது அதேபோல் பாதாள சாக்கடை பிரச்சனையும் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு விவாதம் நடந்தது.
இன்றைய மாநகராட்சி கூட்டத்தில் அதிகாரிகளுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.