நில அபகரிப்பு மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு முகாம் ! திருச்சி எஸ்.பி.யின் சிறப்பான முன்னெடுப்பு !
திருச்சி மாவட்டத்தில் மாவட்ட குற்றப்பிரிவு 1 மற்றும் 2 ஆகிய இரு பிரிவுகள் இயங்கி வருகின்றன. தனிச்சிறப்பான வழக்குகள் நில மோசடி, பண மோசடி தொடர்பான புகார்களை இவ்விரு குற்றப்பிரிவு போலீசார்கள் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், குற்றப்பிரிவில் வழக்குகள் குவிந்துள்ள நிலையில் அவை கிடப்பில் போடப்படாமல் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடத்துமாறு திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார். வழக்கமான முறையில், மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினால் நாளொன்றுக்கு ஒன்றிரண்டு வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடியும் என்றிருந்த நிலையில், புகார்தாரர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை குறிப்பிட்ட தேதியில் ஆஜராகுமாறு முன்கூட்டியே தகவல் தெரிவித்து இந்த சிறப்பு விசாரணை முகாமை நடத்தியுள்ளனர்.
09.08.2025 திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரெத்தினம், இ.கா.ப., உத்தரவின் பேரில், ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மாவட்டத்தின் அந்தந்த காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் தலைமையில் அவர்களது உட்கோட்ட புகார் மனுக்கள் சம்மந்தமாக சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இக்குறைதீர்ப்பு முகாம் பொதுமக்கள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள். ஏனெனில், அனைத்து காவல் அலுவலர்கள் ஒரு இடத்தில் கூடி விசாரணை மேற்கொள்வதன் காரணமாக பொதுமக்களுக்கு தீர்வு விரைவாக கிடைக்கிறது.
இதேபோல், திருச்சி மாவட்ட குற்றப் பிரிவில் பணமோசடி தொடர்பான புகார்கள் அதிகளவில் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று (09.08.2025) மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர் பழனியப்பன் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 25 மனுதாரர்கள் இன்று ஆஜர் ஆக அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், 19 மனுதாரர்கள் ஆஜராகியுள்ளனர். அதில் 10 மனுக்கள் முடிக்கப்பட்டது. 9 மனுக்கள் மறுவிசாரணைக்காக அனுப்பப்பட்டது. 4 மனுதாரர்கள் வரவில்லை.
இதேபோல், திருச்சி மாவட்ட குற்றப் பிரிவில் நிலமோசடி தொடர்பான புகார்கள் அதிகளவில் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று (09.08.2025) மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடுகள் கூடம் காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.கதிரவன் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 70 மனுதாரர்கள் இன்று ஆஜர் ஆக அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், 38 மனுதாரர்கள் ஆஜராகியுள்ளனர். அதில் 26 மனுக்கள் முடிக்கப்பட்டது. 12 மனுக்கள் மறுவிசாரணைக்காக அனுப்பப்பட்டது. 32 மனுதாரர்கள் வரவில்லை.
மேற்படி ஒவ்வொரு வாரமும் நடைபெறும் சிறப்பு குறைதீர்ப்பு முகாமை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணித்து. பொது மக்களின் குறைகளை விரைவில் களைய காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு அறிவுரைகளை வழங்கினார்.