மா.செ.விற்கு மல்லுகட்டும் திருச்சி அதிமுக புள்ளிகள் !

0

மா.செ.விற்கு மல்லுகட்டும் திருச்சி அதிமுக புள்ளிகள் !

 

ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என இருவேறு துருவங்களாக பிரிந்து, அதிமுக என்ற கட்சியானது அதன் எதிர்காலத்தை எப்படி தக்கவைத்துக் கொள்ளப் போகிறது என்ற பதைபதைப்பு ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் மில்லியன் டாலர் கேள்வியாகி இருக்கிறது.

 

‘’கெடக்குறது கெடக்கட்டும்… கிழவியை தூக்கி மனையில வையி’’ என்ற சொலவடைக்கு பொறுத்தமாக, “கட்சி எதிர்காலத்தை பத்தி என்ன பேச்சு… அடுத்த திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர் நான் தான்… அதை பாருங்க மொதல்ல..” என்ற ரீதியில் திருச்சி மாவட்ட ர.ர.க்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆவர்த்தனம் நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மாவட்ட அதிமுகவானது மாநகர் மாவட்டம், வடக்கு, தெற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மாநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும், வடக்கு மாவட்டச் செயலாளராக மு.பரஞ்ஜோதியும், தெற்கு மாவட்டச் செயலாளராக ப.குமாரும் உள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

trichy Admk
trichy Admk

அதிமுகவின் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணி மோதலில் பெரும்பான்மையான அதிமுகவினர் ஈ.பி.எஸ். அணியில் இருப்பதால் மாவட்டங்களிலும் ஈ.பி.எஸ். ஆதரவாளர்களே காலரை தூக்கிவிட்டு வலம் வருகின்றனர். பொதுக் குழுவிற்கு பின்பு திருச்சி மாவட்டத்தில் வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக கூட்டம் போட்ட மா.செ. பரஞ்ஜோதி, “நாங்கள் எடப்பாடியாருக்கு ஆதரவு” என வெளிப்படையாக பிரகடனப்படுத்திக் கொண்டனர். இதே போல் தெற்கு மாவட்ட மா.செ. குமார் அணியும், “நாங்களும் ஈ.பி.எஸ். ஆதரவு” என தெரியப்படுத்திக் கொண்டனர்.

 

திருச்சி மாவட்ட அதிமுகவில் உள்ள 18 பொதுக் குழு உறுப்பினர்களில் 14 பேர் ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள். மீதமுள்ள நால்வர் ஓ.பி.எஸ்.ஸிற்கு ஆதரவானவர்கள். அந்த நால்வரில் ஒருவர் தான் மாநகர் மாவட்டச் செயலாளராக உள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். அமைச்சராக இருந்த போதே தன்னுடைய மகன் ஜவஹருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வாங்கிட பகிரத பிரயத்தனம் செய்து பார்த்தார் அமைச்சர். ஆனாலும் இவரால் முடியவில்லை. காரணம் இவர் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் ஆதரவாளர். வைத்தியலிங்கம் ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளர். இந்த இணைப்புச் சங்கிலி தான் ஈ.பி.எஸ். டேபிளிலில் இருந்து ஜவஹர் மா.செ. பரிந்துரை கடிதம் குப்பைக்கு போகக் காரணமானது.

 

வெல்லமண்டியார் அமைச்சராகவதற்கு முன்பு, தலைமை யாரை மா.செ.வாக அறிவித்தாலும் அவருக்கு முதல் ஆளாக சென்று சால்வை அணிவிப்பது இவர் தான். தனக்கென கோஷ்டி இல்லாமல் தனியாக வலம் வந்த வெல்லமண்டியார் அமைச்சரான பின்பும் தனக்கென கோஷ்டி வைத்துக் கொள்ளாமல் இருக்கிறாரே தவிர அவரது ஒரே குறிக்கோள் தனக்குப்பின்பு தன் வாரிசு அதிமுகவின் முக்கிய பதவிக்கு வர வேண்டும் என்ற ஒற்றை ஆசையை தவிர அவருக்கு வேறு ஒன்றும் இல்லை. இப்போதும் கூட அவர் தன்னை ஓ.பி.எஸ். ஆதரவாளர் என்று கூறிக்கொண்டாலும் மாநகர் முழுக்க ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். என இருவரின் படம் போட்டு, ‘இணைந்தே செயல்படுவோம்’ என்ற கோரிக்கையுடன் போஸ்டர் அடித்து, யார் பக்கம் கட்சி சென்றாலும் முதல் சால்வை நம்முடையதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அடக்கி வாசித்து அரசியல் செய்து வருகிறார்.

 

வடக்கு மா.செ. பரஞ்ஜோதி, ஆரம்பத்தின் ஓ.பி.எஸ். ஆதரவாளர் என்று அடையாளத்தோடு மா.செ. ஆனாலும் பின்பு தன்னை ஈ.பி.எஸ். ஆதரவாளர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டதோடு சரி.. வேறு எந்த மாவட்ட அரசியல் வம்புதும்பிற்கும் போவதில்லை. வருகின்ற பஞ்சாயத்துகளை செவ்வனே செய்து வருகிறார்.

 

4 bismi svs

அடுத்த நிலையில் உள்ள தெற்கு மா.செ. குமாரோ, “மாநகர் மாவட்டம் வெல்லமண்டி நடராஜன் ஓ.பி.எஸ். பக்கம் இருப்பதால் அவரை வெளியேற்றிவிட்டு, மாநகர் மாவட்டத்தையும் எனக்கு கூடுதல் பொறுப்பாக கொடுங்கள்” என்று ஈ.பி.எஸ்.ஸிடம் கோரிக்கை விடுத்து வருகிறார். சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி பரபரப்பு ஏற்படுத்தியவர் ப.குமார். திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்து யார் அரசியல் செய்கிறார்களோ அவர்கள் தான் எல்லாரோலும் பார்க்கப்படுபவர்.  அத்தோடு வைத்தியலியங்கத்திற்கு எதிர் அரசியல் செய்து வருவதால் எடப்பாடியின் குட்புக்கிலும் இருக்கிறார்.

 

இப்போதைக்கு வெல்லமண்டியார் பதவி பணால் ஆனால் அங்கு பட்டா போட்டு அமர்வது யார் என்ற குஸ்தி தான் பலமாக எதிரொலிக்கிறது. குறிப்பாக இந்த குஸ்தி களத்தில் ஆவின் கார்த்திகேயன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன், முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினரும், முன்னாள் புறநகர் மாவட்ட செயலாளராக வலம் வந்தவருமான ரத்தினவேலு, முன்னாள் அமைச்சர் சிவபதி என வரிசைகட்டி நிற்கின்றனர்.

 

கட்சியில் சீனியரான ரத்தினவேலு, எம்.ஜி.ஆர். மறைந்த போது உருவான ஜா., ஜெ., அணியில் இவர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக செயல்பட்டவர் என்பதால் ஜெ.வின் குட்புக் லிஸ்டில் இருந்தவர். புறநகர் மாவட்டச் செயலாளராக அவருக்கு பதவி கொடுத்த ஜெயலலிதா., சீனியரான ரத்தினவேலுவை மாவட்ட அரசியலில் இருந்து விலக்கி ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். கோஷ்டி உருவாக்காமல், எதிர்கட்சிகளிடம் விலை போகாமல் இத்தனை ஆண்டுகள் கட்சிக்கு விசுவாசமாக செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அதிமுகவில் ஒருவர் ரத்தினவேலு மட்டும் தான்.

admk Trichy
admk Trichy

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சீட் கிடைக்காமல் போனதால் ஈபி.எஸ். மீது கடுப்பாகி ஓபிஎஸ்ஸிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் முன்னாள் அமைச்சர் சிவபதி, தற்போது ஈபிஎஸ். கை ஓங்குவதை கண்டு, “ஈபிஎஸ். என் மாமா… அவர் எனக்கு தான் மா.செ. பதவி வழங்குவார்..” என உறவுமுறை கூறிக் கொண்டு அவரும் இந்த போட்டி வரிசையில் நிற்கிறார். “மாநகருக்குள் வீடு இருப்பதால் எனக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி கொடுங்கள்” என வீட்டை ஒரு தகுதியாக காண்பிப்பது இவரின் அரசியல் காமெடி.

 

அதிமுகவின் மாநில இளைஞரணி இணைச் செயலாளரான ஜெ.சீனிவாசன்.

ஆரம்பத்தில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்ட உடன் கவுன்சிலரானவர். அதிமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு அடுத்த பவர்ஃபுல்லான பதவி அம்மா பேரவை மா. செ. தான். ஜெ. காலத்தில் பத்தாண்டுகள் தொடர்ந்து அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளராக வலம் வந்தவர் ஜெ.சீனிவாசன். இரண்டு முறை மாநகராட்சி கவுன்சிலர், அதில் கோட்டத் தலைவராக, துணை மேயராக செயலாற்றியவர். அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் தன்னை இணைத்துக்  கொண்டு தேர்தல் நேரத்தில் மீண்டும் அதிமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். இவருக்கு சட்டமன்ற வேட்பாளர் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், கட்சி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்கு நியாயமாக உழைத்து வெற்றி பெற வைத்தவர்.

 

“அடுத்த மா.செ. நான் தான்… அடுத்த மா.செ. நான் தான்”… என பத்தாண்டுகளாக தூக்கத்தில் கூட சொல்லிக் கொண்ட வந்தவர் ஆவின் கார்த்திகேயன்.  ஆரம்பகாலகட்டத்தில் திமுக ஆட்சியின் போது அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மறைந்த ராமஜெயத்துடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். இன்றளவும் கொடுக்கல் வாங்கல் பிசினஸ் பந்தத்தை தொடரும் ஆவின் கார்த்திகேயன் அதிமுக ஆட்சியின் போது கிடைத்த மீண்டும் தன்னை அதிமுககாரன் எனக் காட்டிக் கொண்டு அடுத்த மா.செ. நான் என்று மாநகர் முழுவதும் கோஷ்களை உருவாக்கி கொண்டே ஆவின் சேர்மன் பதவி பெற்று பெருமளவு வசதியும் பெற்று, சினிமா தொழிலும் இறங்கினார்.

 

இப்போது ஈ.பி.எஸ்.ஸிற்கு ஆதரவாக திருச்சி மாநகர் மாவட்டத்தில் அதிமுக ர.ர.க்களை ஈ.பி.எஸ். பக்கம் அழைத்துச் செல்ல வைட்டமின் பா.வை. வாரிஇறைத்து பல்வேறு பணிகளையும், பகிரங்கமாக செய்து வருகிறார். கட்சியில் அதிகாரபூர்வமாக எந்தவித பொறுப்பும் வழங்காத போது தனியாக கட்சிக்கென அலுவலகம் திறந்து அலப்பரை செய்து வருகிறார்.

 

திருச்சி மாநகரை பொறுத்தவரை நீண்ட அரசியல் அனுபவமும், ஆளும் கட்சி அமைச்சகள்களான கே.என். நேரு, அன்பில் மகேஸ் ஆகியோருக்கு எதிர் அரசியல் செய்யும் ஒருவரையே மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என்று திருச்சி அதிமுக தொண்டர்களின் ஒட்டு மொத்த விருப்பமாக உள்ளது. எடப்பாடியார் என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

 

 

 

 

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.